காசி விஸ்வநாதர் ஆலய வளாக திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி பயன்படுத்திய கார் எது தெரியுமா?
காசி விஸ்வநாதர் ஆலய வளாக திறப்பு விழாவிற்கு புல்லட் புரூஃப் வசதி கொண்ட நவீன ரக எஸ்யூவி காரை பிரதமர் மோடி பயன்படுத்தி உள்ளார். காசி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் காரும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த கார் குறித்த முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் இந்துக்களின் முக்கிய புனித தலமாக விளங்குகிறது. வாழ்வில் ஒருமுறையாவது காசி விஸ்வநாதரை தரிசிக்க வேண்டும் என்று இந்துக்கள் விரும்புகின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த காசி விஸ்வநாதர் ஆலயம் பெரும் பொருட்செலவில் புனரமைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், பிரதமர் மோடியின் சொந்த தொகுதி என்பதால், காசி விஸ்வநாதர் ஆலய புனரமைப்பு மற்றும் பக்தர்களின் வசதிக்கான விரிவாக்கத் திட்டங்கள் பெரும் பொருட்செலவில் தனி கவனத்துடன் செயல்படுத்தப்பட்டது. ரூ.600 கோடி மதிப்பீட்டில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவிற்கு கோயில் விரிவாக்கத் திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கங்கை நதிக் கரை படித்துரையில் இருந்து ஆலயத்தை நேரடியாக இணைக்கும் வகையில், 320 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அலமும் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து, பக்தர்களின் வசதிக்காகவும், வழிபாடுகள் தங்கு தடையின்றி நடப்பதற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேகம் கடந்த ஜூலை மாதம் நடந்த நிலைியல், இன்று கோயில் மற்றும் விரிவாக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளதால், அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்காக காசி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில், இன்று கோயில் விழாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடி டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவியை பயன்படுத்தினார். இந்த எஸ்யூவியானது புல்லட் புரூஃப் வசதி கொண்டது.

வழிநெடுகிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. காரின் மீது மலர் தூவியும், பாரம்பரிய தலைப்பாகையை அணிவித்தும் அவருக்கு காசி மக்கள் வரவேற்பு கொடுத்தனர்.

பிரதமராவதற்கு முன்பு வரை குஜராத் முதல்வராக பதவி வகித்தபோது மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியை பயன்படுத்தி வந்தார். அதன்பிறகு பிரதமருக்கு வழங்கப்பட்ட பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் புல்லட் புரூஃப் காரை பயன்படுத்த துவங்கினார்.

இதுதவிர்த்து, லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர் மற்றும் முந்தைய தலைமுறை டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவி கார்களை பயன்படுத்தினார். இந்த நிலையில், புதிய டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவியை பிற நகரங்களுக்கு செல்லும்போது அதிகம் பயன்படுத்தி வருகிறார்.

இந்த எஸ்யூவி ரூ.2 கோடி விலை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த எஸ்யூவி காரின் புல்லட் புரூஃப் வெர்ஷன் இந்தியாவில் நேரடியாக விற்பனை செய்யப்படவில்லை. எனவே, ஆர்டர் செய்து பின்னர் புல்லட் புரூஃப் உள்ளிட்ட பிரதமர் வாகனத்திற்கு உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி பயன்படுத்தும்போது டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவி காரில் 4.5 லிட்டர் வி8 டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 262 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 4 வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எந்த ஒரு சாலை நிலையிலும், சூழலிலும் எளிதாக செலுத்துவதற்கான திறன் வாய்ந்ததாகவும் கூறலாம்.

நாட்டின் தலைநகர் டெல்லியை விட்டு வேறு நகரங்களுக்கு செல்லும்போது இந்த எஸ்யூவியை காரையே தற்போது அவர் அதிகம் பயன்படுத்துகிறார்.

நாட்டின் மூன்றாவது குடிமகனான பிரதமரின் அதிகாரப்பூர்வ கார்கள் பல்வேறு தகுதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுகின்றன. அவரது தனிப்பட்ட பாதுகாப்புப் பிரிவு வகுத்துள்ள பாதுகாப்பு விதிகளுக்கு இணையானதாக இருந்தால் மட்டுமே அந்த கார்கள் பிரதமரின் அதிகாரப்பூர்வமான காராக தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








