போலி ஹெல்மெட் விற்பனையாளர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய அரசு.. கடும் தண்டனை அறிவிப்பு
ஐஎஸ்ஐ முத்திரை அல்லாத ஹெல்மெட்களை உற்பத்தி செய்பவர்கள், சேமிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐ முத்திரை அல்லாத ஹெல்மெட்களை உற்பத்தி செய்பவர்கள், சேமிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள்தான், விபத்துக்களினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சிலர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். சிலர் படுகாயம் அடைகின்றனர்.

பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. எனினும் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் கூட, விபத்துக்களில் சிக்கும் சிலருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுகிறது.

ஏனெனில் அவை தரமற்ற ஹெல்மெட்களாக உள்ளன. தரமற்ற ஹெல்மெட்களை அணிந்து கொண்டு பயணிக்கும் பலர், விபத்துக்களினால் கடுமையாக பாதிக்கப்படும் சோகமான சம்பவங்கள் நமது நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டுதான் உள்ளன.

எனவே விபத்துக்கள் மற்றும் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஐஎஸ்ஐ முத்திரை அல்லாத ஹெல்மெட்களை உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது மற்றும் விற்பனை செய்வது இனி criminal offence-ஆக கருதப்படும். இந்த குற்றத்தை செய்பவர்கள், வாரண்ட் இல்லாமல் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

முதல் முறையாக இந்த தவறை செய்தவர்கள் என்றால், 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது குறைந்தபட்சம் 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆனால் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இந்த தவறை செய்பவர்களுக்கு சிறை தண்டனையுடன் கூடுதல் தொகை அபராதமாக விதிக்கப்படும்.

டூவீலர் ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் சங்க தலைவரும், ஆசியாவின் மிகப்பெரிய ஹெல்மெட் உற்பத்தி நிறுவனமான ஸ்டீல்பேர்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான ராஜிவ் கபூர், அரசின் இந்த நடவடிக்கையை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ராஜிவ் கபூர் கூறுகையில், ''போலியான ஹெல்மெட்களை விற்பனை செய்வது என்பது போலியான மருந்துகளை விற்பனை செய்வதற்கு சமமானது. எனவே அத்தகையவர்களை கடுமையாக தண்டிக்கும் அரசின் முடிவு பாராட்டுதலுக்கு உரியது.

சில சர்வதேச முன்னணி நிறுவனங்கள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தரத்திற்கு ஏற்ற வகையில், இந்தியாவிற்கு ஹெல்மெட்களை ஏற்றுமதி செய்கின்றன. அவர்களும் கூட தற்போது ஐஎஸ்ஐ தரத்தை பின்பற்ற வேண்டியுள்ளது'' என்றார்.

ஐஎஸ்ஐ முத்திரை அல்லாத ஹெல்மெட்களை ஏற்கனவே வாங்கியவர்கள், அதனை பயன்படுத்த வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். அபாயகரமான போலி ஹெல்மெட்கள், உயிருக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதால், பொதுமக்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த கடும் நடவடிக்கை மூலமாக, விபத்துக்களினால் உயிரிழப்பவர்கள், காயம் அடைபவர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போலீஸ், இன்சூரன்ஸ், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ செலவினங்களுக்கு அரசு ஒதுக்கி வரும் தொகையும் ஓரளவிற்கு சேமிக்கப்படும்.

இதுகுறித்து ராஜிவ் கபூர் கூறுகையில், ''இந்தியா முழுவதும் நடைபெறும் சாலை விபத்துக்களினால், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, இனி வரும் ஆண்டுகளில் லட்சக்கணக்கானோரின் உயிர்கள் பாதுகாக்கப்படும்'' என்றார்.


Click it and Unblock the Notifications








