பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு புதிய ஜம்போ விமானம்!!
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக இரண்டு போயிங் ஜம்போ விமானங்களை ஏர் இந்தியாவிடமிருந்து கையகப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய போயிங் விமானங்கள் இடைநில்லாமல் நீண்ட தூரம் பயணிக்கும் என்பதுடன், நவீன பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கும்.
இதுதொடர்பாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன்படி, பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோர் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்காக 2 புதிய போயிங் 777-300 ஜம்போ விமானங்களை கையகப்படுத்தி, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழைய விமானங்கள்
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபி.,களின் வெளிநாட்டு பயணங்களுக்கு போயிங் 747 விமானம் பயன்படுத்தப்படுகிறது. ஏர் இந்தியா ஒன் என்று அழைக்கப்படும் இந்த விமானங்கள் கடந்த 20 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கின்றன. இதற்கு பதிலாக புதிய விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசின் பாதுகாப்புத் துறை முடிவு செய்திருக்கிறது.

பிரயோஜனமில்லை...
கடந்த 2009ம் ஆண்டு ஜனாதிபதி, பிரதமர் பயன்பாட்டிற்காக ரூ.937 கோடி மதிப்பீட்டில் புதிதாக மூன்று போயிங் பிசினஸ் ஜெட் விமானங்கள் வாங்கப்பட்டன. ஆனால், அவை 3,000 நாட்டிக்கல் மைல் தூரம் மட்டுமே பயணிக்கும் திறன்கொண்டவை. எனவே, இடைநில்லாமல் நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்ட புதிய விமானங்களை கையகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஏர் இந்தியா விமானங்கள்
இந்த இரண்டு போயிங் 777-300 விமானங்களையும் ஏர் இந்தியாவிடமிருந்து வாங்குவதற்கு மத்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான, நடைமுறைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு விமானங்களிலும் வாங்கியவுடன், அதில் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட மத்திய பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்
தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா ஒன் விமானங்களில் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் இல்லை. இந்த நிலையில், புதிதாக ஏர் இந்தியாவிடமிருந்து வாங்கப்பட இருக்கும் போயிங் விமானங்களில் ஏவுகணை தாக்குதல்களை கண்டறியும் ரேடார் சாதனங்களும், அதனை முறியடிப்பதற்கான பாதுகாப்பு கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கும்.

சாட்டிலைட் தொடர்பு சாதனங்கள்
புதிய போயிங் விமானங்களில் செயற்கைகோள் வழியாக எளிதாக தொடர்பு கொள்ளும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை மிக நவீன தொடர்பு வசதிகளை அளிக்கும்.

பாலம் விமானப்படை
டெல்லி, பாலம் விமானப்படை தளத்திலிருந்து இந்த இரண்டு புதிய விமானங்கள் இயக்கப்படும். வழக்கம்போல், பைலட்கள், எஞ்சினியர்கள் போன்றவற்றை விமானப்படையும், விமானத்தின் பராமரிப்புப் பணிகளை ஏர் இந்தியாவும் மேற்கொள்ளும். விமானத்தை பற்றிய தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

டாப் ஸ்பீடு
போயிங் 777-300ER விமானம் அதிகபட்சமாக மணிக்கு 950 கிமீ வேகத்தில் பறக்கும். இதன் க்ரூஸிங் வேகம் மணிக்கு 905 கிமீ.

எஞ்சின்
இந்த விமானத்தில் இரண்டு ஜிஇ90-115 பி டர்போஃபேன் ஜெட் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உலகின் அதிசக்திவாய்ந்த விமான எஞ்சின்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.

ரேஞ்ச்
ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 14,492 கிமீ தூரம் இடைநில்லாமல் பறக்கும் திறன் கொண்டது.

இடவசதி
இது 777 -300இஆர் மாடல் அதிக இடவசதி கொண்டது. இந்த விமானத்தை விவிஐபி.,களின் பயணத்திற்கு ஏதுவாக படுக்கையறை, அலுவலக அறை, கூட்ட அரங்கம், சாப்பாட்டு கூடம் போன்றவை கொண்டதாக மாற்றியமைத்து கொடுக்கின்றனர். எனவே, இது ஆடம்பர ஓட்டலில் இருப்பது போன்ற பயண அனுபவத்தை வழங்கும்.


Click it and Unblock the Notifications








