83 ஆயிரம் ரூபாயை எண்ணி முடிக்க 3 மணி நேரம்... டீலர்ஷிப் ஊழியர்களை அதிர வைத்த ஆக்டிவா வாடிக்கையாளர்
ஹோண்டா ஆக்டிவா வாடிக்கையாளர் ஒருவர் டீலர்ஷிப் ஊழியர்களை அதிர வைத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய ஆட்டோமொபைல் துறை தற்போது தள்ளாடி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே வாகனங்களின் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து கொண்டுள்ளது. கார், பைக் என எவ்விதமான வாகனமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சோர்ந்து போயுள்ளன.

எனினும் தற்போதைய தீபாவளி பண்டிகை காலம் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சற்றே தெம்பை கொடுத்துள்ளது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் மத்தியில் சற்று தாராளமாக பணம் புழங்கும். எனவே புதிய வாகனங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். இந்த வகையில் புதிய வாகனங்களை வாங்குவதில் தற்போது பலர் மும்முரமாக உள்ளனர்.

இவர்களில் ராகேஷ் குமார் குப்தா என்பவரும் ஒருவர். இவர் மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தனக்கு புதிய ஸ்கூட்டர் ஒன்றை வாங்க வேண்டும் என விரும்பினார். இறுதியாக லேட்டஸ்ட் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை தேர்வு செய்தார். இந்த ஸ்கூட்டரை இவர் தனித்துவமான முறையில் வாங்கியிருப்பது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சட்னாவின் பன்னா நாகா பகுதியில் உள்ள கிருஷ்ணா ஹோண்டா டீலர்ஷிப்பில்தான் ராகேஷ் குமார் குப்தா புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். இந்த ஸ்கூட்டருக்கான தொகையை முழுக்க முழுக்க அவர் காயின்களாக கொடுத்துள்ளார். இதில், பெரும்பாலானவை 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் காயின்கள் ஆகும். இதனால் டீலர்ஷிப் ஊழியர்கள் திகைத்து போய் விட்டனர்.

ராகேஷ் குமார் குப்தா கொடுத்த அனைத்து காயின்களையும் எண்ணி முடிக்க டீலர்ஷிப் ஊழியர்களுக்கு சுமார் 3 மணி நேரம் ஆகியுள்ளது. ராகேஷ் குமார் குப்தா ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டை தேர்வு செய்துள்ளார். இது டிஸ்க் பிரேக்குகள் மற்றும் அலாய் வீல்களுடன் விற்பனைக்கு வருகிறது.

இதன் விலை 83 ஆயிரம் ரூபாய் (ஆன் ரோடு, சட்னா, மத்திய பிரதேசம்). இவ்வளவு பெரிய தொகைக்கு காயின்களாக கொடுத்தால், டீலர்ஷிப் ஊழியர்கள் என்ன செய்வார்கள் பாவம்? இருந்தபோதும் வேறு என்ன செய்வது? நிதானமாக காயின்களை எண்ணி முடித்துள்ளனர். இதற்காக அவர்கள் சுமார் 3 மணி நேரத்தை எடுத்து கொண்டனர்.

நல்ல வேளையாக ராகேஷ் குமார் குப்தா பெரும்பாலும் 5 ரூபாய், 10 ரூபாய் நாணயங்களாக கொடுத்தார். முழுக்க முழுக்க 1 ரூபாய், 2 ரூபாய் நாணயங்களை கொடுத்திருந்தால் டீலர்ஷிப் ஊழியர்களின் நிலைமை என்னவாகியிருக்கும்? ஆனால் ராகேஷ் குமார் குப்தா எதற்காக இப்படி வித்தியாசமான முறையில் காயின்களை கொடுத்து ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை வாங்கினார்? என்பது தெரியவில்லை.

ஒருவேளை வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்தாரா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் இதுபோன்று காயின்களாக கொடுத்து ஸ்கூட்டரை வாங்கும் முதல் நபர் என ராகேஷ் குமார் குப்தாவை கூற முடியாது. ஏனெனில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் இப்படி பணம் செலுத்தி ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளான்.

அந்த சிறுவன் தனது சகோதரிக்கு ஸ்கூட்டியை பரிசாக வழங்கினான். இதற்கான தொகையை அந்த சிறுவன் காயின்களாகவே செலுத்தினான். தனது சகோதரிக்கு பரிசாக இந்த ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்பதற்காக அந்த சிறுவன் தனது பாக்கெட் மணியில் இருந்து சிறுக சிறுக சேர்த்து வைத்த தொகைதான் இது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த சமயத்தில் இந்த சம்பவம் வெகுவாக கவனம் ஈர்த்தது.


Click it and Unblock the Notifications








