ஆள் இல்லாமல் இயங்கும் ரோபோ படகு: இஸ்ரேல் நிறுவனம் அறிமுகம்
ஆள் இல்லாமல் இயக்கும் வசதி கொண்ட படகு மாடலை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த எல்பிட் சிஸ்டம்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
எதிர்காலத்தில் கடற்படைகளில் முக்கிய பங்கு வகிக்கப்போகும் இந்த ஆள் இல்லாமல் இயங்கும் படகு கான்செப்ட் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படகின் சிறப்புகள், பயன்பாட்டு நோக்கம் உள்ளிட்டத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவம்
இந்த படகிற்கு Seagull என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த ஆள் இல்லா படகு 39.4 அடி நீளம் கொண்டது. இந்த படகில் அதிநவீன ரேடார் சாதனங்கள் மற்றும் ரோபோட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

நோக்கம்
கடற்பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை, கண்காணிப்பு போன்றவற்றிற்கு இந்த படகை பயன்படுத்த முடியும். குறிப்பாக, எதிரிநாட்டு நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும்.

கண்ணி வெடி அகற்றும் பணி
கடற்பகுதிகளில் எதிரிகள் வைத்திருக்கும் கண்ணி வெடிகளை கண்டறிந்து, அதனை செயல் இழக்கச் செய்வதற்காகவே இந்த படகு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கையில் மனிதர்களை ஈடுபடுத்த தேவையில்லை.

ரிமோட் கன்ட்ரோல்
மற்றொரு கப்பலிலிருந்தோ அல்லது தரையிலிருந்து இந்த ரோபோ படகை இயக்க முடியும். ஒரே நேரத்தில் இரண்டு படகுகளை ஒரே கட்டுப்பாட்டு அமைப்பு மூலமாக கட்டுப்படுத்த முடியுமாம்.

பயணிக்கும் திறன்
கடலில் அதிகபட்சமாக 96 மணிநேரம் வரை இருக்கும் வசதி கொண்டது.

தானியங்கி வசதி
இந்த படகில் நவீன வகை தானியங்கி நேவிகேஷன் சிஸ்டம் உள்ளது. இதன்மூலமாக, வழியில் உள்ள தடைகள் மற்றும் பொருட்களை எளிதாக கண்டுணர்ந்து பயணிக்கும். மேலும், சர்வதேச கடல் போக்குவரத்து பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு இந்த படகு செயல்படும்.

உலக நாடுகள் ஆர்வம்
இந்த ஆள் இல்லா படகின் செயல்பாடுகளை உலகின் பல நாடுகள் ஆர்வமுடன் கவனித்து வருகின்றன. இதன் சோதனைகள் முழுமையாக வெற்றியடைந்து பயன்பாட்டுக்கு வரும்போது, எக்கச்சக்க ஆர்டர்கள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமானம்
ஒருவேளை கண்ணி வெடி அகற்றும்போது வெடித்தால்கூட, அதில் சேதமடையாத மிக உறுதியான கட்டமைப்புடன் இந்த படகு உருவாக்கப்பட்டிருப்பதாக எல்பிட் சிஸ்டம்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் தீவிரம்
இதேபோன்றே ஆள் இல்லாமல் இயங்கும் படகுகளை அமெரிக்க கடற்படையும் தீவிரமாக சோதனைகள் நடத்தி வருகிறது. மேலும், ஒரே கட்டுப்பாட்டு அமைப்பு மூலமாக 13 ஆள் இல்லா படகுகளை இயக்கி அந்நாட்டு கடற்படை சோதனை நடத்தியிருக்கிறது. வரும் 2019ம் ஆண்டில் அமெரிக்க கடற்படையில் இந்த ஆள் இல்லா படகு பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வீடியோ
சீகல் படகை வீடியோவில் காணலாம்.
Photo Credit: Youtube


Click it and Unblock the Notifications








