போலீசாரையே அதிர வைத்த பைக் மாடிஃபிகேஷன்... எதற்காக என்று தெரிந்தால் நீங்களும் ஷாக்காயிடுவீங்க...
இந்த ஊரடங்கு காலத்தில் வாகன ஓட்டிகள் வித்தியாச வித்தியாசமான முறையில் சோதனை போலீஸாரிடம் சிக்கி வருகின்றனர். இந்த வகையில் குஜராத்தில் சிக்கிய வாகன ஓட்டி ஒருவர் போலீஸாரையே அதிர வைத்துள்ளார். அது என்ன விஷயம் என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா, தற்போது இந்த ஒரு பெயர் மட்டும் தான் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வைரஸ் பல நாடுகளில் பல விதமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

பலர் இந்த வைரஸினாலும், இதனை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கினாலும் வேலையின்றியும், வருமானம் இன்றியும் தவித்து வருகின்றனர். பலருக்கு இவ்வாறான கவலை என்றால், ஒரு சிலருக்கு, குறிப்பாக மது பிரியர்களுக்கு மது வாங்க வெளியே போக முடியவில்லையே என்ற கவலை.

தமிழ்நாட்டில் மார்ச் இறுதியில் இருந்து மூடப்பட்ட மதுக்கடைகள் மே மாத மத்தியில் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டாலும், தொலைத்தூரம் சென்று மது வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள் போலீஸாரின் பாதுகாப்பை மீறி தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

இது தமிழ்நாட்டு ‘குடி'மகன்களின் தற்போதைய நிலை என்றால் குஜராத் மது பிரியர்களின் நிலை இன்னும் மோசம். ஏனென்றால் ஊரடங்கிற்கு முன்பிருந்தே அங்கு மது விலக்கு அமலில் உள்ளது. இதனால் மது வாங்க நினைப்போர் மாநிலம் விட்டு மாநிலத்திற்கே சென்று வந்தனர்.

ஆனால் தற்போது இதற்கும் ‘ஆப்பு' என்பது போல் இ-பாஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இ-பாஸ் இல்லாத வாகனங்களை போலீஸார் அப்போதே பறிமுதல் செய்து வருகின்றனர். சாதாரண பயணங்களுக்கே இவ்வாறான கெடுப்பிடிகள். மது பாட்டில்களை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கடந்துவது என்றால் சொல்லவா வேண்டும்.

இருந்தும் குஜராத் வாகன ஓட்டி ஒருவர் தனது ஹீரோ பேஷன் பைக்கில் மது பாட்டில்களை கடத்த முயற்சி செய்து போலீஸாரிடம் சிக்கி கொண்டுள்ளார். ஸ்கூட்டர்கள், கார்களில் மது பாட்டில்களை கடத்தலாம், மோட்டர்சைக்கிளில் எவ்வாறு கடத்த முடியும் என்ற கேள்வி இந்நேரம் உங்களிடம் எழுந்திருக்கும்.

இந்த ஹீரோ பேஷன் பைக்கை மது பாட்டில்களை கடத்துவதற்காகவே பிரத்யேகமாக மாற்றியமைத்துள்ளனர். அதாவது பெட்ரோல் டேங்க் முழுவதும் நீக்கப்பட்டு அந்த இடத்தை பாட்டில்களை பதுக்க பயன்படுத்தியுள்ளனர். பெட்ரோல் டேங்க் மட்டுமில்லாமல் இருக்கைகளுக்கு அடியிலும் சில மது பாட்டில்களை வைத்துள்ளனர்.

பெட்ரோல் டேங்க் மூடியை திறந்து பார்த்தாலும் மது பாட்டிகள் தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் பாட்டில்கள் இருக்கையும் டேங்கும் இணையும் பகுதியின் வழியாக உள்ளே நுழைக்கப்பட்டுள்ளன. ஹீரோ பேஷன் பைக்கின் பெட்ரோல் டேங்க் 10 லிட்டர் கொள்ளளவு கொண்டது என்பதால் எடுக்க எடுக்க பாட்டில்கள் வந்து கொண்டே இருப்பதை வீடியோ பார்த்தால் தெரியும்.

சரி பெட்ரோல் டேங்கில் பாட்டில்களை பதுக்கியாற்று, பைக்கின் எரிபொருளுக்கு என்ன செய்வது என யோசித்தவர்கள், இருக்கைக்கு அடியில் நீண்ட பிளாஸ்டிக் குழாயை பொருத்தியுள்ளனர். அதன் மூலமாக தான் தற்போது போலிஸாரிடம் மாட்டி கொள்வது வரை பைக் இயங்கி வந்துள்ளது. இதன் போலி பெட்ரோல் டேங்கின் கொள்ளவு 2 லிட்டர் இருக்கும்.
ஹீரோ பேஷன் பைக் ஒரு லிட்டரில் 50-60 கிமீ வரை இயங்கக்கூடியது. அதனால் இந்த ஒரு பயணத்திற்கு இந்த போலி பெட்ரோல் டேங்க் போதுமானதாக இருந்திருக்கும். இவ்வாறு பக்காவாக திட்டம் போட்டு மது பாட்டில்களை கடத்தியவர்கள் எவ்வாறு போலீஸாரிடம் சிக்கி கொண்டனர் என்பதற்கான விடையை தான் எவ்வளவு தேடியும் அறிய முடியவில்லை.


Click it and Unblock the Notifications








