ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்த விவசாயிகளின் கண்டுபிடிப்பு... எதிர்க்கும் நெட்டிசன்கள்... ஏன் தெரியுமா?
இந்திய விவசாயிகளின் கண்டுபிடிப்பு ஒன்று ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்துள்ள நிலையில், சமூக வலை தளங்களில் அதற்கு எதிராக கருத்து பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, டிவிட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். அவர் செய்யும் டிவிட்கள் பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும். குறிப்பாக இந்தியர்களின் கண்டுபிடிப்புகள் பலவற்றை தனது டிவிட்கள் மூலமாக அவர் வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டி வருகிறார்.

இந்தியர்கள் மிகவும் புத்தி கூர்மை உடையவர்கள். தங்களது வேலைகளை எளிமையாகவும், விரைவாகவும் முடிப்பதற்கு ஒரு சில கண்டுபிடிப்புகளை அவர் உருவாக்குகின்றனர். இந்த கண்டுபிடிப்புகள் பார்ப்பதற்கு எளிமையாக தோன்றினாலும், அவர்களின் வேலைகளை வேகமாக முடித்து விடும். அப்படி இந்தியர்களின் புத்தி கூர்மையை உணர்த்தும் காணொளிகளை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதியன்று ஆனந்த் மஹிந்திரா ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். இதில், விவசாயிகள் சிலர் மக்காசோளத்தில் இருந்து சோள பற்களை பிரித்து எடுப்பதற்காக பைக்கை பயன்படுத்துவதை நம்மால் பார்க்க முடிகிறது. மக்காசோளத்தில் இருந்து பற்களை பிரித்து எடுக்க உண்மையில் அதிக நேரம் ஆகும்.

ஆனால் பைக்கை பயன்படுத்துவதன் மூலமாக அவர்கள் தங்கள் வேலையை மிக எளிதாகவும், விரைவாகவும் முடிக்கின்றனர். இந்த காணொளாயில் மூன்று விவசாயிகளை நம்மால் பார்க்க முடிகிறது. அவர்கள் பைக்கின் பின் பக்க சக்கரத்தை ஓட விடுகின்றனர். அதன்பின் மக்காசோளத்தை சக்கரத்தில் லேசாக தேய்ப்பதன் மூலமாக, பற்களை மட்டும் தனியாக பிரித்து எடுக்கின்றனர்.

சோள பற்களை பிரித்து எடுப்பதற்கு, பைக்கின் சக்கரத்தில் இருந்து கிடைக்கும் உராய்வை அவர்கள் மூன்று பேரும் பயன்படுத்தியுள்ளனர். இந்த காணொளியில் சென்டர் ஸ்டாண்டு போட்டு பைக் நிறுத்தப்பட்டுள்ளது. பைக்கில் கியரை போட்டு, ஆக்ஸலரேட்டரை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் லாக் செய்வதன் மூலமாக பின் சக்கரத்தை மட்டும் அவர்கள் ஓட செய்திருக்கலாம் என தெரிகிறது.

இந்த காணொளியை வெளியிட்டிருக்கும் பதிவில் ஆனந்த் மஹிந்திரா கூறியிருப்பதாவது: பைக்குகள் மற்றும் டிராக்டர்களை நமது விவசாய சமூகங்கள் எப்படி பல்வேறு வேலைகளை செய்யக்கூடிய இயந்திரங்களாக ஆக்கப்பூர்வமாக மாற்றி வருகின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் காணொளிகளை நான் தொடர்ச்சியாக பெற்று வருகிறேன்.

நான் கனவிலும் நினைத்து பார்த்திராத ஒரு பயன்பாடு இங்கே. இவ்வாறு ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். டிவிட்டரில் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள காணொளி தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த காணொளியை நீங்கள் கீழே காணலாம்.

மக்காசோளத்தில் இருந்து பற்களை தனியாக பிரித்து எடுக்க இந்த விவசாயிகள் பயன்படுத்தியுள்ள ஐடியா நன்றாகதான் இருக்கிறது. ஆனால் இது எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும்? என்பதில் சந்தேகங்கள் உள்ளன. பைக்கின் டயரை பயன்படுத்தி பிரித்து எடுக்கப்படுவதால், அந்த மக்காசோளத்தை சாப்பிடுபவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படலாம் என கருத்து பதியப்பட்டு வருகிறது.

மேலும் இந்த பைக் வெளியிடங்களில் பயன்படுத்தப்படலாம் என்றும், அதனை மீண்டும் சுத்தம் செய்யாமல் மக்காசோள பற்களை பிரித்து எடுக்க பயன்படுத்தப்படலாம் என்றும், சமூக வலை தள வாசிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இதைக்காட்டிலும் மக்காளசோள பற்களை பிரித்து எடுக்க பாதுகாப்பான வழிமுறைகளையும் ஒரு சிலர் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே கூறியதுபோல், ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் இத்தகைய கண்டுபிடிப்புகளின் காணொளிகளை வெளியிடுவது இது முதல் முறை கிடையாது. ஆனால் பாதுகாப்பாக இருக்குமா? என்ற சந்தேகத்தால் இந்த காணொளி கொஞ்சம் எதிர்மறையான கருத்துக்களை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications








