சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பலை மிதக்கவிட பெரும் போராட்டம்... இயற்கை கைகொடுக்குமா?
சூயஸ் கால்வாயில் தரை தட்டி நிற்கும் கப்பலை மிதக்கவிட பெரும் போராட்டத்தை மீட்பு நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர். இன்றைக்கு எடுக்கப்படும் மீட்பு நடவடிக்கைகளுக்கு சாதகமான சூழல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சூயஸ் கால்வாயில் தரை தட்டி நிற்கும் கப்பல் உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது. நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருப்பதால், கப்பல் போக்குவரத்து பெரும் பாதிப்படைந்துள்ளது.

கடந்த செவ்வாய் கிழமையன்று சூயஸ் கால்வாயை கடந்து கொண்டிருந்த எவர்கிவன் என்ற அந்த உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல் மணல் புயலில் சிக்கி தரை தட்டியது. மிக குறுகலான அந்த ஒரு வழித்தடத்தை மிக நிதானமாக கடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கப்பலின் முன்புறம் கரை தொட்டு தரை தட்டியது.

இந்த கப்பல் 400 மீட்டர் நீளம் கொண்டிருக்கும் நிலையில், 300 மீட்டர் மட்டுமே அகலம் கொண்ட சூயஸ் கால்வாயை குறுக்காக நிற்பதால், போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்து போய்விட்டது. மண்ணில் புதைந்து சிக்கிக் கொண்டிருக்கும் கப்பலின் முன்புறத்தை விடுவிப்பதற்காக பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

மேலும், பார்ஜர் எனப்படும் இழுவை கப்பல்களை பயன்படுத்தி நகர்த்தும் முயற்சியும் பலனளிக்கவில்லை. சுமார் 20,000 கன்டெய்னர்கள் ஏற்றப்பட்ட நிலையில், சிக்கிக் கொண்டிருப்பதால், மீட்புப் பணி என்பது மிக மிக சவாலாக மாறி இருக்கிறது.

கப்பலை வேகமாக இழுத்து ஒருபக்கம் சாய்ந்துவிட்டால் நிலைமை இன்னும் சிக்கலாகிவிடும் என்பதால், கப்பலில் பாரத்தை குறைத்து மிதக்க விடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், சூயஸ் கால்வாயில் நீரோட்டம் மற்றும் அலைகள் இன்று சாதகமாக அமையும் சூழல் இருக்கிறது. இதனை பயன்படுத்தி கப்பலை மிதக்கவிட முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கப்பலை மீட்பதற்கான முயற்சியில் 10 இழுவை கப்பல்கள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கப்பல் தரை தட்டி இருக்கும் கரைப் பகுதியில் மண்ணை வெட்டி எடுக்கும் பணிகளும், கப்பலுக்கு கீழே தரைப்பகுதியை ஆழப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், நீரோட்டம் சாதகமாக அமைந்து, மண்ணில் புதைந்துள்ள கப்பலின் பாகம் விடுபட்டால் இன்றே போக்குவரத்து சீரடையும். கப்பலில் இருக்கும் கன்டெய்னர்களை அப்புறப்படுத்துவது மிக கடினமான பணியாகவும் கருதப்படுகிறது. இதனால், மீட்புக் குழுவினர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், பல நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு பிரச்னையை சந்திக்கும் நிலை உள்ளது. இது பல நாடுகளை கவலை கொள்ள செய்யும் விஷயமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








