எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையை குறையுங்கள்... நிறுவனங்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்... யார்னு தெரியுமா?
எலெக்ட்ரிக் வாகனங்களின் விலைகளை குறைக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஏராளமான நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் தொடர்ச்சியாக களமிறங்கி கொண்டுள்ளன. எலெக்ட்ரிக் கார் விற்பனையை பொறுத்தவரையில், டாடாதான் நம்பர்-1 நிறுவனமான இருந்து வருகிறது.

தற்போதைய நிலையில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பெற்றுள்ளது. அதன் குறைவான விலைதான் இதற்கு காரணம். போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் விலை குறைவுதான் என்றாலும், அனைத்து தரப்பினராலும் அந்த எலெக்ட்ரிக் காரை வாங்க முடியாத நிலை உள்ளது.

இந்த சூழலில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலைகளை குறைக்க வேண்டும் என கர்நாடகா மாநிலத்தின் மின்சார துறை அமைச்சர் எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் மற்ற மாநிலங்களை போல், கர்நாடக மாநிலத்தின் மின்சார துறை அமைச்சகமும் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் மின்சார துறை அமைச்சர் சுனில் குமார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பது, மக்கள் அவற்றை வாங்குவதற்கு தடையாக உள்ளது. எனவே எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் விலைகளை குறைக்க வேண்டும்.

அப்போதுதான் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்க முடியும். குறைவான விலையில் தருவதுதான் தற்போதைய நிலையில் மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆனால் விலை அதிகமாக இருப்பதால்தான் அனைவராலும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடிவதில்லை. எனவே அரசாங்கமும், நிறுவனங்களும் இணைந்து, எலெக்ட்ரிக் வாகனங்களை குறைவான விலையில் கிடைப்பதற்கு தேவையான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்'' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது புதிய எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன் ஒன்றையும் அமைச்சர் சுனில் குமார் திறந்து வைத்தார். அப்போது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ஒன்றை அவர் சார்ஜ் செய்தார். நாங்கள் ஏற்கனவே கூறியபடி இதுதான் தற்போதைய நிலையில் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகி கொண்டுள்ள எலெக்ட்ரிக் கார் ஆகும்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிகவும் அதிகமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் நிறைய பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதுதான் இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரிகளின் விலை அதிகமாக இருப்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் அதிகமாக இருக்கிறது. ஆனால் வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் பார்த்தால், ஐசி இன்ஜின் வாகனங்களின் விலையுடன் ஒப்பிடும்போது, அதாவது பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலையுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம்.

ஆனால் பெட்ரோல் கார்களுக்கு இணையாக எலெக்ட்ரிக் கார்களின் விலை அடுத்த 2 ஆண்டுகளில் குறையும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதாவது அடுத்த 2 ஆண்டுகளில் பெட்ரோல் கார்களின் விலையும், எலெக்ட்ரிக் கார்களின் விலையும் ஒன்றாக இருக்கும் என்பது அவரது நம்பிக்கை.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும்பட்சத்தில், அவற்றை வாங்குவதற்கு மக்கள் இன்னும் அதிகளவில் முன்வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவையும் இந்தியாவில் உள்ளது. அப்போதுதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications








