இனி சீனா வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும்... லடாக் பாதுகாப்பில் இணையும் ரஃபேல் போர் விமானம்!
எல்லையோரம் சீனா அத்துமீறி வரும் நிலையில், 5 ரஃபேல் போர் விமானங்கள் வரும் 29ந் தேதிக்குள் இந்தியா வர இருக்கின்றன. இதுதொடர்பான கூடுதல் விபரங்கள், உலகின் அதிநவீன ரஃபேல் போர் விமானத்தின் சிறப்புகளை தொடர்ந்து பார்க்கலாம்.

எல்லையில் அவ்வப்போது சீண்டி வரும் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. மேலும், பதட்டம் நிறைந்த லடாக் பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, விரைவில் ரஃபேல் போர் விமானங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

கடந்த மாதம் லடாக் பகுதியில் அத்துமீறிய சீன வீரர்களுடன் நடந்த சண்டையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீன தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த சம்பவத்தால், இந்தியா- சீனா இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், எல்லையோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதத்தில், ரஃபேல் போர் விமானங்களை உடனடியாக டெலிவிரி வழங்குமாறு பிரான்ஸ் நாட்டு அரசிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. இதனை ஏற்று, உடனடியாக ரஃபேல் போர் விமானங்களை இந்தியா அனுப்புவதற்கான நடைமுறைகளை பிரான்ஸ் நாட்டு அரசு எடுத்தது.

இதன் பயனாக, வரும் 27ந் தேதி முதல் தொகுப்பில் 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வர இருக்கின்றன. ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப் படை தளத்தில் இந்த புதிய ரஃபேல் போர் விமானங்கள் வரும் 29ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரஃபேல் போர் விமானங்களை வரவேற்பதற்கான சிறப்பு நிகழ்ச்சியும் அம்பாலா விமானப் படை தளத்தில் நடைபெற உள்ளது. இதில், மூன்று இரட்டை இருக்கைகள் கொண்ட ரஃபேல் போர் விமானமும், இரண்டு ஒற்றை இருக்கை வசதி கொண்ட தாக்குதல் ரஃபேல் போர் விமானங்களும் அடங்கும். இரட்டை இருக்கை வசதி கொண்ட விமானங்கள் புதிய விமானிகளுக்கு பயிற்சி கொடுப்பதற்கான மாடல்களாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த விமானங்களை உடனடியாக லடாக் பகுதியின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கு இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது. ரஃபேல் போர் விமானங்கள் இயக்கும் இந்திய விமானப் படை விமானிகள் ஏற்கனவே பயிற்சி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விமானத்தை கையாள்வதற்காக இந்திய விமானப் படை விமானிகள் மற்றும் தரை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா வந்த பின்னரும் இந்த பயிற்சிகள் தொடர்ந்து நடக்கும். இந்த நிலையில், ரஃபேல் போர் விமானம் இந்திய விமானப் படைக்கு மிகவும் அவசியமாக கருதப்படுவதற்கு அதன் தொழில்நுட்ப அம்சங்கள்தான் காரணம்.

ரஃபேல் போர் விமானங்கள் ஸ்டீல்த் வகையை சேர்ந்தது. அதாவது, எதிரி நாட்டு ரேடாரில் அவ்வளவு எளிதாக சிக்கிவிடாது. இந்த வகை விமானங்கள் போர் காலத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கும், எல்லை தாண்டிய தாக்குதல்களிலும் மிக முக்கிய அஸ்திரமாக இருக்கும்.

காஷ்மீரின் லே மற்றும் லடாக் உள்ளிட்ட பிராந்தியங்களில் மிக உயரமான மலைப்பகுதிகளிலும், கடும் குளிரிலும் கூட இந்த ரஃபேல் போர் விமானத்தை இயக்க முடியும். இதற்கான பல சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களை இந்த விமானங்கள் பெற்றுள்ளன.

இந்த போர் விமானத்தில் இரட்டை எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் கடலோரத்தில் இருக்கும் படை தளங்களில் இருந்தும் இதனை எளிதாக இயக்க முடியும். எதிரிகளின் கண்களின் விரல் விட்டு ஆட்டும் விதத்தில், வேகமும், தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கிறது. அவ்வளவு எளிதாக சுட்டு வீழ்த்த முடியாது.

ரஃபேல் போர் விமானத்தில் 9 டன் எடையுடைய ஆயுதங்களை எடுத்துச் சென்று தாக்குதல் நடத்த முடியும். இதில் பொருத்தப்பட்டு இருக்கும் ஏவுகணைகள் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை குறி பார்த்து ஏவ முடியும். வானில் இருந்து வான் இலக்கு மற்றும் தரை இலக்குகளை துல்லியமாக அடிப்பதில் ரஃபேல் போர் விமானங்கள் ஏற்கனவே பெயர் பெற்றுவிட்டன.

ரஃபேல் போர் விமானங்களை இயங்கும் இந்திய விமானிகளுக்கு ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே கொண்ட விசேஷ ஹெல்மெட் கொடுக்கப்பட உள்ளது. ரேடார் வார்னிங், ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது.

கடந்த 2016ம் ஆண்டு ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரூ.58,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது.

முதல் தொகுப்பில் வரும் 5 விமானங்கள் லடாக் பிராந்திய பாதுகாப்புக்கு செல்கின்றன. இரண்டாவது தொகுப்பில் வரும் ரஃபேல் போர் விமானங்கள் மேற்கு வங்க மாநிலம், ஹசிமாரா படை தளத்தில் நிறுத்தப்படும். ரஃபேல் போர் விமானங்களை நிறுத்துவதற்கான கூடாரம், கட்டமைப்பு வசதிகள், கையாள்வதற்கான உபகரணங்கள், பராமரிப்பு மையங்களை உருவாக்குவதற்காக இந்திய விமானப் படை ரூ.400 கோடியை செலவிட்டுள்ளது.

மொத்தம் வாங்கப்படும் 36 ரஃபேல் போர் விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி கொடுப்பதற்கான இரட்டை இருக்கை வசதி கொண்டதாக இருக்கும். வரும் 2022ம் ஆண்டுக்குள் அனைத்து ரஃபேல் போர் விமானங்களும் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவிடும்.


Click it and Unblock the Notifications