ஒரு 'டீ' குடித்துவிட்டு வருவதற்குள் மின்சார கார் சார்ஜாகிடும்! ஆராய்ச்சியாளர்களின் புதிய டெக்னாலஜி!
தென் கொரிய ஆராய்ச்சியாளர்கள் மின்சார வாகனங்களுக்கான பேட்டரியை மிக விரைவில் சார்ஜ் செய்வதற்கான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் மின் வாகன பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. மின் வாகனங்கள் எரிபொருளால் இயங்கும் வாகனத்தைப் போன்று துளியளவும் மாசினை வெளிப்படுத்தாதது. காற்று மாசு மற்றும் புவி வெப்ப மயமாதலுக்கு வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை மட்டுமே காரணமாக இருக்கின்றது. எனவேதான், உலக நாடுகள் பல மின் வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

ஆனால், மின் வாகனங்கள் அதிக விலையைக் கொண்டவை. இவற்றை சார்ஜ் செய்ய மிக நீண்ட நேரம் தேவை. மேலும், போதுமான சார்ஜிங் நிலையங்களும் பயன்பாட்டில் இல்லை., இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக பலர் மின் வாகனத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

இந்த நிலையைக் கருத்தில் மின் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் நிலவும் இந்த தவறான கருத்துக்களை போக்குவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, தற்போது குறைகள் என கூறப்படும் சார்ஜிங் நிலையம் பற்றாக்குறை மற்றும் அதிக விலை ஆகியவற்றை நீக்கும் முயற்சியில் அவை ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில், மிக மிக அதிக வேகத்தில் மின்சார வாகனத்தின் பேட்டரிகளைச் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஈடி ஆட்டோ ஆங்கில தளம் வெளியிட்டுள்ள செய்தியில், 'தென் கொரிய நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றே இந்த தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருப்பதாக' தெரிவித்துள்ளது.

பொதுவாக, மின் வாகனங்கள் எரிபொருள் வாகனங்களைப் போன்றில்லாமல் முழுக்க முழுக்க மின்சாரத்தை (பேட்டரியை) மட்டுமே நம்பியிருக்கின்றன. எனவேதான், மின் வாகனங்களில் லித்தியம்-அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவே, மின்சார காரின் ஒட்டுமொத்த செயல்திறனையும் வரையறுக்கிறது. இதை சார்ஜ் செய்வது மற்றும் பயன்படுத்துவதிலேயே தற்போது பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகின்றன.

இதனை நீக்கும் முயற்சியில் ஈடுபட்ட தென்கொரிய ஆராய்ச்சியாளர்களே தற்போது அதில் வெற்றியும் கண்டிருக்கின்றனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் தனியார் பல்கலைக்கழகமான போஹாங் யுனிவர்சிட்டியைச் சேர்ந்தவர்கள் பியோங்வூ காங் மற்றும் டாக்டர் மிங்க்யுங் கிம். இவர்களே உலக மக்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்கின்ற வகையில் அதி-வேக சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தவர்கள் ஆவர்.

இவர்கள் கண்டுபிடித்திருக்கும் புதிய தொழில்நுட்பம் மின் வாகனங்களுக்கான பேட்டரியை வெறும் 6 நிமிடங்களில் 90 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும் என உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, 18 செகண்டுகளில் 54 சதவீத சார்ஜ் திறனை டிஸ்சார்ஜ் செய்யும் திறனையும் அது பெற்றிருப்பதாகக் கூறப்படுகின்றது.

இது உயர் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்குவதற்கான நல்ல அறிகுறியாகும். இந்த பேட்டரியை உருவாக்கும் பணியில் பியோங்வூ காங் மற்றும் டாக்டர் மிங்க்யுங் கிம் ஆகியோருடன் இணைந்து சுங்க்யூன்க்வான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வோன்-சப் யூன் என்பவரும் பணியாற்றியதாகக் கூறப்படுகின்றது.

இந்த மூவர் கூட்டணியே, அதிக திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்கியுள்ளது. மேலும், முதல் முறையாக பேட்டரியில் இருக்கும் துகள்களின் (particle) அளவை மாற்றாமலேயே சார்ஜிங் திறனை மாற்றியமைக்க முடியும் என இவர்கள் நிரூபனம் செய்துள்ளனர்.

துகள்கள், பேட்டரியில் மிக முக்கியமானது. இது எந்த அளவிற்கு அடர்த்தியானதாக இருக்கின்றதோ, அதற்கேற்பவே அதனுள் மின் திறனைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். இதில்தான் எந்தவொரு மாற்றத்தையும் செய்யாமல் ஆராய்ச்சியாளர்கள் குழு பேட்டரியின் சார்ஜிங் திறனை அதிகரிக்கச் செய்துள்ளனர்.

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், தற்போது வரை லித்தியம் அயன் பேட்டரிகளை வேகமாக சார்ஜ் செய்வதற்கும், வெளியேற்றுவதற்கும் மின்முனை பொருட்களின் துகள் அளவைக் குறைக்கும் முறையே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த செயல் பேட்டரியின் மின்சார சேமிப்பு திறனில் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவேதான் மாற்று சிந்தனையை மூவர் ஆராய்ச்சியாளர்கள் குழு கொண்டு வந்திருக்கின்றது. இவர்கள் கண்டுபிடித்திருக்கும் புதிய தொழில்நுட்பம் மேற்கூறியதைப் போன்று எந்தவொரு பக்க விளைவையும் விளைவிக்காது என ஆராய்ச்சியாளர்கல் கூறுகின்றனர்.

குறிப்பாக, தங்களின் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அதிக மின்னாற்றலையும், அதி வேக சார்ஜ் ஏற்றும் திறனையும் பெற முடியும் என அவர்கள் கூறியுள்ளனர். மேலும், புதிய தொழில்நுட்ப வசதியின் மூலம் பேட்டரியின் நீடித்து உழைக்கும் தன்மையையும் உயர்த்த முடியும் என அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








