சொன்னபடியே ஒலிம்பிக் நாயகிகளுக்கு தார் எஸ்யூவிகளை பரிசளித்த மஹிந்திரா!
ஏற்கனவே அறிவித்தப்படியே, ரியோ ஒலிம்பிக் போட்டியில், பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பிவி. சிந்து மற்றும் சாக்ஷி மாலிக் ஆகிய இருவருக்கும் கூடுதல் ஆக்சஸெரீகளுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட தார் எஸ்யூவிகளை மஹிந்திரா நிறுவனம் பரிசாக வழங்கியது.
அண்மையில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு பதக்கத்தை கூட பெற முடியாதா என்ற ஏக்கம் அனைத்து இந்தியர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில், போட்டிகள் முடிவுக்கு வரும் தருவாயில் மல்யுத்தத்தில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் வெண்கல பதக்கம் வென்று நாட்டின் மானத்தை காப்பாற்றினார்.

இதனை ஒட்டு மொத்த இந்திய தேசமும் பெருமையுடன் கொண்டாடியது. இந்தநிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெண்கல பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த சாக்ஷி மாலிக்கிற்கு மஹிந்திரா தார் எஸ்யூவியை பரிசாக அறிவித்தார்.

அதேநேரத்தில், பேட்மிண்டன் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த பிவி.சிந்துவும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து, பிவி சிந்துவுக்கும் தார் எஸ்யூவியை ஆனந்த் மஹிந்திரா பரிசாக அறிவித்தார்.

இந்த நிலையில், இந்த போட்டியில் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தார். இந்தநிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, வீராங்கனைகளுக்கு நேற்று தார் எஸ்யூவிகள் பரிசாக அளிக்கப்பட்டது.

பிவி. சிந்துவுக்கு அவர் வாங்கிய வெள்ளிப்பதக்கத்தை நினைவுபடுத்தும் விதத்தில் சில்வர் வண்ண தார் எஸ்யூவி பரிசளிக்கப்பட்டிருக்கிறது. பானட்டில் இரண்டு வெள்ளி வண்ணத்திலான கோடுகளுடன் வித்தியாசப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதேபோன்று, சாக்ஷி மாலிக்கிற்கு சிவப்பு நிற தார் எஸ்யூவியில், அவர் வெண்கல பதக்கத்தை வாங்கியதை பெருமைப்படுத்தும் விதத்தில் முன்புற பானட் மற்றும் கிரில்களில் பித்தளை வண்ண பூச்சுடன் பரிசாக அளிக்கப்பட்டது.

மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவின் அதிகாரி பவன் கோயங்கோ நேற்று நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் இந்த தார் எஸ்யூவிகளின் சாவியை வீராங்கனைகளிடம் முறைப்படி ஒப்படைத்தார். மேலும், இந்த எஸ்யூவிகள் இரு வீராங்கனைகளின் விருப்பங்களின்படி, கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆஃப்ரோடு சாகசங்கள் செல்வதற்கு ஏற்ற ஸ்நோர்கெல், புல் பார்கள், அகலமான டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. புதிய பம்பர்களும் கொடுக்கப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

தார் எஸ்யூவி தவிர்த்து, ஏற்கனவே பிஎம்டபிள்யூ கார்களும் இருவருக்கும் பரிசாக வழங்கப்பட்டது. இதில், தனக்கு கிடைத்த பிஎம்டபிள்யூ காரை தனது தந்தைக்கு வழங்கப்போவதாக சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








