சென்னையில் 'ஆக்சிஜன் ஆட்டோ' சேவை... உயிர்காக்கும் உன்னத சேவையில் இறங்கிய தன்னார்வலர்!
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஆக்சிஜன் பொருத்தப்பட்ட ஆட்டோ மூலமாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் உன்னத பணியை வசந்தகுமார் என்ற தன்னார்வலர் செய்து வருகிறார்.

கொரோனா பெருந்தொற்று நாட்டின் முக்கிய நகரங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனால், இயல்பு நிலை முடங்கி அசாரணமான சூழலில் மக்கள் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில் உள்ளவர்களுக்கு கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதனை வெளியில் இருந்து சிலிண்டர்கள் அல்லது ஆக்சிஜன் உற்பத்தி எந்திரங்கள் மூலமாக வழங்க வேண்டிய நிலை இருக்கிறது.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென உயர்ந்ததால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், நாடு முழுவதும் பல இடங்களில் உள்ள கொரோனா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியான சூழலில், அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும், அதற்கு உறுதுணையாக தன்னார்வலர்களும் முன்களப் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். தங்களது உயிரை துச்சமென மதிப்பு, பிறரின் உயிர்காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் உள்ள நோயாளிகளை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அரிய பணியில் இறங்கி உள்ளார் சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த வசந்தகுமார் என்ற தன்னார்வலர்.

தனது தொண்டு நிறுவனம் மூலமாக கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்க்கும் பணியை செய்து வருகிறார். இதற்காக, ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் உபகரணங்கள் பொருத்தப்பட்ட இரண்டு ஆட்டோரிக்ஷாக்களை கொரோனா நோயாளிகளுக்காக உருவாக்கி இருக்கிறார்.

ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காமல் அவதிப்படுபவர்கள் மற்றும் ஆக்சிஜன் கிடைக்காதவர்களுக்கு வசந்தகுமார் உருவாக்கி இருக்கும் இந்த ஆட்டோரிக்ஷாக்கள் பேருதவியாக அமைந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று தீயாய் பரவி வரும் நிலையில், மக்கள் வெளியே வருவதற்கே அச்சப்படும் நிலையில், வசந்தகுமாரின் இந்த உதவிக்கு அப்பகுதியை சேர்ந்த பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Image Courtesy: Vasanthkumar.C


Click it and Unblock the Notifications








