18 கோடி ரூபாய் மதிப்புள்ள கார் தீயில் கருகி நாசம்... காரணம் தெரிந்தால் தாங்க மாட்டீங்க...
18 கோடி ரூபாய் மதிப்புடைய கார் தீயில் கருகி நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சாலைகளில் சூப்பர் கார்களை பார்ப்பது என்பதே மிக அரிதான விஷயமாக இருக்கிறது. ஏனெனில் சூப்பர் கார்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அவற்றை பெரும்பாலும் இறக்குமதி செய்துதான் பயன்படுத்த வேண்டியுள்ளது. நிலைமை இப்படி இருக்கையில், இந்த செய்தி உங்களுக்கு நிச்சயம் அதிர்ச்சி அளிப்பதாகதான் இருக்கும்.

ஆம், சூப்பர் கார் ஒன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. அந்த காரின் விலை சுமார் 17.7 கோடி ரூபாய்! பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் செக் குடியரசு நாட்டில் நடைபெற்றுள்ளது. செக் குடியரசு நாட்டில் உள்ள ப்ராக் (Prague) நகரில், சுரங்கப்பாதை ஒன்று இருக்கிறது. இதில், கடந்த ஜனவரி 16ம் தேதியன்று லம்போர்கினி அவென்டெடார் (Lamborghini Aventador) கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு காரில் பற்றிய தீ அணைக்கப்பட்டது.

ஆனால் தீயணைப்பு வீரர்களால் காரை காப்பாற்ற முடியவில்லை. அது முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமாகி விட்டது. பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது இந்த வீடியோ காட்டு தீ போன்று பரவி வருகிறது. தீயில் எரிந்து நாசமானது லம்போர்கினி அவென்டெடார் காரின் லிமிடெட் எடிசன் மாடல் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஒருவர் அந்த காரை வாங்கியுள்ளார். சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் அவர் இந்த காரை வாங்கியுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 17.7 கோடி ரூபாய். இந்த சூப்பர் காரில், 6.5 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 1,250 எச்பி பவரை உருவாக்க கூடிய திறன் வாய்ந்தது.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 62 மைல்கள் (மணிக்கு 100 கிலோ மீட்டர்கள்) என்ற வேகத்தை வெறும் 2.6 வினாடிகளிலேயே எட்டி விடக்கூடிய அளவிற்கு இந்த சூப்பர் கார் திறன் வாய்ந்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலான தகவலாக உள்ளது.
இவ்வளவு விலை உயர்ந்த காரில் தீப்பற்றியது ஏன்? என்பது தொடர்பாக பரபரப்பான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த காரில் தீப்பற்றியதாக செக் குடியரசு நாட்டின் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த காரின் உரிமையாளர், அதனை மாடிபிகேஷன் செய்திருந்தார்.

இந்த காரின் அதிகபட்ச பவரை 515 kW-ல் இருந்து 950 kW-விற்கு அதிகரிக்கும் வகையிலான மாடிபிகேஷனை அதன் உரிமையாளர் செய்திருந்தார். மேன்சரி (Mansory) எனும் நிறுவனத்தால் இந்த மாடிபிகேஷன்கள் செய்யப்பட்டிருந்தன. இது ஜெர்மனியை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற நிறுவனம் ஆகும். லக்ஸரி கார் மாடிபிகேஷன் பணிகளை மேன்சரி நிறுவனம் செய்து வருகிறது.

லக்ஸரி கார்கள் மட்டுமல்லாது, சூப்பர் கார்கள் மற்றும் பைக்குகளையும் மேன்சரி நிறுவனம் மாடிபிகேஷன் செய்து வருகிறது. இவ்வாறு ஹெவியாக செய்யப்பட்ட மாடிபிகேஷன் காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால்தான் லம்போர்கினி அவென்டெடார் கார் தீயில் கருகி நாசமானதாக தீயணைப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவை பொறுத்த வரை வாகனங்களை மாடிபிகேஷன் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தடையை மீறி பலர் வாகனங்களை மாடிபிகேஷன் செய்து கொண்டுதான் உள்ளனர். இதுபோன்ற அபாயங்களை அவர்கள் உணர்வது நல்லது.
Image Courtesy: HZS Praha


Click it and Unblock the Notifications








