செப்.10-ல் இந்திய விமானப்படையில் முறைப்படி இணைகிறது ரஃபேல் போர் விமானங்கள்!
வரும் 10ந் தேதி இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்கள் முறைப்படி இணைக்கப்பட உள்ளன. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

அண்டை நாடுகளால் ஏற்பட்டுள்ள கடும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இந்திய உள்ளது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக சீனா எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி வருவதால், கடும் பதட்டமான சூழல் உருவாகி இருக்கிறது.

இந்த பதட்டமான தருணத்தில், பிரான்ஸ் நாட்டிடம் ஆர்டர் செய்யப்பட்ட ரஃபேல் போர் விமானங்களின் முதல் தொகுதி கடந்த ஜூலை இறுதியில் இந்தியா வந்து சேர்ந்தன.

ரஃபேல் போர் விமானங்களின் வருகை அண்டை நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்க பெரிதும் உதவும் என்பதால், இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சிகர தருணமாக பார்க்கப்பட்டது.

மேலும், ரஃபேல் போர் விமானங்கள் சீனா குடைச்சல் கொடுத்து வரும் லடாக் எல்லைப் பிரதேசத்தில்தான் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

இந்த சூழலில், ரஃபேல் போர் விமானஙகள் கடந்த 15ந் தேதி சுதந்திர தினத்தன்று இந்திய விமானப் படையில் முறைப்படி இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.

இந்த நிலையில், வரும் 10ந் தேதி ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் முறைப்படி சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரஃபேல் போர் விமானங்களின் முதல் படைப் பிரிவு அம்பாலாவில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் அமைக்கப்பட உள்ளது.

வரும் 10ந் தேதி அங்கு நடைபெறும் விழாவில் முதல் தொகுதியில் வந்தடைந்துள்ள 5 ரஃபேல் போர் விமானங்களும் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்பு சேவையில் அர்ப்பணிக்கப்படும்.

இந்த நிகழ்வில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரான்ஸ் நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஃபேல் போர் விமானங்கள் வருகையின் மூலமாக இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4.5 தலைமுறை போர் விமான ரகத்தை சேர்ந்த ரஃபேல் போர் விமானம் அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களை எளிதாக சமாளிப்பதற்கான பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும், தொழில்நுட்பங்களையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








