கேடிஎம் ட்யூக்390 பைக்கில் இங்கிலாந்து வரை சாகசப் பயணம் மேற்கொண்ட இந்தியர்!
கேடிஎம் ட்யூக்390 பைக்கிலேயே இந்தியா முதல் இங்கிலாந்து வரை சாகசப் பயணம் சென்றுள்ளார் இந்தியர் ஒருவர். அது குறித்த தகவல்களை காணலாம்.
இருசக்கர வாகனத்தில் நெடுந்தூர பயணம் அல்லது உலகப் பயணம் மேற்கொள்வதென்பது பலருக்கும் ஒரு கணவாக இருக்கும். பலரும் அதற்காக ஏங்கினாலும் அன்றாட வாழ்க்கை அதற்கு ஆசைப்பட மட்டுமே வைத்துவிடும். பயணம் என்பது வெறும் கணவாகவே மறைந்துவிடும். ஆனால் இங்கு ஒருவர் அதனை நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். இந்தியாவில் ஆரம்பித்த அவரது பைக் பயணம் இங்கிலாந்தில் நிறைவடைந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரோஹித் உபாத்யா, இவர் ஐக்கிய ராஜ்ஜிய நாடுகளில் (United Kingdom) ஒன்றான ஐசில் ஆஃப் மேன் (ISLE OF MAN) நாட்டிற்கு தனது கேடிஎம் ட்யூக்390 பைக்கிலேயே சென்றுள்ளார். இது இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையே உள்ள சிறு தீவு நாடாகும்.

இந்த நாட்டினை அவர் தேர்ந்தெடுத்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. மோட்டார் சைக்கிள் பந்தயங்களுக்கான மெக்கா என செல்லமாக ‘ஐசில் ஆஃப் மேன்' அழைக்கப்படுகிறது. இங்கு நடக்கும் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. எனவே இருசக்கர வாகன பிரியரான ரோஹித் உபாத்யா இங்கு செல்ல தீர்மானித்துள்ளார்.

நெடுந்தூர பயணத்திற்கென பிரத்யேக பைக்குகள் கிடைக்கும் போது, மிகவும் ஆபத்தான மற்றும் அலுப்பை ஏற்படுத்தக்கூடிய இப்பயணத்திற்கு, கேடிஎம்390 ட்யூக் பைக்கை தேர்ந்தெடுக்க யாருமே விரும்பமாட்டார்கள். ஆனால் ரோஹித் தனது ட்யூக்390 பைக்கையே இதற்காக உபயோகப்படுத்த எண்ணி, இதற்கென பிரத்யேகமாக மாற்றியமைத்துள்ளார்.

ஆகாயமார்க்கமாக சென்றால் கூட இந்தியாவிலிருந்து ஏறத்தாழ 8,000 கிமீ தூரம் உள்ள இந்த நாட்டிற்கு, சாலை மார்க்கமாகவே சென்றுள்ளார் இவர். ஆயினும் அண்டை நாடான பாகிஸ்தானில் சாலை மார்க்கமாக பயணிப்பது என்பது அச்சுறுத்தல் நிறைந்தது என்பதால் பாகிஸ்தான் வழியே செல்லாமல் முதலில் நேரடியாக தனது பைக்குடன் கப்பல் மூலமாக ஈரான் சென்றுள்ளார்.

ஈரானின் தெற்கில் உள்ள ‘பந்தர் அபாஸ்' என்ற துறைமுகத்திற்கு சென்று சேர்ந்த இவர், அங்கிருந்து தனது சாலை பயணத்தை மேற்கில் உள்ள துருக்கி நோக்கி தொடங்யுள்ளார்.

இவரின் பயணத்தில் அருகிலிருக்கும் ஈரான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் எல்லை அருகே செல்வதையே தவிர்த்துள்ளார், ஏனெனில் இங்கு தான் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இது தனக்கு பெரும் அச்சுறுத்தல் என்பதால் இவரின் பயணம் துருக்கி நோக்கி சென்றது.

ஆயினும் இவர் துருக்கி சென்ற நேரத்தில் தான் அங்கு அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க சதி நடந்தது. இதிலிருந்து விடுபட நினைத்தவருக்கு அதிர்ஷ்டமும் கைகொடுத்தது, எவ்வித தடங்கலும் இன்றி துருக்கி எல்லை கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைந்தார்.

இவர் சென்று சேர்ந்தது கிரீஸ் நாடு. மேற்கத்திய கலாச்சாரத்தின் அடிதோன்றலாக விளங்கும் கிரீஸ்-ல், பண்டைய சரித்திர புகழ் பெற்ற பல எழில்மிகு தலங்கள் நிறைந்தது. அவற்றை ரசித்துவிட்டு பின் இவர் அல்பேனியா மற்றும் மசிடோனியா ஆகிய நாடுகள் வழியே பயணப்பட்டுள்ளார்.

இவர் பின்னர் அங்கிருந்து கொசொவா, மாண்டிங்ரோ, பாஸ்னியா, குரோசியா, ஸ்லோவெனியா ஆகிய ஐரோப்பாவில் உள்ள அழகான நாடுகளை ரசித்தவாறே கேடிஎம்-ல் பயணித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் ஆல்ப்ஸ் மலை வழியே ஐசில் ஆஃப் மேன் செல்லாமல் மேலும் தனது பயணத்தை நீட்டிக்க எண்ணி, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் போர்சுகல் நாடுகள் வழியே சென்றுள்ளார்.

பின்னர் போர்சுகலில் இருந்து பெல்ஜியம் சென்று அங்கிருந்து நெதர்லாந்து சென்றவர், அங்குள்ள தனது நண்பரை சந்தித்துவிட்டு கடைசியில் அங்கிருந்து ஒரு உல்லாசக் கப்பல் மூலமாக ஐக்கிய ராஜ்ஜியம் (United Kingdom) சென்றுள்ளார்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் அயர்லாந்து
நாடுகள் வழியே பயணப்பட்டு இறுதியில் மோட்டார் சைக்கிள் பந்தயங்களுக்கான மெக்கா என அழைக்கப்படும் ‘ஐசில் ஆஃப் மேன்' சென்று தனது மிக நீண்ட நெடிய பயணத்தை நிறைவு செய்தார்.
கேடிஎம் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள புதிய 2017 ட்யூக்390 பைக்கின் படங்கள்:


Click it and Unblock the Notifications








