இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் இப்படியொரு வசதியா... நம்ம பர்ஸ்ஸ காப்பாத்திக்க இதுதான் நல்ல சேன்ஸ்!
இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் யாரும் எதிர்பார்க்காத ஓர் வசதி பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

அண்மைக் காலங்களாக பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடுமளவிற்கு நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றது. தலைநகர் டெல்லியில் முதல் முறையாக பெட்ரோலின் விலையை டீசல் வீழ்த்தியது. இது இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாகும். இதுபோன்ற ஓர் விலையுயர்வை இந்திய மக்கள் இதற்கு முன்பு பார்த்திருக்க மாட்டார்கள்.

உலக நாடுகள் பலவற்றில் எரிபொருள் விலை மிகக் குறைந்து காணப்படுகின்றநிலையில், இந்தியாவில் மட்டும் உச்சத்தில் காணப்படுகின்றது. இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் உச்சபட்ச வரி விதிப்பே காரணம் கூறப்படுகின்றது. இந்த விலையுயர்வின் காரணத்தினால் டீசல் வாகனங்களைத் தேடிப்பிடித்து வாங்கிய மக்கள் தற்போது செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி வரும் வேலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வு மக்களை மிக அதிகமாக வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. அதிலும், எரிபொருளின் விலையுயர்வு கூடுதல் சுமையை மக்கள் தலையில் சுமத்தும் வகையில் இருக்கின்றது. ஏற்கனவே, வேலையிழப்பு, வருமானம் இல்லாதது என பல்வேறு சிக்கலில் தவித்து வரும் மக்களுக்கு எரிபொருள் விலையுயர்வு கூடுதல் பாரத்தை வழங்கும் வகையில் உள்ளது.

இப்போதுதான் பலருக்கு மின்சார வாகனத்தின் அருமையைப் புரியத் தொடங்கியிருக்கின்றது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பல எலெக்ட்ரிக் வாகனத்தின் விற்பனையை ஊக்குவித்து வருகின்றன. இவை, எரிபொருள் விலையுயர்வில் இருந்து தப்பிக்க உதவும். இதுமட்டுமின்றி காற்று மாசுபாட்டைக் குறைந்து சுற்றுப்புறச் சூழலுக்கு நண்பனாகவும் விளங்கும். எனவே, நம்முடைய பர்சை மட்டுமில்லைங்க, மின் வாகனத்தின் மூலம் இயற்கையையும் நம்மால் காப்பாற்ற முடியும்.

எனவேதான் இந்தியாவில் மின் வாகனங்களை ஊக்குவிக்கின்ற முயற்சிகள் பல செய்யப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், இந்தியன் ஆயில் நிறுவனம் நாட்டின் குறிப்பிட்ட நகரங்களில் செயல்படும் பெட்ரோல் பங்குகளில் ஸ்வாப்பபிள் பேட்டரி நிலையங்களைப் பயன்பாட்டுக் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதற்கு மின் வாகனங்களுக்கான கட்டமைப்பு போதியளவு இல்லாததே மிக முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக, சார்ஜ் நிலையங்கள் இன்னும் பெரியளவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை. எனவேதான் மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் திரும்ப தயக்கம் காட்டி வருகின்றனர்.

இம்மாதிரியான சூழ்நிலையில் நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் பேட்டரி ஸ்வாப்பிங் வசதியைக் கொண்டுள்ளது. இது மின்வாகன பிரியர்கள் மற்றும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவோர் மத்தியில் வரவேற்பைப் பெற தொடங்கியுள்ளது.

சண்டிகர் மாநிலத்தில்தான் இத்திட்டம் முதல் கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இத்துடன், புது தில்லி, குருகிராம், பெங்களூரு மற்றும் அம்ரித்ஸர் உள்ளிட்டவற்றிலும் இந்த ஸ்வாப்பபில் பேட்டரி நிலையங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

இதனை சோதனையோட்ட முறையில் இந்தியன் ஆயில் தொடங்கியிருப்பதால் எலெக்ட்ரிக் ஆட்டோ மற்றும் டூ வீலர்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. விரைவில் கார் மற்றும் பிற மின் வாகனத்தையும் சார்ஜ் செய்கின்ற வசதி மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய ஸ்வாப்பபிள் பேட்டரி வசதிக்காக சன் மொபிலிட்டி நிறுவனத்துடன் அது கூட்டு வைத்துள்ளது.

சன் மொபிலிட்டி நிறுவனமே, இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் ஸ்வாப்பபிள் பேட்டரி நிலையங்களை நிறுவியுள்ளது. இதன் ஒவ்வொரு அவுட்லெட்டுகளிலும் குறைந்தது 14 பேட்டரிகள் இடம்பெற்றிருக்கும். அவற்றை பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








