பரிசாக வழங்கப்பட்ட பிஎம்டபிள்யூ காரை திருப்பி கொடுக்க தீபா கர்மாகர் முடிவு!
ஒலிம்பிக் சாதனைக்காக பரிசாக வழங்கப்பட்ட பிஎம்டபிள்யூ சொகுசு காரை திருப்பி வழங்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் முடிவு செய்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தீபா கர்மாகர், பதக்கம் வென்ற வீராங்கனைகள் பி.வி.சிந்து மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ கார்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஐதராபாத் பாட்மின்டன் சங்கத் தலைவரும், தொழிலதிபருமான சாமுண்டேஸ்வரநாத் இந்த கார்களை வாங்கியதுடன், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கையால் இந்த கார்களை பரிசாக வழங்கினார்.

இந்த நிலையில், காரை பராமரிக்க முடியாத நிலை இருப்பதால், அந்த காரை திருப்பி கொடுக்க தீபா கர்மாகர் முடிவு செய்துள்ளார். மேலும், அவர் மட்டுமின்றி, அவரது பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

தீபா கர்மாகரின் சொந்த ஊரான அகர்தலாவில் பிஎம்டபிள்யூ காருக்கான சர்வீஸ் சென்டர் இல்லை என்பதுடன், இந்த காருக்கான பராமரிப்பு செலவீனமும் மிக அதிகமாக இருப்பதே காரை திருப்பி அளிக்க முடிவு எடுத்ததற்கு காரணமாம்.

மேலும், அகர்தலாவின் குறுகிய மற்றும் மோசமான சாலைகளில் இந்த காரை செலுத்துவதும் கடினம் என்று தீபா கர்மாகர் கருதுகிறார். இதனாலேயே, அந்த காரை திருப்பி கொடுக்க முடிவு செய்துவிட்டராம்.

விரைவில் ஜெர்மனியில் நடக்க இருக்கும் சாலஞ்சர்ஸ் கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதற்கான செலவீனமும் இப்போது நெருக்கடியாக இருப்பதால், காரை பராமரிப்பதற்கு தேவையான செலவீனங்களை செய்ய முடியாத நிலையும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

எனவே, அந்த காரை திருப்பி கொடுக்க முடிவு செய்து, பரிசளிக்க சாமுண்டேஸ்வரநாத்திடமும் தகவல் தெரிவித்துள்ளனர். காரை எடுத்துக் கொண்டு அதற்கான ஈடான தொகையை அல்லது விரும்பும் தொகையை கொடுத்தால் மகிழ்ச்சியுடன் ஏற்க தயாராக இருப்பதாக தீபா கர்மாகர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதற்கு சாமுண்டேஸ்வரநாத் சம்மதித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த கார் திரும்பவும் சாமுண்டேஸ்வரநாத்திடம் வர இருக்கிறது. அதனை வாங்கி வைத்துக் கொண்டோ அல்லது விற்றோ பணத்தை தீபா கர்மாகருக்கு சாமுண்டேஸ்வரநாத் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








