சவப்பெட்டியாக மாறிய பிஎம்டபிள்யூ கார்! இறந்த தந்தைக்கு மகன் நூதன மரியாதை!
பிஎம்டபிள்யூ காருக்குள் வைத்து, தந்தையின் உடலை அடக்கம் செய்த மகனுக்கு, பேஸ்புக்கில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பிஎம்டபிள்யூ காருக்குள் வைத்து, தந்தையின் உடலை அடக்கம் செய்த மகனுக்கு, பேஸ்புக்கில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில், சமீப காலமாக ஹம்மர், ஹூண்டாய் போன்ற லக்ஸரி கார்கள் சவப்பெட்டிகளாக மாறி வருகின்றன. இது குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஆப்ரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் அசூபூக்கி. தந்தை மீது மிகுந்த பாசம் வைத்துள்ள அசூபூக்கி, நைஜீரியா நாட்டின் அனம்பரா மாகாணத்தில் வசித்து வருகிறார்.

அசூபூக்கி தனது தந்தைக்கு சத்தியம் ஒன்றை செய்திருந்தார். ''நீங்கள் உயிரிழந்தால், லக்ஸரி காரில் வைத்து உங்களை அடக்கம் செய்கிறேன்'' என்பதுதான் அந்த சத்தியம்.

இந்நிலையில் அசூபூக்கியின் தந்தை சமீபத்தில் உயிரிழந்தார். இதனால் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற அசூபூக்கி முடிவு செய்தார். அசூபூக்கி செல்வ செழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர்.

எனவே பிராண்ட் நியூ லக்ஸரி பிஎம்டபிள்யூ கார் ஒன்றில், தனது தந்தையின் உடலை வைத்து, அப்படியே அடக்கம் செய்து விட்டார் அசூபூக்கி. அதாவது பிஎம்டபிள்யூ காரை அவர் சவப்பெட்டியாக மாற்றி விட்டார்.

இந்த புகைப்படம் பேஸ்புக்கில் தற்போது வைரலாக பரவி வருகிறது. பேஸ்புக்கில் மட்டும் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை அந்த புகைப்படம் ஷேர் செய்யப்பட்டுள்ளது. அசூபூக்கி ஒரு டிரெண்டிங்காக மாறியுள்ளார்.

இந்த புகைப்படத்தில், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் உள்ளனர். அவர்கள் கருப்பு நிற சூட் அணிந்துள்ளனர். அசூபூக்கியின் தந்தையின் உடல் வைக்கப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ காரை, புதைப்பதற்காக குழியில் இறக்குவது போல அந்த புகைப்படம் உள்ளது.

ஆனால் அசூபூக்கியின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ''உங்களிடம் பணம் இருந்தால் பெற்றோர் உயிருடன் இருக்கும் போதே கார் வாங்கி கொடுங்கள். அவர்கள் இறந்த பிறகு கண்ணியமான முறையில் சவப்பெட்டியில் வைத்து புதையுங்கள்'' என பேஸ்புக் பயனாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது பணத்தை வீணடிக்கும் செயல் என்றும், முட்டாள்தனமான செயல் என்றும் பலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். குழியை தோண்டி காரை திருடி சென்று விடும் அபாயம் இருப்பதாகவும் சிலர் எச்சரித்துள்ளனர்.

ஆனால் சொற்ப எண்ணிக்கையிலான ஒரு சிலர் மட்டுமே, அசூபூக்கி பணத்தை பெரிதுபடுத்தாமல், அவரது தந்தைக்கு மரியாதை செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அசூபூக்கியம் கூட தந்தைக்கு மரியாதை செய்வதற்காகதான் இப்படி செய்திருப்பார் என கூறப்படுகிறது. பேஸ்புக்கில் வெளியான அந்த படத்தை வைத்து பார்க்கையில், அந்த கார் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எஸ்யூவி காராக இருக்கலாம் என தெரிகிறது.

அந்த காரின் விலை 32 மில்லியன் நைராவாக (நைரா என்பது நைஜீரியன் கரன்ஸி) இருக்கலாம். இந்தியாவில் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 காரின் விலை 1.08 கோடியில் (டெல்லி, எக்ஸ் ஷோரூம்) இருந்து தொடங்குகிறது.

இதனிடையே ஓரிரு நாட்களுக்கு முன் சீனாவிலும் கூட இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது. சீனாவை சேர்ந்த ஒருவர் பல வருடங்களாக சில்வர்-கிரே நிற ஹுண்டாய் சொனாட்டோ செடான் காரை பயன்படுத்தி வந்தார்.

''நான் உயிரிழந்து விட்டால், சவப்பெட்டிக்கு பதிலாக அந்த காரில் வைத்துதான் என்னை அடக்கம் செய்ய வேண்டும். இதுதான் எனது கடைசி ஆசை'' என அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தார்.

இதனால் அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், அவர் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்த ஹுண்டாய் சொனாட்டோ செடான் காரில் வைத்தே, அவரது உடலை குடும்பத்தினர் அடக்கம் செய்தனர்.

இதற்கு முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு நைஜீரியாவிலும் கூட இதே போன்றதொரு சம்பவம் நிகழ்ந்தது. உயிரிழந்த தனது தாயின் உடலை, அவருக்கு விருப்பமான ஹம்மர் காரில் வைத்தே, மகன் ஒருவர் அடக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








