தானியங்கி முறையில் கார் டெலிவிரி தரும் எந்திரம்: சிங்கப்பூரில் அறிமுகம்!
தானியங்கி எந்திரம் மூலமாக கார் டெலிவிரி பெறும் வசதி சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
காசு போட்டவுடன் கூல் ட்ரிங்க்ஸ், ரயில் டிக்கெட் போன்றவற்றை வழங்கும் எந்திரங்களை பார்த்திருக்கிறோம். ஆனால், பணத்தை கட்டினால், தானியங்கி முறையில் சூப்பர் கார்களை டெலிவிரி வழங்கும் தானியங்கி எந்திரம் சிங்கப்பூரில் நிறுவப்பட்டு இருக்கிறது. இது குறித்து சுவாரஸ்யத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

சிங்கப்பூரை சேர்ந்த ஆட்டோபான் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் அனைத்து பிராண்டுகளின் பயன்படுத்தப்பட்ட உயர் வகை கார்களை வாங்கி விற்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதுவரையில் சாதாரண ஷோரூம்கள் வாயிலாக கார் விற்பனை செய்து வந்த இந்த நிறுவனம் சமீபத்தில் தானியங்கி முறையில் கார்களை டெலிவிரி வழங்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது.

இதற்காக, 15 அடுக்குகளை கொண்ட பிரம்மாண்ட கட்டடத்தை அமைத்துள்ளது. இந்த பிரம்மாண்ட கட்டடத்தில் பல நிறுவனங்களின் சொகுசு கார்கள் ஒய்யாரமாக நிற்கின்றன. மேலும், 60 வகையான கார்களை இந்த கட்டடத்தில் நிறுத்தி வைக்க முடியும்.

இந்த தானியங்கி கார் டெலிவிரி வழங்கும் வசதி கொண்ட இந்த கட்டடத்தில் போர்ஷே, ஃபெராரி, லம்போர்கினி மற்றும் லம்போர்கினி என பல உயர்வகை சொகுசு கார்கள் டெலிவிரி வழங்கப்படுகின்றன.

வழக்கமாக ஷோரூம்களில் நடைபெறும் கார் விற்பனை நடைமுறை போன்று இல்லாமல், முழுவதும் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக கார் வாங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. மேலும், மொபைல் போன் அப்ளிகேஷன் அல்லது இந்த கட்டடத்தில் வைக்கப்பட்டு இருக்கும் டேப்லெட் கம்ப்யூட்டர் மூலமாக கார் வாங்குவதற்கு தேவையான விபரங்கள் மற்றும் பணத்தை செலுத்தினால் போதும்.

அடுத்த 2 நிமிடங்களில் கார் டெலிவிரி வழங்கப்பட்டு விடும். உலகிலேயே மிகவும் துரிதமான கார் டெலிவிரி வழங்கும் வசதியாக இதனை கூறலாம். வாடிக்கையாளர்களுக்கு இது புதுமையான அனுபவத்தையும் தரும்.

இதுபோன்று தானியங்கி முறையில் கார் டெலிவிரி வழங்கும் நடைமுறை சிங்கப்பூருக்கு வேண்டுமெனில் புதிதாக இருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் கார்வானா என்ற நிறுவனம் ஏற்கனவே இதுபோன்ற தானியங்கி கார் டெலிவிரி வழங்கும் வசதியை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








