குளு குளு ஏசி ஸ்லீப்பர் பஸ்ஸில் ஜம்முனு தங்கலாம்... வாடகை எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க... ஹோட்டல்களுக்கு உதறல்
தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் கொடுப்பதற்கு பதிலாக, மிக மிக குறைவான கட்டணத்தில், ஏசி ஸ்லீப்பர் பஸ்களில் சகல வசதிகளுடன் தங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாதாரண இடங்களை காட்டிலும் சுற்றுலா தலங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் சற்று அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. எனவே குறைவான செலவில் குடும்பத்துடன் சுற்றுலா சென்று விட்டு வர வேண்டும் என நினைப்பவர்கள், தங்கும் வசதிக்காக அதிக தொகையை செலவிட நேரிடுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக புதிய திட்டம் ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள மூணாறு மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியாவில் இருந்து மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் மூணாறுக்கு சுற்றுலா வருகின்றனர். ஆனால் இங்கு தங்கும் விடுதிகளில் சற்று அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதால், நடுத்தர வர்க்க மக்கள், குடும்பத்துடன் மூணாறு சென்று தங்கி விட்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இந்த பிரச்னையை நிவர்த்தி செய்யும் வகையில், தற்போது மூணாறில் 'லாட்ஜ் பஸ்' வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெயரிலேயே இதன் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளலாம். ஆம், இந்த பேருந்தில் நாம் தங்கி கொள்ளலாம். கேஎஸ்ஆர்டிசி எனப்படும் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் (KSRTC - Kerala State Road Transport Corporation) இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் செலுத்தி தங்க முடியாதவர்கள், இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். மிகவும் குறைவான கட்டணமே வசூல் செய்யப்படுகிறது. பயணிகள் தங்குவதற்காக தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருப்பது சாதாரண பேருந்துகள் கிடையாது. எனவே சாதாரண இருக்கையில் எப்படி படுத்து உறங்குவது? என்ற கவலை வேண்டாம்.

இது ஸ்லீப்பர் பேருந்து ஆகும். எனவே சுற்றுலா பயணிகள் சௌகரியமாக படுத்து உறங்க முடியும். அத்துடன் செல்போன்களை சார்ஜ் செய்து கொள்வதற்கான வசதிகளும் இந்த பேருந்தில் உள்ளது. மேலும் நீங்கள் வெளியில் உணவு வாங்கி வந்தால், இந்த பேருந்தில் அமர்ந்தே சாப்பிட்டு கொள்ள முடியும். அதற்கு ஏற்ப டேபிள், குடிநீர், கைகளை கழுவுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இவை எல்லாவற்றையும் விட இந்த பேருந்தில் குளு குளு ஏசி வசதியும் உள்ளது. மூணாறில் நிலவும் குளிருக்கு ஏசி தேவைப்படாது என்றாலும், அந்த வசதியும் இருக்கிறது. இந்த பேருந்தில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 16 பேர் வரை தங்கி கொள்ள முடியும். தற்போதைய நிலையில் 2 ஏசி பேருந்துகள் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இரண்டிலுமே தலா 16 படுக்கைகள் உள்ளன.

இந்த சேவைக்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே பெரும்பாலான நாட்கள், இந்த பேருந்துகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பி விடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இன்னும் கூடுதல் பேருந்துகளை கேஎஸ்ஆர்டிசி இந்த சேவையில் ஈடுபடுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போது சேவையில் உள்ள 2 லாட்ஜ் பஸ்களும் மூணாறில் உள்ள டெப்போவில் நிறுத்தப்பட்டிருக்கும். அங்கு சென்று பயணிகள் தங்கி கொள்ளலாம். விடிந்த பிறகு சுற்றுலா தலங்களை பார்வையிட செல்லலாம். ஆனால் இந்த பேருந்துகளில் கழிவறை வசதி கிடையாது. எனினும் டெப்போவில் உள்ள கழிவறைகளை பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்த பேருந்துகளில் சுற்றுலா பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த பேருந்தில் ஒருவர் ஒரு நாளைக்கு தங்க வெறும் 100 ரூபாய் மட்டுமே வாடகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு படுக்கைக்கான கட்டணம் ஆகும். உதாரணத்திற்கு ஐந்து பேர் குடும்பமாக சென்றால், வெறும் 500 ரூபாயில் தங்கி கொள்ளலாம்.

அதுவே தங்கும் விடுதிகள் என்றால், நிச்சயமாக இதை விட அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் 16 பேர் குடும்பத்துடன் சென்றால், படுக்கைக்கு தலா 100 ரூபாய் என வெறும் 1,600 ரூபாய் கட்டணத்தில் மொத்த பேருந்தையும் வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். பேருந்தில் குடும்பத்துடன் தங்க கூடிய வித்தியாசமான அனுபவமும் இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும்.

9447813851 மற்றும் 04865230201 என்ற எண்கள் மூலமாக, இந்த பேருந்துகளில் படுக்கைகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும். குறைந்த செலவில் மூணாறு சென்று விட்டு வர நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மற்ற மாநிலங்களின் போக்குவரத்து கழகங்களும், இதுபோன்ற திட்டத்தை முன்னெடுக்கலாம்.


Click it and Unblock the Notifications








