தீவிரவாத அச்சுறுத்தலால் குடியரசு தலைவர் காருக்கு புது கட்டுப்பாடு.. விஐபி கலாச்சாரத்திற்கும் முடிவு
விவிஐபி கலாசாரத்தை ஒழிக்கும் வகையிலும், தீவிரவாதிகளினால் ஏற்படும் அச்சுறுத்தலை குறைக்கும் வகையிலும், குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் கார்களுக்கு புது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
விவிஐபி கலாசாரத்தை ஒழித்து கட்டும் வகையிலும், தீவிரவாதிகளினால் ஏற்படும் அச்சுறுத்தலை குறைக்கும் வகையிலும், குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் உள்ளிட்டோரின் கார்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் உயரதிகாரிகளின் கார்களில் நம்பர் பிளேட் இருக்காது. அதற்கு பதிலாக அவர்களது கார்களின் முன்பகுதியில் 4 சிங்கங்கள் கொண்ட எம்பளம் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த விவிஐபி கலாசாரத்திற்கு டெல்லி ஐகோர்ட் முடிவு கட்டியுள்ளது. இனி குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், மாநில ஆளுநர், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுனர் உள்பட அனைத்து உயரதிகாரிகளின் அதிகாரப்பூர்வ வாகனங்கள், சட்டத்திற்கு உட்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.

அத்துடன் அவர்களது அதிகாரப்பூர்வ வாகனங்களில், தெளிவாக தெரியும் வகையில், நம்பர் பிளேட்களும் பொருத்தப்பட வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கில், டெல்லி ஐகோர்ட் இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

டெல்லியில் இயங்கி வரும் நயபூமி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயலாளர் ராகேஷ் அகர்வால் என்பவர்தான், டெல்லி ஐகோர்ட்டின் இந்த அதிரடியான உத்தரவிற்கு காரணகர்த்தா. அவர் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பான விசாரணையின்போதுதான், டெல்லி ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்தது.

நயபூமி தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயலாளர் ராகேஷ் அகர்வால் தனது மனுவில், ''நம்பர் பிளேட்களுக்கு பதிலாக 4 சிங்கங்கள் கொண்ட இந்திய தேசிய இலச்சினை பொருத்தப்படுவதால், அந்த கார்கள் பகட்டானதாக மாறி விடுகின்றன'' என கூறியிருந்தார்.

தீவிரவாதிகள் மற்றும் தீங்கு இழைக்கும் எண்ணம் கொண்ட யார் வேண்டுமானாலும், இத்தகைய கார்களை எளிதாக அடையாளம் கண்டு கொண்டு, சுலபமாக குறி வைக்க முடியும் எனவும் ராகேஷ் அகர்வால் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இத்தகைய கார்களின் காரணமாக விபத்தில் சிக்கும் ஒருவரால் இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய முடியாது எனவும் ராகேஷ் அகர்வால் தெரிவித்திருந்தார். அந்த கார்களில் அடையாள குறியீடாக நம்பர் பிளேட் இல்லாததே இதற்கு காரணம் என்பது அவரது கூற்று.

வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்தாமல் இருப்பது, இந்திய மோட்டார் வாகன சட்டம் 1988ன் செக்ஸன் 41 (6)ன் படி, சட்ட விரோதமானது என ராகேஷ் அகர்வால் தெரிவித்திருந்தார். எனவே அத்தகைய வாகனங்களின் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையை, பொறுப்பு தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய பென்ச் நடத்தியது. அப்போது அனைத்து வாகனங்களும் சந்தேகத்திற்கு இடமின்றி, இந்திய மோட்டார் வாகன சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என அவர்கள் உத்தரவிட்டனர்.

அத்துடன் அவர்களின் அதிகாரப்பூர்வ வாகனங்கள் பதிவு செய்யப்படுவதை மத்திய அரசு மற்றும் டெல்லியை ஆளும் ஆத் ஆத்மி அரசுகள் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்த மத்திய அரசு அதிகாரிகள், கார்களை பதிவு செய்வதுடன், நம்பர் பிளேட் பொருத்தி, விதிகளுக்கு உட்பட்டு இயக்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள் என சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தனர்.

அத்துடன் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்த ஒரு சில கார்களில் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு விட்டதாகவும் அவர்கள் கூறினர். டெல்லி மாநில அதிகாரிகளும் கிட்டத்தட்ட இதே கருத்தைதான் எதிரொலித்தனர்.

புது டெல்லியில் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் அனைத்து கார்களும் சட்டத்திற்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டு விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதன்மூலம் விவிஐபி கலாசாரம் ஒழித்து கட்டப்பட்டுள்ளது. அத்துடன் தீவிரவாத அச்சுறுத்தலும் குறைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








