இந்த நேரம்தான் வாகனங்களுக்கு எமகண்டம்.. உரிமையாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை..
வாகன திருட்டு தொடர்பான அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்களை, போலீசார் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வாகன திருட்டு தொடர்பான அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்களை, போலீசார் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் வாகன திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த சூழலில், நாட்டின் தலைநகர் டெல்லியில் நடைபெறும் வாகன திருட்டு தொடர்பான புள்ளி விபரங்களை அம்மாநில போலீசார் வெளியிட்டுள்ளனர்.

டெல்லியில் திருடுபோகும் மொத்த வாகனங்களில், 55 சதவீத வாகனங்கள் வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்படுபவைதான். எனவே வீடுகளுக்கு வெளியே வாகனங்களை பார்க்கிங் செய்வது பாதுகாப்பற்ற ஒன்றாக கருதப்படுகிறது.

ஆனால் அலுவலகங்களுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்கள், 1 சதவீதம் மட்டுமே திருடு போகின்றன. இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையிலான நேரத்தில், 44 சதவீத வாகனங்கள் திருடப்படுகின்றன எனவும் போலீசார் வெளியிட்டுள்ள டேட்டா தெரிவிக்கிறது.

அதே நேரத்தில், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலான நேரத்தில், 16 சதவீத வாகனங்கள் திருடு போகின்றன. வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு என முறையான இடம் இல்லாததே, வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ''செகண்ட் ஹேண்ட் வாகன டீலர்களும், வாகன கொள்ளையர்களும் கூட்டணி அமைத்து செயல்படும் தகவல் எங்களுக்கு தெரியவந்துள்ளது. செகண்ட் ஹேண்ட் டீலர்கள் கேட்கும் வாகனங்களை, கொள்ளையர்கள் திருடி கொடுக்கின்றனர்.

அதனை செகன்ட் ஹேண்டில் வாகனம் வாங்குபவர்களின் தலையில் சில டீலர்கள் கட்டிவிடுகின்றனர். இரவு நேரங்களில் வீடுகளுக்கு வெளியே பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தியிருப்பதால், கொள்ளையர்கள் தங்களுக்கு என்ன வாகனம் தேவையோ, அதனை மிக எளிதாக திருடி விடுகின்றனர்'' என்றார்.

அந்த போலீஸ் அதிகாரி மேலும் கூறுகையில், ''பல்வேறு இடங்களில், இரவு நேர பாதுகாவலர்கள் காவலுக்கு இருப்பதில்லை. எனவே இரவு நேரங்களில், பாதுகாப்பு குறைவாக உள்ளது. அத்தகைய நேரங்களை கொள்ளையர்கள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர்'' என்றார்.

டெல்லியில் நடப்பாண்டு ஜூன் 30ம் தேதி வரை மட்டும், 21,298 வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளது. இதில், 12,689 வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள்தான். அதாவது திருடுபோகும் மொத்த வாகனங்களில் சுமார் 60 சதவீதம், மோட்டார் சைக்கிள்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளையர்கள் அதிகம் குறி வைப்பது மோட்டார் சைக்கிள்களாகதான் உள்ளது. இதுதவிர இதே கால கட்டத்தில், 3,871 கார்கள் மற்றும் 3,237 ஸ்கூட்டர்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 7 சதவீதம், இதர வாகனங்கள் ஆகும்.

திருடப்படும் வாகனங்களின் மூலமாக, செயின் பறிப்பு, கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களையும் கொள்ளையர்கள் அரங்கேற்றி வருகின்றனர். எனவே வாகன உரிமையாளர்கள் அனைவரும், தங்களின் வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் பார்க்கிங் செய்து, கவனமாக இருந்து கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








