இப்படிப்பட்ட ஆட்டோ டிரைவர்களும் இருக்க தான் செய்றாங்க!! ஆட்டோவை மினி ஆம்புலன்ஸாக மாற்றிய கேரள ‘ஹீரோ’!!
பேரிடர்களே மக்களுக்குள் உள்ள நல்ல உள்ளங்களை வெளிக்காட்டும் என்பது நாளுக்கு நாள் உறுதியாகி கொண்டே வருகிறது. சில வருடங்களுக்கு முன் சென்னையில் பெய்த கன மழையால் மொத்த மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

அப்போது யாரென்றே தெரியாத பல நல்லுள்ளங்கள் வெளியே தென்பட்டன. நேரடியாக களத்தில் இறங்கிய அவர்கள் மழை சீற்றத்தினால் அடைந்த துயரத்தில் இருந்து மக்கள் விரைவாக மீழ பெரும் பங்காற்றினர் என்றால் அதில் மிகையில்லை.

கொரோனா வைரஸினால் தற்போது உள்ள சூழ்நிலையையும் கிட்டத்தட்ட பேரிடர் காலம் என்றே சொல்லலாம். என்ன... செயற்கையாக உருவான பேரிடர். தற்போதைய சூழலில் குறிப்பாக ஓட்டுனர்கள் பலர் ஹீரோக்களாக மாறி வருகின்றனர். அத்தகைய ஹீரோக்களில் ஒருவரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

கேரளா மாநிலம் பைய்யானூரை சேர்ந்த 51 வயது ஆட்டோ ஓட்டுனர், பிரம்மசந்திரன். மக்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தனது ஆட்டோவை மினி ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளவர், இதுவரையில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்கள் கிட்டத்தட்ட 500 பேரை தனது ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், ஒவ்வொரு பயணத்திற்கு பிறகும் தனது ஆட்டோவை, மன்னிக்கவும் மினி ஆம்புலன்ஸை சுத்தப்படுத்திவிடுவாராம். மேலும் பயணிகளை தனிமைப்படுத்துவதற்காக கண்ணாடி பாலிதீன் கவர்கள் மூலம் பின் இருக்கை பகுதி முழுவதையும் மறைத்துள்ளார்.

கர்ப்பிணி பெண் ஒருவரையும், அவருடன் கோவிட்-19 அறிகுறிகளுடன் இருந்த நபரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் இருந்து இத்தகைய சவாரிகளை துவங்கியதாக கூறும் பிரம்மசந்திரன், இந்த நபரை தைரியமாக அழைத்து சென்றதற்கு பிறகு பலர் தன்னை அழைக்க துவங்கியதாக கூறியுள்ளார்.

மேலும், தற்போதைய ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருப்போர் ஆஷா தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மூலமாக தன்னை தொடர்பு கொள்கின்றனர் என மெல்லியதாக சிரித்தப்படி கூறும் பிரம்மசந்திரனுக்கு ஒரு சல்யூட் தான் வைக்க வேண்டும்.

ஏனெனில் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அச்சப்பட வேண்டியதாக இருக்கும் தற்போதைய சூழலில் ஒரு தனி நபர் தைரியமாக கொரோனா வைரஸ் தொற்று ஆளானவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என்பது உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயமாகும்.

30 வருட ஆட்டோ ட்ரைவிங் அனுபவத்தை கொண்டவராக இருந்தாலும், பிரம்மசந்திரனுக்கு தற்போதைய சவாரிகள் ஒவ்வொன்றும் மறக்க முடியாத அனுபவத்தையும், ஒருவித மனதிருப்தியையும் தரும் என்பது மட்டும் உறுதி. இவ்வாறான மனிதர்களை அவ்வப்போது பார்த்து வருகின்றோம். தொடர்ந்து பார்க்க, ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் இணைப்பில் இருங்கள்.


Click it and Unblock the Notifications








