அப்படியா... தானியங்கி கார்களால் ஏற்பட இருக்கும் ஆபத்துக்களும், இழப்புகளும்...!!
ஆசையாய்தான் இருக்கிறது. அண்ணன், அப்பா துணையில்லாமல் கல்லூரி செல்லலாம்; கார் ஓட்ட தெரியாதா என்ற நக்கல் பேச்சுக்களும் வழக்கொழிந்து போகலாம். டாக்சியை புக் செய்துவிட்டு, தெருவுக்கும், வீட்டிற்கும் பல்லை கடிந்து கொண்டு நடக்க வேண்டாம். ஆம், இந்த ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்கள் வந்துவிட்டால், யாருக்கும் தொல்லை கொடுக்காமலும், நினைத்த நேரத்தில் குறித்த இடத்திற்கு செல்லலாம்.
இந்த ஆவலை போக்கும் விதத்தில், ஓட்டுனர் உதவியில்லாமல் இயங்கும் தானியங்கி கார்களின் ஆராய்ச்சியும், சோதனைகளும் துரித கதியில் அடுத்த கட்டங்களை தாண்டி வருகின்றன. மேலும், சாலை பாதுகாப்பும் பன்மடங்கு மேம்படும் என்ற அறிவிப்புகள் வேறு நம் கனவு நனவாகும் நாள் தொலைவில் இல்லை என்பதும் மனதில் குதூகலத்தை ஏற்படுத்துகின்றன.
அடுத்த சில ஆண்டுகளில் பொது பயன்பாட்டுக்கே இந்த கார்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற நிலையில் உள்ளோம். ஆனால், ஓட்டுனர் இல்லா கார்களின் வருகை எந்தளவு சாதகமான அம்சங்களை கொண்டிருக்கிறதோ அந்தளவு அந்த கார்களால் ஆபத்துக்களும், அபாயங்களும் நிறைந்து இருக்கின்றன என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர். அதற்கான அவர்கள் அடுக்கும் காரணங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. கோர்ட்டுக்கும், வீட்டுக்கும்...
தானியங்கி கார்களின் சட்ட விதிகளில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. ஒருவேளை, இந்த கார்கள் விபத்தில் சிக்கி பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தினால், உரிமையாளர் கோர்ட்டுக்கும், வீட்டிற்கும் நடைநடையாய் நடக்க வேண்டியிருக்கும் என்று நம் ஆசையில் மண்ணை அள்ளி போடுகின்றனர். மேலும், முதல்முதலாக இந்த கார் விபத்தில் சிக்கும்போது அதற்கான ஆவண தயாரிப்பு என்பதே மிக நீண்ட கால அளவு கொண்டதாக இருக்கும்.

02. கார் குண்டு தாக்குதல்
தானியங்கி கார்களில் குண்டுகளை நிரப்பி தீவிரவாதிகள் இருந்த இடத்திலிருந்தே கார் குண்டு தாக்குதலை நடத்தும் வாய்ப்புள்ளதாம். இதுகுறித்து அமெரிக்க புலனாய்வுத் துறையின் சைபர் பிரிவு அதிகாரிகளும் கவலையும், எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

03. கார் ஹேக்கர்கள்
இரு தினங்களுக்கு முன் நாம் வெளியிட்ட செய்தியில் தானியங்கி கார்களை கம்ப்யூட்டர் ஹேக்கர்களால் எளிதாக முடக்கும் வாய்ப்பு இருப்பது நிரூபிக்கப்பட்டிருப்பது குறித்து படித்து இருப்பீர்கள். ஆம், எந்தவொரு இடத்தில் இருந்தும் தானியங்கி கார்களை ஹேக்கர்கள் முடக்கும் வாய்ப்பு இருக்கிறது. அத்துடன், காரில் செல்பவர்களை உட்கார்ந்த இடந்திருந்தே, காரை விபத்தில் சிக்கவைத்து பயணிப்பவரை கொல்ல முடியும். எந்திரன்- 2 சினிமாவில் இந்த விஷயத்தை இயக்குனர் ஷங்கர் பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

04. விளம்பரதாரர்களுக்கு ஜாக்பாட்...
காரின் இருப்பிடத்தை அறிந்துகொண்டு உரிமையாளர்களின் நடமாட்டத்தையும், விபரத்தையும் எளிதாக பெற்று கார் நிறுவனங்களும், விளம்பர நிறுவனங்களுக்கும் தங்களது சுயலாபத்திற்கு பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

05. வேலை இழப்பு
ஓட்டுனர்களின் வேலை பறிபோகும். பல்லாயிரக்கணக்கான ஓட்டுனர் பயிற்சி நிலையங்கள் மூடப்படுவதற்கான வாய்ப்புகளை இந்த தானியங்கி கார்கள் ஏற்படுத்தும். குறிப்பாக, டாக்சி மற்றும் டிரக் ஓட்டுனர்களுக்கான வேலை சுத்தமாக இல்லாது போகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

06. தொழில்நுட்ப பிரச்னை
தானியங்கி கார்கள் முழுமையான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படும். ஆனால், நீண்ட கால பயன்பாட்டின்போது, தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டால், அது விபத்துக்கு எளிதாக வழிகோலும். அவ்வாறு விபத்து ஏற்படும் பட்சத்தில், பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்படும்.

07. அவசர காலங்களில்...
புயல், கனமழை போன்ற இயற்கை சீற்றங்களின்போதும், அவசர காலங்களிலும் இந்த கார்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. ஒருவேளை, தகவல் தொடர்பு சேவையில் பாதிப்பு ஏற்பட்டாலும், அல்லது இந்த கார்களுக்கான சர்வர் கம்ப்யூட்டரில் பாதிப்பு ஏற்பட்டாலும் இந்த கார்களின் இயக்கத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

08. சுகமே சுகம்...
வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும்வரை அரை மணி முதல் ஒரு மணிநேரம் நமக்கு மிச்சமாகும். மொபைல்போனில் செய்திகளை வாசிக்கலாம், பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம். ஆனாலும், நாமே காரை ஓட்டிக் கொண்டு செல்லும் சுகமே சுகம். அதனை ஓட்டுனர் இல்லா தானியங்கி கார்கள் மூலம் இழப்போம். அட்லீஸ்ட், நண்பர்கள், தோழிகள் முன்னால் சர்ரென்று ஒரு யூடர்ன் அடித்து நிறுத்த முடியாதே...!!


Click it and Unblock the Notifications








