பழைய வாகன அழிப்பு கொள்கையால் யாருக்கு பயன்? Scrappage Policy குறித்து கூகுளில் அதிகம் கேட்கப்படும் கேள்விகள்!!
நடப்பு 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிற்கான 2021 யூனியன் பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். நாடு முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட இந்த பட்ஜெட்டில் பழைய வாகன அழிப்பு கொள்கையும் ஒன்றாக இருந்தது.

இதுவரையில் இந்தியாவில் பழைய வாகனங்களை அழிப்பதற்கான நிலையான செயல்படு முறை எதுவும் இல்லை. இந்த கொள்கையின் மூலம் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில் கொண்டு, இதற்கு மேல் பயன்படுத்தவே முடியாது என்று நிலைமைக்கு தள்ளப்பட்ட வாகனங்களை முறையாக அழிப்பது குறித்து இந்திய அரசாங்கம் ஒரு அணுகுமுறையை கையாளவுள்ளது.

இந்த விஷயத்தில் மத்திய அரசாங்கம் மிக தெளிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் நம் நாட்டு மக்களும் அரசாங்கம் கொண்டுவரும் புதிய புதிய கொள்கைகளை பற்றி இணையத்தில் அப்போதே தேடி தெரிந்து வைத்து கொள்கின்றனர். இந்த வகையில் பழைய வாகன அழிப்பு கொள்கை குறித்து நெட்டிசன்கள் கூகுளில் தேடும் விபரங்களில் முக்கியமானவற்றையும், அவற்றிற்கு கூகுள் வழங்கும் பதில்களையும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பழைய வாகன அழிப்பு கொள்கை என்றால் என்ன?
20 வருடங்களுக்கு மேலாக இயங்கி கொண்டிருக்கும் பயணிகள் வாகனங்களையும், 15 வருடங்களுக்கு மேலான வணிக வாகனங்களையும் கட்டாயமாக அழிக்கப்பட வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாக இந்த புதிய கொள்கை பட்ஜெட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வளவு பழமையான வாகனங்கள் தற்போதைய மாசு உமிழ்வு மற்றும் உடற்தகுதி சோதனைகளுக்கு இணக்கமானவைகளாக இருக்காது என்பதனாலேயே பழைய வாகன அழிப்பு கொள்கையை அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. எனவே இனி வாகனங்களின் உரிமையாளர்கள் அவ்வப்போது தங்களது வாகனங்களை சோதனை செய்ய வேண்டி இருக்கும்.

இந்த புதிய கொள்கையினால் பயன் என்ன?
தானாக முன்வந்து வாகனங்களை அழிக்க கொடுக்கும் உரிமையாளர்களுக்கு சாலை வரியில் 15- 25% தள்ளுபடியும், புதியதாக வாங்கும் காருக்கான பதிவு கட்டணம் முழுவதும் தள்ளுபடி செய்யப்படுமாம். இவை அனைத்தும் அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளாகும்.

வாகன தயாரிப்பு நிறுவனங்களை பொறுத்தவரையில், வாகனம் அழிக்கப்பட்டதற்கான சான்றிதழ் உடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு, அழிக்கப்பட்ட வாகனத்தின் விலையில் 4- 6 சதவீத பணத்தை வழங்க வேண்டும். அதேபோல் புதியதாக வாங்கும் வாகனத்தின் விலையில் 5% தள்ளுபடி வழங்க வேண்டும்.

பழைய வாகன அழிப்பு கொள்கை எப்போது செயல்படுத்தப்படும்?
இந்த கொள்கை சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது. இதனை தனியார் வாகனங்களில் நடைமுறைப்படுத்துவதற்கான தற்காலிக தேதியாக 2021 அக்டோபர் 1 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கே இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வாகனங்களை அழிப்பது 2022 ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்கவுள்ளது.

நான் எனது பழைய வாகனத்தை அழிக்காவிட்டால் என்ன நடக்கும்?
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆயுட்காலத்தை முடித்த மற்றும் இயக்க தகுதியற்றதாக கருதப்படும் வாகனங்கள் அழிக்கப்பட வேண்டும். அவ்வாறு அழிக்கப்படாமல் பயன்பாட்டில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டால் வாகனத்தின் உரிமையாளர் மிக பெரிய அபாரதத்திற்கு உள்ளாக நேரும். வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

உடற்தகுதி சோதனை என்றால் என்ன?
மாசு கட்டுப்பாட்டு சோதனையை போன்றதுதான் இதுவும். என்ன அந்த சோதனையில் வாகனம் வெளியிடும் மாசு அளவை மட்டுமே தகுந்த கருவிகள் கொண்டு சோதனை செய்வர். உடற்தகுதி சோதனையில், இதனுடன் வாகனத்தின் கட்டமைப்பு உள்பட ஒட்டுமொத்த வாகனமும் சோதனை செய்யப்படும்.

அதாவது வாகனத்தின் என்ஜின், பிரேக்குகள் உள்பட பிற மெக்கானிக்கல் பாகங்களும் சோதிக்கப்படும். இந்த சோதனைகள் யாவும் அரசு நிர்ணயிக்கும் பகுதியில் நடத்தப்படும். மாசு உமிழ்வு சோதனையை போன்று உடற்தகுதி சோதனையில் திருப்தியளிக்கும் வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படலாம்.

2021 யூனியன் பட்ஜெட்டில் அங்கம் வகித்த பழைய வாகன அழிப்பு கொள்கைக்கு பொதுமக்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. அதேசமயம் இயற்கை சமூக நல ஆர்வலர்கள் மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் இப்புதிய கொள்கை பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொள்கையினால் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு என்ன நன்மை என்றால், பழைய வாகனங்களை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் புதிய வாகனங்கள் தேவை ஏற்படும். இதன் மூலம் தங்களது விற்பனை அதிகரிக்கும் என அவை எண்ணுக்கின்றன.


Click it and Unblock the Notifications








