காற்று மாசை கட்டுப்படுத்தும் சாதனத்தை கண்டுபிடித்த இந்திய நிறுவனம்!
வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையை, தொழிற்சாலை மை-யாக மாற்றும் புதிய சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது குறித்த தகவல்களை காணலாம்.
வாகனங்கள் என்பது மனித தேவைக்கு இன்றியமையாததாய் மாறிவிட்ட இக்காலத்தில், அதன் காரணமாக வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் புகை மாசு, சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி, மனித வாழ்வியலின் இருப்பிற்கே உலை வைத்து விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட காற்று மாசை கட்டுப்படுத்த, இந்திய நிறுவனம் தயாரித்துள்ள சாதனம் ஒன்று வரப்பிரசாதமாக அமையப்போகிறது.

இந்தியா மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் வாகனங்கள் வெளியிடும் கார்பன் துகள்கள் காரணமாக நாம் சுவாசிக்கும் காற்றானது விஷமாக மாறி வருகிறது. உலகிலேயே மக்கள் தொகையில் இரண்டாமிடம் வகிக்கும் இந்தியாவின் நிலையோ மிகவும் கவலைக்குரியதாய் மாறி வருகிறது.

உதாரணமாக, இந்திய வரலாற்றிலேயே இல்லாத வகையில், டெல்லியில் காற்று மாசு உச்சத்துக்கு சென்றது. பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் முகமூடி அணிந்தே வெளியில் வரும் நிலை ஏற்பட்டது. மொத்தத்தில் நாட்டின் தலைநகரமே முடங்கியது. டெல்லி மட்டுமல்ல விரைவில் மற்ற நகரங்களும் ஆபத்தான சூழ்நிலையை சந்திக்க தயாராகிக்கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் மட்டும் 2 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் இயங்குவதாக சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. ஆக, வாகனங்கள் பல்கி பெருகிவருவது மனித இனத்திற்கே எதிராக மாறி வருகிறது. இதனை தடுக்கும் முயற்சிகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் நடந்து வருகிறது.

தற்போது, புகை மாசை எதிர்கொள்ளும் விதமாக பெங்களூரூவில் செயல்படும் ஒரு நிறுவனம் ஒன்று ஒரு சிறிய சாதனத்தை தயாரித்துள்ளது. இச்சாதனம் வாகனங்கள் வெளியிடும் புகையை தொழிற்சாலையில் பயன்படுத்தக்கூடிய ‘மை-யாக மாற்ற உதவுகிறது.

எவ்வாறு வேலை செய்கிறது?
‘Kaalink' எனப் பெயரிடப்பட்ட இச்சாதனம், வாகனங்களில் புகை வெளியாகும் சைலன்சர் பைப்பில் பொருத்தக்கூடியதாகும். வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில் உள்ள கார்பன் துகள்களை இது சேகரித்து வைத்துக்கொள்கிறது.

சேகரித்து வைத்துக்கொண்ட கார்பன் துகள்களை வைத்து இந்நிறுவனத்தார் தொழிற்சாலைகளில் பயன்படும் கருப்பு மையை தயாரிக்கின்றனர். இது சுற்றுச்சூழல் கேட்டை தடுக்க உதவுகிறது.

இச்சாதனம் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு வெளியேறுவதை கட்டுப்படுத்துவதில்லை, ஆயினும் நச்சுத்தன்மை கொண்ட கார்பன் துகள்களை மட்டும் தக்கவைத்துக்கொள்கிறது. இந்த கார்பன் துகள்கள் மிக மோசமான பிஎம் 2.5 அளவு நச்சுத்தன்மை கொண்டதாகும்.

இந்த சாதனம் பொருத்தப்பட்ட வாகனன், 45 நிமிடங்கள் இயங்கும் போது, சேகரிக்கப்படும் கார்பன் துகள்களைக் கொண்டு 30 மில்லி லிட்டர் மையை தயாரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சாதனம் மீண்டும் பயன்படுத்தக்கூடியதாகும்.


Click it and Unblock the Notifications








