போலீஸார்களே இப்படி செய்யலாமா? இசுஸு வாகனத்தை வாங்கி, சர்ச்சையில் சிக்கிய கர்நாடக போலீஸார்!!
கர்நாடகா போலீஸாரின் ரோந்து வாகனங்களாக இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் பிக்அப் ட்ரக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த வாகனங்களில் சட்ட விரோதமான புல் பார்கள் பொருத்தப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பொதுவாக பிக்அப் ட்ரக் வாகனங்களை ரோந்து பணிக்காக அமெரிக்க போலீஸார் தான் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்தியாவிலும் இது அதிகரித்து வருகிறது. இந்த வகையில் நமது அண்டை மாநில கர்நாடக போலீஸார் இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் பிக்அப் ட்ரக்குகளை வாங்கியுள்ளனர்.

இந்த இசுஸு வாகனத்தை பெற்ற தாவங்கரே நகர போலீஸார் அதில் கம்பீரமாக உலா வரும் வீடியோவினை தான் கீழே பார்க்கிறீர்கள். இந்த வீடியோ மஞ்சுநாதா கரிகி (Manjunatha Karigi) என்கிற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், போலீஸாரின் மூன்று இசுஸு வி-க்ராஸ் வாகனங்கள் புதிய ஆக்ஸஸரீகளுடன் அதிகளவில் மாடிஃபை செய்யப்பட்டுள்ளதை பார்க்கலாம். குறிப்பாக பம்பர்கள் மற்றும் புல்பார்கள் உடன் இவை பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமான வாகனங்களாக காட்சியளிக்கின்றன. ஆனால் இவ்வாறு வாகனங்களில் புல்பார்கள் பொருத்துவது சட்ட விரோதமானதாக பார்க்கப்பட்டு வருகிறது.

புல்பார்களினால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், இதனால் பொது சாலைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் புல்பார் பொருத்துவது சட்ட விரோதமானது என சில வருடங்களுக்கு முன்பே மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து இருந்தது.

சாலையில் செல்லும் மற்ற வாகனங்கள் மற்றும் பாதசாரிகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பது மட்டுமின்றி, புல்பார்கள் வாகனங்களின் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாட்டிலும் தலையிட வாய்ப்புள்ளது.

அதாவது புல்பார்கள் பெரிய விபத்தை கூட சிறிய விபத்து போல் காட்டும். இதனால் வாகனத்தில் காற்றுப்பைகள் (ஏர்பேக்குகள்) சரிவர செயல்படாமல் போகக்கூடும். அதேநேரம் ஒன்னும் இல்லாத சிறிய விபத்தை பெரிய விபத்தாகவும் புல்பார்கள் மாற்றலாம்.

இதன் காரணமாக பெரிய பள்ளத்தில் வாகனம் இறங்கி ஏறினால் கூட காற்றுப்பைகள் விரிவடைந்துவிடும். காற்றுப்பைகள் ஒரு முறை விரிந்தால் மறுபடியும் அதனை சுருட்டி உள்ளே வைப்பதற்கு பெரிய தொகை செலவாகும் என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

ஒருவேளை காற்றுப்பைகள் சரியான நேரத்தில் விரிவடையவில்லை எனில், அதனால் உயிர் பலிகள் ஏற்படலாம். அப்படியென்றால் புல்பார்கள் பொருத்தவே கூடாதா? அப்படி இல்லை, பிளாஸ்டிக் அல்லது ரப்பரால் தயாரிக்கப்பட்ட புல்பாரை வாகனத்தில் சட்டத்திற்கு உட்பட்டு பொருத்தலாம்.

ஆனால் இவ்வாறான புல்பார்கள் மிகவும் அரிதாகவே சந்தையில் விற்பனைக்கு வருகின்றன. மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களை சாலையில் பார்த்தால் போலீஸார் அதன் உரிமையாளரின் மீது அபராதத்தை விதிப்பர். போலீஸாரே இப்படி செய்தால் என்ன செய்வது?


Click it and Unblock the Notifications








