சூப்பர்... ஸ்கூட்டரில் ரிஸ்க் எடுத்து 860 கிமீ பயணம்... நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கான்ஸ்டபிள்
ஸ்கூட்டரில் ரிஸ்க் எடுத்து 860 கிலோ மீட்டர்கள் பயணம் செய்த போலீஸ் கான்ஸ்டபிளுக்கு இந்தியா முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) என்ற கண்ணுக்கே தெரியாத கிருமி ஒட்டுமொத்த உலகத்தையும் தற்போது ஆட்டி படைத்து வருகிறது. சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளே கோவிட்-19 வைரஸை எதிர்கொள்ள முடியாமல் சரணடைந்துள்ளன. போதாக்குறைக்கு இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளையும் கோவிட்-19 ஒரு கை பார்த்துள்ளது.

இந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக, ஏப்ரல் 14ம் தேதி வரை மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியிருந்தது. ஆனால் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால், வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் இருக்கும் பட்சத்தில் மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும். ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏராளமானோர் வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் சிக்கி கொண்டுள்ளார். ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் அவர்கள் வீடு திரும்ப காத்து கொண்டுள்ளனர்.

அதே சமயம் இன்னும் சிலரோ, தேவையான மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்காக காத்திருக்கின்றனர். அப்படி காத்திருக்கும் ஒரு நோயாளிக்கு, கர்நாடகாவை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தற்போது உதவி செய்துள்ளார். அந்த நோயாளிக்கு தேவைப்பட்ட மருந்தை கொடுப்பதற்காக, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை அந்த போலீஸ் அதிகாரி 860 கிலோ மீட்டர்கள் ஓட்டியுள்ளார்.

முன்பின் தெரியாத ஒரு நோயாளிக்கு உதவி செய்வதற்காக, 860 கிலோ மீட்டர்கள் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற அந்த போலீஸ் அதிகாரிக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அந்த நல்ல மனிதரின் பெயர் குமாரசாமி. பெங்களூர் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அவர் ஹெட் கான்ஸ்டபிளாக வேலை செய்து வருகிறார். குமாரசாமிக்கு தற்போது 47 வயதாகிறது.

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு மருந்துகள் தேவைப்படும் செய்தியை குமாரசாமி பார்த்துள்ளார். அந்த நோயாளி கர்நாடகாவில் உள்ள ஒரு செய்தி சேனலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். இந்த செய்தியை பார்த்த குமாரசாமி, நேராக அந்த தொலைக்காட்சி அலுவலகத்திற்கு சென்று, அந்த நோயாளியின் தொலைபேசி எண்ணை பெற்றார்.

இதன்பின் அந்த நோயாளியுடன் பேசிய குமாரசாமி, அவருக்கு தேவைப்படும் மருந்து பற்றி கேட்டறிந்தார். இந்த தொலைபேசி உரையாடல் மூலமாக, பெங்களூர் இந்திரா நகர் பகுதியில் இருக்கும் டிஎஸ் ஆராய்ச்சி மையத்தில், அந்த நோயாளிக்கு தேவைப்படும் மருந்து கிடைக்கும் தகவல் ஹெட் கான்ஸ்டபிள் குமாரசாமிக்கு தெரியவந்தது.

எனவே அலுவலகம் முடிந்த பிறகு, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை எடுத்து கொண்டு, மருந்து வாங்குவதற்கு அவர் டிஎஸ் ரிசர்ச் சென்டருக்கு சென்றார். அதன்பின் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதற்காக அவர் மீண்டும் அலுவலகம் வந்தார். உயர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைத்தபின், கர்நாடகாவில் உள்ள தர்வாடு எனும் நகரை நோக்கி புறப்பட அவர் ஆயத்தமானார்.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இருந்து சுமார் 430 கிலோ மீட்டர்கள் தொலைவில் தர்வாடு உள்ளது. ஆனால் குமாரசாமியின் குடும்பத்தினரோ ரிஸ்க் எடுக்க வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. எனினும் நோயாளிக்கு மருந்துகளை சரியான நேரத்தில் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்பதில் குமாரசாமி உறுதியாக இருந்தார்.

இதன்படி மருந்துகளை கொடுப்பதற்காக, தனது வீட்டில் இருந்து அதிகாலை 4 மணியளவில் அவர் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் புறப்பட்டார். மதியம் 2.30 மணியளவில் அவர் அந்த நோயாளியின் வீட்டை அடைந்தார். இந்த பயணத்தின்போது வாட்டர் பாட்டில் மற்றும் கொஞ்சம் பிஸ்கட் பாக்கெட்கள் ஆகியவற்றை மட்டுமே குமாரசாமி எடுத்து சென்றார்.

இப்படி ரிஸ்க் எடுத்து சென்று நோயாளிக்கு மருந்தை கொடுத்தபின் அங்கிருந்து மாலை 4 மணியளவில் அவர் புறப்பட்டார். இதன்பின் இரவு 10.30 மணியளவில் அவர் சித்ராதுர்கா வந்தடைந்தார். அங்குள்ள தீயணைப்பு துறை அலுவலகத்தில் அவர் இரவை கழித்தார். இதன்பின் மறுநாள் காலை 5.30 மணியளவில் மீண்டும் பயணத்தை தொடங்கிய அவர், காலை 10.30 மணியளவில் வீட்டை வந்தடைந்தார்.

கொரோனா வைரஸ் அச்சத்திற்கு மத்தியில், நோயாளிக்கு தேவையான மருந்தை டெலிவரி செய்வதற்காக, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில், ஒட்டுமொத்தமாக 860 கிலோ மீட்டர்கள் பயணம் செய்த குமாரசாமி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் பயணத்தை முடித்து திரும்பிய பின், உயரதிகாரிகள் அவரை பாராட்டியுள்ளனர்.

ஸ்கூட்டரில் இவ்வளவு தூரம் பயணிப்பது சாதாரணமான விஷயம் கிடையாது. ஓரளவிற்கு வசதிகள் நிறைந்த காரில், 860 கிமீ பயணித்தாலே பலருக்கு அலுப்பு தட்டி விடும். அசதி போன்ற பிரச்னைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். ஆனால் யாரென்றே தெரியாத ஒருவருக்கு, உயிர் காக்கும் மருந்தை கொடுப்பதற்கு, சாதாரண ஸ்கூட்டரில் இவ்வளவு தூரம் பயணித்த குமாரசாமி பாராட்டப்பட வேண்டியவர்தான்.


Click it and Unblock the Notifications








