டூ-வீலரின் இந்த பகுதியில் குட்டீசுகளை அமர வைத்தால் நடவடிக்கை பாயும்... அதிரடி உத்தரவு!
பைக் மற்றும் ஸ்கூட்டர்களில் குறிப்பிட்ட இடங்களில் சிறுவர்களை அமர வைத்தல் அல்லது நிற்க வைத்து வாகனத்தை இயக்கினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலக நாடுகளில் பார்க்க முடியாத சில விநோதமான செயல்களையெல்லாம் நமது இந்திய சாலைகளில் நம்மால் பார்க்க முடியும். குறிப்பாக போக்குவரத்து விதிமீறல்கள் இல்லாத சாலையைப் பார்ப்பதே இங்கு மிக கடினம்.
அந்தவகையில், பல்வேறு விதமானபோக்குவரத்து விதமீறல்களை வாகன ஓட்டிகள் தினந்தோறும் அரங்கேற்றி வருகின்றனர். இது அத்துறைச் சார்ந்த அதிகாரிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

குறிப்பாக, விதிமீறல்களினால் அரங்கேறும் விபத்து சம்பவங்களும், உயிரிழப்புகளும் புதிய இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றன. ஆகையால், இதனைக் கட்டுபடுத்துவதில் ஒவ்வொரு மாநில அரசும் அதிதீவிரம் காட்டி வருகின்றது.
அந்தவகையில், மிக அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற வகையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஆப்பு வைக்கின்ற வகையிலான அறிவிப்பை கேரள மாநில அரசு வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, குழந்தைகளை விபத்துகளில் இருந்து காக்கும் விதமாக அம்மாநில போக்குவரத்துத்துறை புதிய உத்தரவு ஒன்றை வழங்கியிருக்கின்றது.
அந்த அறிவிப்பின்படி, "பைக்குகளின் பெட்ரோல் டேங்க் மற்றும் ஸ்கூட்டர்களின் கால் வைக்கும் இடம் ஆகிய பகுதிகளில் சிறுவர்களை அமர வைத்தோ அல்லது நிற்க வைத்தோ பயணிப்பது தண்டனைக்குரிய குற்றம்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களை இதுபோன்று வாகனத்தில் அழைத்து செல்வது பாதுகாப்பற்ற ஓர் முறையாகும். மேலும், பேருந்துகளில் ஃபுட்-போர்டு பயணத்தை மேற்கொள்வதைக் காட்டிலும் இதில் அதிக ஆபத்து காணப்படுவதாக சமூக நல பாதுகாப்பு ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பொதுவாக இருசக்கர வாகனத்தின் பின் பக்கம் அமர்ந்து செல்லும்போதே பல்வேறு விதமான ஆபத்துகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், துளியளவும் பாதுகாப்பு இல்லாத, அமர்வதற்கு சற்றும் உகந்த அமைப்பைக் கொண்டிராத பெட்ரோல் டேங்க்குகள் கூடுதல் ஆபத்தை விளைவிக்கும் வகையிலேயே இருக்கின்றன. இதேபோன்று, ஸ்கூட்டரின் கால் வைக்கும் பகுதியும் மிகுந்த ஆபத்தானவையாக இருக்கின்றது.
இதுமட்டுமின்றி, முன்பக்கத்தில் சிறுவர்களை அமர வைப்பதனால் வாகன ஓட்டிகள் பைக்கை கட்டுபடுத்துவதில் சற்றே சிரமம் காண்கின்றனர்.

தொடர்ந்து, சில நேரங்களில் சிறுவர்கள் செய்வதறியாது வாகனத்தைக் கட்டுபடுத்த முற்படுகின்றனர். இது குழந்தைக்கு பேராபத்தை விளைவிக்கும். மேலும், மற்றவர்களுக்கும் பேராபத்தான சூழ்நிலையை இது உருவாக்குகின்றது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையைக் குறைக்கும் விதமாக கேரள மாநில அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதேசமயம், பெட்ரோல் டேங்கின் மீது சிறுவர்களை அமர வைத்தோ அல்லது நிற்க வைத்தோ பயணிக்கும்போது வேறுமாதிரியான ஆபத்துகளும் ஏற்படுகின்றன. இதனை உறுதிசெய்கின்ற வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னை பெரம்பூரில் ஓர் சம்பவம் அரங்கேறியது.

இதுகுறித்து மலையாள மொழி பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட தகவலின் புகைப்படம்.
இந்த சம்பவத்தில் சுமார் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன், அவருடைய பெற்றோருடன் உணவருந்துவதற்காக அதே பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார்.

உணவு முடிந்த பின்னர் தந்தை, தாய் என அனைவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அவ்வாறு, வரும்போது சிறுவன் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது நின்றவாறு வந்துள்ளார். பைக் பெரம்பூர் மேம்பாலத்தில் ஏறியபோது திடீரென தந்தையின் மீது கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சரிந்தான். செய்வதறியமால் திணறி வாகனத்தை நிறுத்திய தந்தைக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

சில நொடிகளுக்கு பின்னரே தனது மகன் பட்டம் விடும் மாஞ்சா நூலினால் கழுத்தறுபட்டு நிலைக்குலைந்தான் என்பது தெரியவந்தது. இந்த விபரீதமான சம்பவத்தில் சிறுவன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபோன்று, பல்வேறு விதமான ஆபத்தான சம்பவங்கள் சிறுவர்களை முன் பக்கத்தில் அமரவைத்து பயணிக்கும்போது அரங்கேறுகின்றது.

இதுமட்டுமின்றி, சில நேரங்களில் போதுமான பிடிமானம் இல்லாத காரணத்தாலும் முன்பக்கத்தில் பயணிக்கும் சிறுவர்கள் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைகின்றனர். இது அவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடுகின்றது. இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்க்கும் விதமாகவே கேரள அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
Image Courtesy: Halehalli Kishore Gowda/Automotive Forum


Click it and Unblock the Notifications








