எகிப்து போட்ட தடாலடி நிபந்தனை... சிக்கலில் தத்தளிக்கும் எவர்கிவன் கப்பல்... தவிக்கும் இந்தியர்கள்!
சூயஸ் கால்வாயில் சிக்கி மீட்கப்பட்ட எவர் கிவன் கப்பல் சோதனை மேல் சோதனைகளை சந்தித்து வருகிறது. இழப்பீடு கேட்டு சூயஸ் கால்வாய் ஆணையம் கப்பலை சிறைபிடித்துள்ளதால், அதில் உள்ள 25 இந்திய பணியாளர்களும் தவித்து வருகின்றனர்.

கடந்த மாதம் 23ந் தேதி சூயஸ் கால்வாயை கடக்க முயன்ற எவர் கிவன் கப்பல் மோசமான வானிலை காரணமாக தரை தட்டியது. தீவிர போராட்டத்திற்கு பின்னர் கடந்த மாதம் 29ந் தேதி மீட்கப்பட்டு, சூயஸ் கால்வாயில் உள்ள கிரேட் பிட்டர் ஏரியில் நிறுத்தப்பட்டது.

கப்பல் இயக்குவதற்கு தகுதியானதாக இருக்கிறதா என்ற சோதனைகள் நடந்ததுடன், கப்பல் தரை தட்டியதற்கான காரணங்களை கண்டறிவதற்காக கப்பலை இயக்கிய 25 இந்திய பணியாளர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சூழலில், கப்பல் தரை தட்டியதையடுத்து ஏற்பட்ட வருவாய் இழப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான செலவீனங்களை கப்பல் உரிமையாளர் தர வேண்டும் என்று சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்தது.

மேலும், கப்பல் போக்குவரத்து தடை பட்டதால், சூயஸ் கால்வாய் ஆணையத்திற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு, இழுவை படகுககள், மீட்புப் பணிகளுக்காக செலவிடப்பட்ட தொகையை சேர்த்து ஒரு பில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.7,500 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று சூயஸ் கால்வாய் ஆணையம் கப்பல் உரிமையாளருக்கு நிபந்தனை விதித்துள்ளது.

இதனால், சூயஸ் கால்வாயில் உள்ள கிரேட் பிட்டர் ஏரியிலேயே சிறைபிடித்து நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், அந்த கப்பலை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை அந்நாட்டு அரசு ஒத்துழைப்புடன் சூயஸ் கால்வாய் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதனால், கப்பலில் உள்ள 25 இந்திய பணியாளர்களின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அவர்கள் கப்பலிலேயே சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கப்பலின் தொழில்நுட்ப மேலாண்மை பணிகளை கவனித்து வந்த பெர்ன்ஹார்டு ஷட்டில் ஷிப்மேனேஜ்மென்ட் நிறுவனம் சூயஸ் கால்வாய் ஆணையத்தின் நிபந்தனைகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ இயன் பிவரிட்ஜ் கூறுகையில்,"கப்பலை சிறைபிடிக்கும் நடவடிக்கைகள் பெரும் அதிருப்தியை தருகிறது. எங்களது குழுவினரும், கப்பல் பணியாளர்களும் மீட்புப் பணிகள் மற்றும் விசாரணைகளுக்கு சூயஸ் கால்வாய் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

கப்பலின் நகர்வு குறித்து சூயஸ் கால்வாய் ஆணையம் கேட்ட வாயேஜ் டேட்டா ரெக்கார்டர் உள்ளிட்ட அனைத்து தரவுகளும், ஆவணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. கப்பலை கூடிய விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்," என்று அவர் கூறி இருக்கிறார்.

எப்படியோ, சூயஸ் கால்வாய் ஆணையத்திற்கும், கப்பல் நிர்வாகத்திற்கும் இடையே சுமூகமான முறையில் இழப்பீடு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, கப்பலும், இந்திய பணியாளர்களும் விடுவிடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications








