எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக சூப்பரான நடவடிக்கை... இதைதான் எதிர்பாத்துகிட்டு இருந்தோம்!
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக அதிரடியான நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பவர்களுக்கு, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறை, அரசு நிலங்களை சலுகை கட்டணத்தில் வழங்கவுள்ளது.

இந்த நிலங்களுக்கான கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும் என தற்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி 50 சதவீத சலுகை கட்டணத்தில் அரசு நிலங்கள் வழங்கப்படவுள்ளன. 5 ஆண்டுகளுக்குள் அமைக்கப்படும் முதல் 500 புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவுள்ளது.

இதற்கான உத்தரவு நேற்று (செப்டம்பர் 28) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் மாநில அதிகாரிகள் கூறுகையில், ''பட்ஜெட் உரையின்போது ராஜஸ்தான் மாநில முதல் அமைச்சர் அசோக் கெலாட், ராஜஸ்தான் சூரிய ஆற்றல் கொள்கை, ராஜஸ்தான் காற்று மற்றும் ஹைப்ரிட் ஆற்றல் கொள்கை ஆகியவற்றை அறிவித்தார்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு சலுகை கட்டணம் நிலம் வழங்குவதற்கான ஏற்பாடுகள், இந்த கொள்கைகளின் கீழ் செய்யப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் ஃபாஸ்ட் (Fast) மற்றும் ஸ்லோ (Slow) என இரண்டு வகையான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகளவில் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு சுமார் 60 நிமிடங்கள் மட்டுமே ஆகும். அதே நேரத்தில் ஸ்லோ சார்ஜிங் ஸ்டேஷன்களை பயன்படுத்தினால், எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு சுமார் 6 மணி நேரம் வரை ஆகும்'' என்றனர். இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் மிகவும் குறைவாக உள்ளன.

அங்கொன்றும், இங்கொன்றும் என சார்ஜிங் ஸ்டேஷன்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால்தான், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் இன்னமும் தயக்கம் காட்டுகின்றனர். அந்த தயக்கத்தை தகர்ப்பதற்காகவே, ராஜஸ்தான் அரசு தற்போது சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகளவில் கட்டமைக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ராஜஸ்தான் மாநில அரசு மட்டுமல்லாது, ஒன்றிய அரசும் மற்றும் பல்வேறு மாநில அரசுகளும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை இதற்கு முக்கியமான உதாரணமாக கூறலாம்.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள், ஒன்றிய அரசின் ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ், மானியம் பெற முடியும். மேலும் மாநில அரசுகள் தங்களது எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ் வழங்கி வரும் மானியங்களையும் பெற்று கொள்ளலாம். ஆனால் அனைத்து மாநிலங்களும் இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்க தொடங்கவில்லை.

தற்போதைய நிலையில் டெல்லி, குஜராத் போன்ற சில மாநிலங்கள் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கி வருகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் மாநிலங்களின் பட்டியல் தொடர்ந்து நீண்டு கொண்டே செல்கிறது. ஏனெனில் பல்வேறு மாநிலங்கள் தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தற்போது மானியங்களை அறிவித்து வருகின்றன.

எனவே கூடிய விரைவில் அனைத்து மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும் என்பதால், அவற்றின் பயன்பாடு வரும் காலங்களில் வெகுவாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

தற்போதே அதற்கான அறிகுறிகள் அதிகமாக தென்படுகின்றன. கடந்த ஒரு சில மாத கால அளவில் மட்டும், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் என நிறைய எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சொகுசு மற்றும் செயல்திறன் மிக்க எலெக்ட்ரிக் கார்களும் இந்திய சந்தையில் தற்போது அறிமுகமாகி வருகின்றன.

இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைப்பதுதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முக்கியமான நோக்கமாக உள்ளது. அத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் இந்திய மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமாக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








