ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்கவேல் மாரியப்பனுக்கு தார் எஸ்யூவி பரிசு: ஆனந்த் மஹிந்திரா!
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்கவேல் மாரியப்பனுக்கு தார் எஸ்யூவியை பரிசாக வழங்குவதாக மஹிந்திரா நிறுவனம் பரிசாக அறிவித்துள்ளது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகளும், பரிசுப் பொருட்களும் குவிந்து வருகின்றன.

அவரது சாதனையை போற்றும் விதத்தில் தமிழக அரசு ரூ.2 கோடி பரிசுத் தொகை அறிவித்தது. அதேபோன்று, மத்திய அரசும் ரூ.75 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்திருக்கிறது. இந்தநிலையில், ஒலிமபிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் மற்றும் பிவி சிந்து ஆகிய வீராங்கனைகளுக்கு மஹிந்திரா தார் எஸ்யூவியை மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பரிசாக அறிவித்தார்.

கடந்த வாரம் சாக்ஷி மாலிக் மற்றும் பிவி சிந்துவிற்கு மஹிந்திரா தார் எஸ்யூவிகள் அந்நிறுவனத்தின் சார்பில் பரிசளிக்கப்பட்டன. அதேபோன்று, ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவிற்கும் தார் எஸ்யூவியை பரிசாக வழங்கவேண்டும் என்று டிவிட்டர் மூலமாக ஆனந்த் மஹிந்திராவிடம் பலர் கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்று, தங்கவேல் மாரியப்பனுக்கு அவர் தார் எஸ்யூவியை பரிசாக அறிவித்துள்ளார். விரைவில் தார் எஸ்யூவியை பரிசாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிகிறது.

அனைத்து தடங்கல்கல்களையும், சோதனைகளையும் தாங்கி மன உறுதியுடன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருக்கும் மாரியப்பன் தங்கவேலுவின் மன உறுதியை பிரதிபலிக்கும் விதத்தில், அனைத்து சாலை நிலைகளிலும் உறுதியுடன் செல்லும் தார் எஸ்யூவி சிறப்பான பரிசாகவே இருக்கும்.

பேட்மிண்டன் போட்டியில் வீராங்கனை பிவி சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றதை போற்றும் விதத்தில், அதற்கு தகுந்தவாறு பானட்டில் வெள்ளிக் கோடுகள் வரையப்பட்ட தார் எஸ்யூவியும், மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கிற்கு முன்புறத்தில் பித்தளை வண்ணம் பூசப்பட்ட தார் எஸ்யூவியும் பரிசளிக்கப்பட்டது.

அதேபோன்று, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவிற்கு தங்கப் பதக்கம் வென்றதை போற்றும் விதத்தில் தங்க நிற வண்ணத்துடன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட தார் எஸ்யூவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.10 லட்சம் மதிப்புடைய தார் எஸ்யூவி அவருக்கு பரிசாக வழங்கப்படும் என்று ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சிறு வயதிலேயே விபத்தில் கால் ஊனம் அடைந்த மாரியப்பன் தங்கவேலு ஒலிம்பிக் போட்டியில் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி அசாத்திய சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தங்கவேல் மாரியப்பனுக்கும், பரிசை அறிவித்த ஆனந்த் மஹிந்திராவுக்கும் டிரைவ்ஸ்பார்க் தளம் சார்பில் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.. !!

சில க்ளிக்குகளில் கார் இன்ஸ்யூரன்ஸ்!


Click it and Unblock the Notifications








