தவறான டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களை களையெடுக்க QR கோடு சிஸ்டம்! பெண்களின் பாதுகாப்பிற்காக அதிரடி!
டாக்ஸி மற்றும் ஆட்டோக்களில் பயணிப்பவர்களின், குறிப்பாக தனியாக பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்காக, QR கோட் ஸ்கேனிங் சிஸ்டம் விரைவில் அமலாகவுள்ளது.
டாக்ஸி மற்றும் ஆட்டோக்களில் பயணிப்பவர்களின், குறிப்பாக தனியாக பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்காக, QR கோட் ஸ்கேனிங் சிஸ்டம் விரைவில் அமலாகவுள்ளது. மிகுந்த பயனுள்ளதாக கருதப்படும் இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில், 2014ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு நடைபெற்ற ஒரு சம்பவம் நாட்டையே உலுக்கியது. உபேர் கால் டாக்சியில் தனியாக சென்ற 25 வயது இளம்பெண்ணை, அதன் டிரைவர் ஷிவ் குமார் யாதவ் என்பவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஷிவ் குமார் யாதவ் குறித்த பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியானது. அவர் பெண்களை மட்டுமே குறிவைத்து, இரவு நேரங்களில் மட்டுமே டாக்ஸி ஓட்டி வந்தார். அப்போது தனியாக வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

நாட்டின் தலைநகரிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது இந்த சம்பவத்தின் மூலமாக நிரூபணமானது. இதனால் உபேர் கால் டாக்ஸி சேவையை டெல்லி அரசு தடை செய்யும் சூழல் வரை நிலைமை விபரீதமாக சென்றது.

சாதாரணமாகவே கால் டாக்ஸி, ஆட்டோக்களில் தனியாக பயணிக்க பெண்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவும். அப்படிப்பட்ட சூழலில், டெல்லியில் நடைபெற்ற உபேர் கால் டாக்ஸி சம்பவம் எதிரொலியால், இந்த அச்சம் பல மடங்கு அதிகரித்தது.

இதுதவிரவும் நாடு முழுவதும் ஆங்காங்கே கால் டாக்ஸி, ஆட்டோ டிரைவர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. அதிக கட்டணம் என்ற பொதுவான புகாரை தவிர்த்து, பாலியல் தொல்லை, வழிப்பறி போன்ற புகார்களும் அவர்கள் மீது முன்வைக்கப்பட்டன.

எனவே இதுபோன்ற பிரச்னைகளை களைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக QR (க்யூஆர்) கோட் சிஸ்டம் விரைவில் அமலாகவுள்ளது. இதன்மூலம் பெண்கள் உள்பட அனைவரும் எந்த நேரத்திலும் அச்சமில்லாமல் கால் டாக்ஸி, ஆட்டோக்களில் பயணம் செய்ய முடியும்.

இந்த திட்டத்தின்படி டாக்ஸி மற்றும் ஆட்டோக்களில் QR ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். ஸ்மார்ட் போன் மூலமாக அதனை ஸ்கேன் செய்தால், அந்த வாகனத்தின் டிரைவர் குறித்த அனைத்து தகவல்களையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல் அந்த டிரைவரின் லைசென்ஸ்/பெர்மிட் குறித்த தகவல்கள், அவரது போன் நம்பர் மற்றும் அந்த வாகனம் குறித்த அனைத்து தகவல்களும் கிடைத்து விடும். அத்துடன் அந்த டிரைவர் ஏதேனும் அத்துமீறி நடந்து கொண்டால், உடனடியாக போலீசாரிடம் புகாரும் தெரிவிக்க முடியும்.

டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களினால் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்ட குறிப்பாக தனியாக பயணிக்கும் பெண்கள் இந்த QR கோட் மூலமாக உடனடியாக போலீசாரை உதவிக்கு அழைக்க முடியும். எனவே அனைத்து டாக்ஸி மற்றும் ஆட்டோக்களிலும் QR ஸ்டிக்கரை ஒட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதையும் மீறி QR கோட் இல்லாத டாக்ஸி, ஆட்டோக்கள் சட்ட விரோதமாக இயங்கும் வாகனங்களாக கருதப்படும். எனவே தவறான நடத்தை கொண்ட டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களை களையெடுக்க QR கோடு சிஸ்டம் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்டிஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு டாக்ஸி, ஆட்டோவிற்குமான கோட், மொபைல் ஆப் ஆகியவற்றை உருவாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. முதற்கட்டமாக மும்பை பிராந்தியத்தில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை மும்பை போலீசார் எடுத்து வருகின்றனர்.

மும்பை போலீசாரின் இந்த முயற்சிக்கு மகாராஷ்டிரா அரசு உதவி செய்கிறது. இந்த திட்டத்திற்காக 2 கோடி ரூபாயை அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளது. சாலை பாதுகாப்புக்கு என உருவாக்கப்பட்ட நிதியில் இருந்து இந்த திட்டத்திற்கான தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மும்பை பிராந்தியத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரம் டாக்ஸி, ஆட்டோக்கள் முறைகேடாக இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. QR கோடு முறை அறிமுகமானால், முறைகேடான டாக்ஸி, ஆட்டோக்களும் சாலையில் இருந்து வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் QR கோடு இருந்தால் சட்டப்பூர்வமாக இயங்கும் வாகனம் என்றும், QR கோடு இல்லாவிட்டால் முறைகேடாக இயங்கும் வாகனம் என்றும் எளிதாக அறிந்து கொள்ளலாம். இதனிடையே ஆட்டோ சங்கங்களும் போலீசாரின் இந்த முயற்சியை வரவேற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








