மர்மமான கார் விபத்துக்களும், அதில் உயிரிழந்த பிரபலங்களும்!!
வாகன பெருக்கம், போக்குவரத்து விதிமீறல்களால் சாலை விபத்துக்கள் என்பது திணிக்கப்படும் விஷயமாகிவிட்டது. இருப்பினும், பெரும்பாலான விபத்துக்களுக்கு அதிவேகமும், கவனக்குறைவும் காரணமாக இருக்கிறது.
ஆனால், இந்த செய்தியில் பார்க்கப் போகும் விபத்துக்களின் காரணங்கள் மர்மங்கள் நிறைந்ததாகவே பார்க்கப்படுகின்றன. இவை இயற்கையாக நடந்தது போன்று இருந்தாலும், இதில், திட்டமிட்ட சதி இருப்பதாகவும் கருதப்படுகின்றன. அதுபோன்ற, 10 கார் விபத்துக்களையும், அதில் பலியான பிரபலங்கள் பற்றிய தகவல்களையும் காணலாம்.

07. பால்வாக்கர்
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் சினிமா மூலம், உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பால்வாக்கர் கடந்த 2013ம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் மரணமடைந்தார். அவருடைய நெருங்கிய நண்பர்தான் காரை ஓட்டியுள்ளார். அதிவேகத்தில் கார் சென்றதால், கட்டுப்பாட்டடை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. ஆனால், பால்வாக்கர் போன்றே அவரது நண்பரான ரோஜர் ரோடஸ்தான் ஓட்டினார். அந்த காரை அவர் புதிதாக ஓட்டவில்லை. பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த அந்த காரை அவர் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை பலர் ஏற்கவில்லை. மேலும், பால்வாக்கரின் நண்பர் ரோஜர் ரோடஸ் கார் பந்தய வீரராக இருந்தும் காரை கடுப்படுத்த முடியவில்லை என்பதே இதன் பின்னணியில் ஏதோ மர்மம் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

06. மைக்கேல் ஹேஸ்டிங்ஸ்
நியூஸ் வீக் இதழின் செய்தியாளரான மைக்கேல் ஹேஸ்டிங்ஸ், ஈராக் போர் குறித்த தகவல்களை வெளியுலகுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தார். இந்தநிலையில், கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 18ந் தேதி மைக்கேல் ஹேஸ்டிங்ஸ் தனது மெர்சிடிஸ் சி250 காரில் சென்ற கொண்டிருந்தார். அப்போது, அந்த கார் எதிர்பாராத வகையில், ஒரு பனை மரத்தில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில், மைக்கேல் ஹேஸ்டிங்ஸ் தீயில் கருகி உயிரிழந்தார். ஆனால், மைக்கேலின் நண்பர்கள் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்தாக கருதுகின்றனர். மேலும், மைக்கேல் சென்ற காரின் ஆன்போர்டு கம்ப்யூட்டரை ஹேக் செய்து, விபத்தை ஏற்படுத்தப்பட்டதாகவும், இதன் பின்னணியில் அமெரிக்காவின் எஃப்பிஐ புலனாய்வு அமைப்பின் கைங்கர்யம் இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், இதனை அந்த அமைப்பு மறுத்து வருகிறது.

05. மரண சாலை
இங்கிலாந்தின், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள ஓல்டுநல் சாலையின் குறிப்பிட்ட தூரத்தை மரணப் பகுதியாக அருகில் உள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த பகுதியில் ஏராளமான சாலை விபத்துக்கள் நடப்பதோடு, சில வாகன ஓட்டுனர்கள், இந்த சாலையில் பேய் நடமாட்டம் இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும், இளம் பெண் போன்ற தோற்றமுடைய பேய் ஒன்று, ஓட்டுனர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதே விபத்துக்களுக்கு காரணமாகவும் கூறுகின்றனர். இதற்கு வலு சேர்க்கும் விதமாக மூன்று நாட்களில் நடந்த தொடர் விபத்துக்களும் காரணமாக குறிப்பிடப்படுகிறது.

04. அரசியல் தலைவரின் மர்ம விபத்து
ஸ்காட்லாந்து நாட்டின் பிரபல வழக்கறிஞரும், மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் நெருங்கிய நண்பருமான வில்லி மெக்ரேயின் கார் விபத்தும் இன்றுவரை அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகளை கொண்டது. இஸ்ரேல் நாட்டின் அரசியல் சாசனத்தை வகுத்தவர்களில் முக்கியமானவரான இவர் ஸ்காட்லாந்து நாட்டின் தேசிய கட்சியின் பிரபல தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். 1986ம் ஆண்டு ஏப்ரல் 4ந் தேதி மெக்ரே வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் தீப்பிடித்தது. இதைத்தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறிய அவர் தனது காரில் வேறு பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்தநிலையில், அவரது கார் நிலைதடுமாறி, விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தா். இதையடுத்து, நடந்த விசாரணயில், மெக்ரே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால், அவரை வேறு யாரோ துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக, அவரது ஆதரவாளர்கள் புலனாய்வு தகவல்களை வைத்து கூறுகின்றனர். இவர் அணுகுண்டு தயாரிப்புக்கு எதிர்ப்பு கொள்கையை தீவிரமாக பரப்பி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

03. தில்லான ராணுவ அதிகாரி
அமெரிக்க ராணுவத்தின் மிகவும் ஆற்றல் வாய்ந்த ஜெனரல் என்ற பெருமைக்குரியவர் ஜார்ஜ் எஸ் பேட்டன். கடந்த 1945ம் ஆண்டு டிசம்பர் 8ந் தேதி ஜெர்மனியின் ஸ்பேயர் பகுதி அருகே இவர் தனது 1938 கேடில்லாக் மாடல் 75 காரில் சென்றுகொண்டிருந்தார். அவருடன் அவரது உதவியாளரும் சென்றார். ரயில் தண்டவாளத்தை கடந்து சென்றபோது, அசுர வேகத்தில் ஒரு ஜிஎம்சி டிரக் ஒன்று காருக்கு முன்னால் வந்து திரும்பியது. ஜார்ஜ் எஸ் பேட்டனின் கார் ஓட்டுனர் காரை வேறு திசையில் திருப்பி தப்ப எத்தனித்தார். ஆனாலும், கார் டிரக்கின்மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஜார்ஜின் கழுத்துப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மரணமடைந்தார். அவர் கார் விபத்து மற்றும் சிகிச்சை முறைகள் அளித்த சூழல், அவர் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்கிறது என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

02. மகனை காத்த பேய்
1990ம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், சாக்ரமென்ட்டோ பகுதியில் நடந்த விபத்து பற்றிய கதையும் வித்தியாசமானது. க்றிஸ்ட்டினி சுக்பிஷ் என்ற 24வயது பெண்மணி தனது 3 வயது மகன் நிக்குடன் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கார் எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் பாய்ந்ததுடன், மரத்தில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ஆனால், 5 நாட்களுக்கு பின்தான் அந்த காரை அவ்வழியே சென்ற தம்பதியினர் கண்டறிந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அந்த காரின் அருகே க்றிஸ்ட்னி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த நிலையில், அந்த காருக்குள் அவரது மகன் நிக் மூச்சுத் திணறி, மயங்கி நிலையில் மீட்கப்பட்டான். இதுகுறித்து, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், விபத்தில் மரணமடைந்த க்றிஸ்ட்டினியை மட்டுமே அங்கு பார்த்ததாகவும், குழந்தை அந்த இடத்தில் இல்லை. ஆனால், போலீசார் வந்தபோது காருக்குள் குழந்தை இருந்தது ஆச்சரியப்படுத்தியது என்று கூறினர். இதுவும் பல்வேறு சந்தேகங்களையும், மர்மங்களையும் கொண்டுள்ளது.

01. இளவரசி டயானா
இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் மரணமடைந்த செய்தி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸுடன் மணவாழ்க்கையை கசந்ததால், இருவரும் பிரிந்தனர். அடுத்த சில மாதங்களில் தனது புதிய காதலர் டோடி அல் பயதுடன் வலம் வரத் துவங்கினார் டயானா. இது உலக அளவில் மீடியாக்களின் முக்கிய செய்தியாக பரபரத்தது. இந்தநிலையில், கடந்த 1997ம் ஆண்டு எகிப்து நாட்டின் பில்லியரும், தனது காதலருமான டோடி அல் பயதுடன் காரில் சென்றபோது, அந்த கார் சுரங்கப்பாதை தூணில் மோதி பயங்கரமாக விபத்துக்குள்ளானது. இதில், அல்பயதும், டிரைவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டயானா உயிரிழந்தார். பத்திரிக்கையாளர்கள் பின்தொடர்ந்து வந்ததால், காரை வேகமாக செலுத்தியபோது, விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனாலும், இந்த விபத்தில் மர்மம் இருப்பதாக பலராலும் கருதப்படுகிறது. இங்கிலாந்து அரச குடும்பமே, டயானா மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஆனால், இங்கிலாந்து ராணி எலிசபெத் அளித்த பேட்டி ஒன்றில், தனது வாழ்நாளில் துக்கமான சம்பவம் டயானா மரணம்தான் என்று குறிப்பிட்டது நினைவுகூறத்தக்கது.


Click it and Unblock the Notifications








