இந்தியாவின் 2-வது புல்லட் ரயில் திட்டத்திற்கு ஆய்வுப் பணிகள் துவங்கியது!
இந்தியாவின் இரண்டாவது புல்லட் ரயில் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து வெளியாகி இருக்கும் புதிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பரந்து விரிந்த நிலப்பரப்பை கொண்ட இந்தியாவின் போக்குவரத்தில் ரயில் சேவை மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த நிலையில், நீண்ட தூர தடங்களில் பயண நேரத்தை குறைப்பதற்கான முயற்சிகளில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஜப்பான் உதவியுடன் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை- ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த திட்டம் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான 2023ம் ஆண்டுக்குள் நிறைவடைவதில் சிக்கல்கள் இருந்து வருகின்றன. ஆனால், குறிப்பிட்டப்படி புல்லட் ரயில் திட்டம் சரியான பாதையில் செல்வதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து வருகிறது.

இந்த சூழலில், இந்தியாவின் இரண்டாவது புல்லட் ரயில் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் துவங்கி இருக்கின்றன. மும்பை - நாக்பூர் இடையில் இந்தியாவின் இரண்டாவது புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த இரண்டாவது புல்லட் ரயில் வழித்தடத்தை ஆய்வு செய்வதற்கான பணிகள் கடந்த 12ந் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. லிடர் என்று குறிப்பிடப்படும் லேசர் தொழில்நுட்பத்தின் மூலமாக புல்லட் ரயில் அமைப்பதற்கான பாதை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

லிடர் லேசர் தொழில்நுட்பத்தை வைத்து புல்லட் ரயில் வழித்தடம், அந்த வழித்தடத்தில் இருக்கும் நில அமைப்பு, கட்டங்கள், வனப்பகுதி, மலைப்பகுதி, ஆறுகள், நீர்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. விமானத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் இருக்கும் 100 மெகாபிக்ஸல் கொண்ட கேமரா மற்றும் சென்சார்கள் உள்ளிட்ட கருவிகள் மூலமாக இந்த ஆய்வுப் பணிகள் நடக்கிறது.

இந்த லிடர் தொழில்நுட்பம் மிகத் துல்லியமான தரவுகளை தரும். இதன்மூலமாக, மிகச் சரியான வழித்தடத்தை தேர்வு செய்வதற்கு உதவியாக இருக்கும். சாதாரணமாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டால் 10 முதல் 12 மாதங்கள் பிடிக்கும். ஆனால், இந்த லிடர் தொழில்நுட்ப ஆய்வுப் பணிகள் நிறைவு செய்வதற்கு 3 முதல் 4 மாதங்களே ஆகும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மும்பையிலிருந்து நாக்பூர் வரையில் 736 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த புதிய புல்லட் ரயில் தடம் அமைக்கப்பட உள்ளது. ஷஹான்பூர், இகத்புரி, நாசிக், மேகர், மாலேகான், புல்கான், வார்தா மற்றும் காப்ரி ஆகிய நகரங்கள் வழியாக செல்லும். ஆய்வுப் பணிகள் துவங்கி இருக்கும் நிலையில், லிடர் தொழில்நுட்பத்தின் மூலமாக எடுக்கப்படும் படங்களை வைத்து, வழித்தடம் தேர்வு செய்யப்படும். இதையடுத்து, நில கையகப்படுத்துததல் பணி நடைபெற்று, பாதை அமைக்கும் பணிகள் துவங்கும்.

மும்பை- நாக்பூர் வழித்தடத்தை தொடர்ந்து டெல்லி - அமிர்தசரஸ், வாரணாசி - ஹவுரா, டெல்லி - வாரணாசி, டெல்லி - ஆமதாபாத், மும்பை - ஹைதராபாத், சென்னை - மைசூர் ஆகிய வழித்தடங்களிலும் புல்லட் ரயில் இயக்குவதற்கான ஆய்வுப் பணிகள் துவங்கப்பட உள்ளது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அனைத்து தடங்களிலும் புல்லட் ரயில் தடம் அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








