திடீரென வீடு கட்டுமான பணியில் குதிக்கும் பிரபல சொகுசு கார் நிறுவனம்... எங்கே கட்டபோகுதுனு தெரியுமா?
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று வீடு கட்டுமான பணியில் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஏறக்குறைய நூறாண்டுகளுக்கும் மேலாக சொகுசு வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது, பென்ட்லீ நிறுவனம். வீடுகளில் மட்டுமே சொகுசு அனுபவம் கிடைக்கும் என்றநிலையை மாற்றி வாகனங்களிலும் அந்த விஷயங்களை தர முடியும் என மாற்றி எழுதிய நிறுவனங்களில் இந்த நிறுவனமும் ஒன்று.

இந்த நிலையில், பென்ட்லீ நிறுவனம் சொகுசு கார்களைப் போன்று அதிநவீன வசதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொகுசு வாகன உற்பத்திக்கு பெயர்போன நிறுவனமாக விளங்கி வரும் பென்ட்லீ அடுக்குமாடி குடியிருப்பை கட்ட இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

பென்ட்லீ ரெசிடென்சஸ் என்ற பெயரிலேயே அடுக்குமாடி குடியிருப்பை பென்ட்லீ கட்ட இருக்கின்றது. ஃப்ளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சன்னி ஐஸ்லெஸ் கடற்கரையிலேய இந்த அடுக்குமாடி சொகுசு கட்டிடம் அமைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கட்டிடத்திற்காக பென்ட்லீ நிறுவனம் டிசெர் டெவலப்மெண்ட் (Dezer Development) மற்றும் சீகர் சூரஸ் ஆர்கிடெக்ட்ஸ் (Sieger Suarez Architects) ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணியை வைத்திருக்கின்றது. இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்தே பென்ட்லீ நிறுவனத்தின் முதல் சொகுசு கட்டுமானத்தை கட்ட இருக்கின்றன.

ஆமாங்க, சொகுசு உற்பத்தியாளர் பென்ட்லீ கட்டிடம் கட்டுவது இதுவே முதல் முறையாகும். எனவேதான் உலகளவில் பென்ட்லீயின் இந்த நடவடிக்கை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது. 60 தளங்கள், 200 வீடுகள் இந்த அல்ட்ரா சொகுசு அடுக்குமாடியில் அமைய இருக்கின்றது.

தன்னுடைய கார்களில் இருப்பதைப் போன்று பல்வேறு சொகுசு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை இந்த குடியிருப்பில் வழங்க இருப்பதாக பென்ட்லீ அறிவித்துள்ளது. சொல்லப்போனால் இதைவிட கூடுதல் லக்சூரி அம்சங்களையும் தான் இந்த குடியிருப்புகளில் வழங்க இருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது.

இந்த சொகுசு இல்லம் கடற்கரைக்கு மிக அருகில் அமைய இருப்பதால் சூரிய உதையம் தொடங்கி பல்வேறு இயற்கை காட்சிகளை தவறாமல் காண முடியும் என பென்ட்லீ கூறுகின்றது. குறிப்பாக, இந்த சொகுசு இல்லம் மிக அமைதியான மற்றும் கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கக் கூடியதாக அமைய இருக்கின்றது.

இதுதவிர, நீச்சல் குளம், உடற் பயிற்சி கூடம், பூங்கா, விளையாட்டு இல்லம் என பல்வேறு சிறப்பு வசதிகளையும் வழங்க இருப்பாத பென்ட்லீ அறிவித்துள்ளது. இதுதவிர, கார் நிறுத்தத்திற்கான தனி இடம் என கூடுதல் சிறப்பு வசதிகளையும் வழங்க இருக்கின்றது பென்ட்லீ.

பென்ட்லீ நிறுவனத்தின் சொகுசு கார்களே பல கோடி ரூபாய் மதிப்பிலானவையாக இருக்கின்றன. ஆகையால், இந்த வீட்டின் விலை எவ்வளவாக இருக்கும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கின்றது. ஆனால், இப்போது வரை அடுக்குமாடி குடியிருப்பின் விலை பற்றிய தகவலை பென்ட்லீ வெளியிடவில்லை.

இருப்பினும், பென்ட்லீயின் சொகுசு வீடுகள் பல கோடி ரூபாய் மதிப்பிலானவையாக மட்டுமே இருக்க முடியும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 2023ம் ஆண்டிலேயே இந்த அடுக்குமாடியின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. 2026ம் ஆண்டிற்கு இதன் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.


Click it and Unblock the Notifications








