ஆட்டோரிக்ஷா பிடித்து வீடு திரும்பிய அமைச்சர் வீரப்ப மொய்லி
எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக புதன்கிழமை தோறும் மெட்ரோ ரயில், பஸ்சை பயன்படுத்தி அலுவலகம் செல்வதாக அறிவித்தார். அதன்படியே, கடந்த மாதம் 9ந் தேதி முதல் வார்த்தையை காப்பாற்றும் வகையில், மெட்ரோ ரயில், பஸ்சில் அலுவலகம் சென்று வருகிறார்.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் டெல்லியில் தனி தெலங்கானா தொடர்பான மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தில் அமைச்சர் வீரப்ப மொய்லி பங்கு கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் ஆட்டோரிக்ஷா பிடித்து பாதுகாப்புப் படையினரின் முழு பாதுகாப்பும் இல்லாமல் வீடு திரும்பினார். அமைச்சர் மொய்லியின் செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

முன்மாதிரி
பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சக அமைச்சர்களும் இதுபோன்று பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார். அதற்கு முன்மாதிரியாக மொய்லி பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருகிறார்.

எதுவரை...?
அமைச்சர் பதவியில் இருக்கும் வரை இதுபோன்று பொது போக்குவரத்தை தொடர்ந்து பயன்படுத்துவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும், அனைவரும் இந்த முறையை பின்பற்றி எரிபொருள் பயன்பாட்டை குறைக்க உதவ வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பரபரப்பு
பாதுகாப்புப் படையினரின் துணை இல்லாமல் ஒரு ஆட்டோரிக்ஷாவில் அவர் பயணம் செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பஸ் பயணம்
கடந்த இரு வாரங்களுக்கு முன் பிரதமர் வீட்டில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அங்கிருந்து பஸ்சில் பயணம் செய்து வீடு திரும்பினார். மேலும், பயணச் சீட்டை பெற்றுக் கொண்டு 15 நிமிடங்கள் நின்று கொண்டே பயணம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பஸ் தினம்
நாடு முழுவதும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் 6 வாரங்களுக்கு பஸ் தினம் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், இது நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும் என அவர் கூறினார்.

பாராட்டு
பொது போக்குவரத்தில் அலுவலகம் சென்று வருவதை பாராட்டி ஏராளமான இ-மெயில்களும், கடிதங்களும் தினம் வருவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரயில்
அமைச்சர் மொய்லி மெட்ரோ ரயிலை அதிகம் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேவேளை, பொதுமக்களுக்கு அதிக இடையூறு இல்லாத வகையில் இந்த பயணம் அமைந்தால் நல்லது. எல்லா அமைச்சர்களும் இதுபோன்று பாதுகாப்புப் படையினர் புடைசூழ மெட்ரோ ரயிலை பயன்படுத்தத் துவங்கினால், பொதுமக்களுக்கு நிச்சயம் இடையூறாக இருக்கும்.

மெட்ரோ பயணம்
காலையில் மெட்ரோ ரயிலில் அலுவலகம் சென்றுவிட்டு மதிய உணவுக்கு மெட்ரோ ரயிலிலேயே வீடு திரும்புகிறார். பின்னர், மெட்ரோவில் அலுவலகம் சென்று அங்கிருந்து மீ்ண்டும் மெட்ரோ ரயிலிலேயே வீடு திரும்புவதாக தெரிவித்துள்ளார்.

மிச்சம்
அமைச்சர் மொய்லி மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் பணியாளர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம் ஒரு நாளுக்கு 600 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மிச்சப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துவோம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், பல்வேறு பிரச்னைகளில் காங்கிரசும், அமைச்சர்களும் சிக்கித் தவிக்கின்றனர். எது எப்படியிருந்தாலும், வீரப்ப மொய்லியின் இந்த செயலை பாராட்ட வேண்டும் என்பதோடு, அவர் பயணம் தொடர வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications








