ஜப்பான் நிறுவனத்தின் புதிய பறக்கும் கார் வெற்றிகரமாக சோதனை... குறிப்பிடத்தக்க விஷயம் என்ன தெரியுமா?
ஜப்பான் நிறுவனத்தின் பறக்கும் கார் முதல்முறையாக பறக்கவிடப்பட்டு வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. உலக அளவில் ஏராளமான பறக்கும் கார் திட்டங்கள் நடந்து வந்தாலும், இந்த பறக்கும் கார் சோதனையில் குறிப்பிடத்தக்க சாதனையாக ஒன்று தெரிவிக்கப்படுகிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

நகர்ப்புறங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு மாற்றுத் தீர்வாக பறக்கும் கார்கள் கருதப்படுகின்றன. தற்கால போக்குவரத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, பறக்கும் கார்களை உருவாக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.

மேலை நாடுகளில் சில நிறுவனங்கள் பறக்கும் கார் திட்டத்தை இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், தற்போது ஜப்பான் நாட்டை சேர்ந்த ஸ்கைட்ரைவ் என்ற நிறுவனம் பறக்கும் கார் உருவாக்கத் திட்டத்தில் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது.
ஸ்கைட்ரைவ் நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய பறக்கும் கார் முதல்முறையாக பறக்கவிடப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட சோதனை தளத்தில், ஸ்கைட்ரைவ் நிறுவனத்தின் பறக்கும் கார் தரையிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை மேல் எழும்பி 4 நிமிடங்கள் வரை பறந்தது.

மேலும், பார்ப்பதற்கு சினிமாவில் வரும் வித்தியாசமான பைக் போன்று தோற்றமளிக்கும் இந்த பறக்கும் காரில் மனிதர் ஒருவர் அமர்ந்து பறந்ததும் குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.

வரும் 2023ம் ஆண்டு இந்த புதிய பறக்கும் கார் வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேநேரத்தில், பாதுகாப்பு விஷயங்கள் தொடர்ந்து சவாலாக இருப்பதாக ஸ்கைட்ரைவ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்கைட்ரைவ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டோமோஹிரோ புகுஸவா கூறுகையில்," உலக அளவில் 100க்கும் மேற்பட்ட பறக்கும் கார் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆனால், மனிதர் ஒருவர் அமர்ந்து பயணித்த ஒரே பறக்கும் கார் மாடலாக எங்களுடையதை கருதலாம்.

அதிகபட்சமாக 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே பறக்கும் திறனை கொண்டுள்ளது. ஆனால், இதனை 30 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டதாக விரைவில் மேம்படுத்தப்படும். பலர் இந்த பறக்கும் காரில் பறந்துவிட விருப்பம் தெரிவித்து வருகின்றனர். சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

இந்த பறக்கும் கார் இருந்த இடத்தில் இருந்தே அப்படியே மேல் எழும்புவதற்கும், அதேபோன்றே தரை இறங்குவதற்கான தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. ஓடுபாதை தேவையில்லை என்பது இதன் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. வீட்டில் இருந்து அலுவலகம் செல்லும் பெரும் தொழிலதிபர்களுக்கு இது சிறந்ததாக அமையும்.


Click it and Unblock the Notifications








