புதுப்பிக்கப்பட்ட நேதாஜி கார்... பொதுமக்கள் பார்வைக்கு அறிமுகம் செய்தார் பிரணாப் முகர்ஜி!
இந்திய சுதந்திர வரலாற்றின் முக்கிய நிகழ்வான நேதாஜியின் கிரேட் எஸ்கேப்பில் பயன்படுத்தப்பட்ட வான்டரர் கார் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வந்துள்ளது.
ஆங்கிலேயரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மாறுவேடத்தில் தப்பிச்செல்ல பயன்படுத்திய கார் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த கார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலையில் பொதுமக்கள் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியா சுதந்திரம் பெற வேண்டி தீவிரமான முறையில் போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியதால், ஆங்கிலேயர்களின் முக்கிய இலக்காக மாறிப் போனார். இந்த நிலையில், ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கொல்கத்தாவில் உள்ள மூதாதையர் வீட்டில் சிறை வைக்கப்பட்டார்.

ஆனால், ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்காக, வீட்டுக் காவலில் இருந்து தப்பிக்க முடிவு செய்தார். அதன்படி, அவரது சகோதரர் சிசர் போஸ் உதவியுடன், அவர் கொண்டு வந்த காரில் வீட்டில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்றார் நேதாஜி.

கொல்கத்தாவில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள காமோ என்ற இடத்திற்கு சிசர் போஸ் உதவியுடன் காரில் சென்றார். சிசர் போஸ்தான் காரை ஓட்டிச் சென்றார். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக இதனை "Great Escape" என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த நிகழ்விற்கு நேதாஜிக்கு ஆபத்பாந்தவனாக பயன்பட்ட வான்டரர் டபிள்யூ24 என்ற கார் மாடலை சிசர் போஸ் தொடர்ந்து சில காலம் பயன்படுத்தினார். பின்னர், நேதாஜியின் மூதாதையர் இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. கடைசியாக 1971ம் ஆண்டு இந்த காரை ஒரு டாக்குமென்ட்டரி படத்திற்காக சிசர் போஸ் ஓட்டியிருந்தார்.

கண்ணாடி கூண்டில் பாதுகாக்கப்பட்ட வந்த அந்த காரை புதுப்பிக்க நேதாஜி குடும்பத்தினரால் நிறுவப்பட்ட நேதாஜி ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்தது. ஜெர்மனி ஆட்டோ யூனியனில் அங்கம் வகித்த வான்டரர் நிறுவனத்தின் தயாரிப்பான அந்த காரை, அதே யூனியனில் அங்கம் வகித்த ஆடி கார் நிறுவனம் புதுப்பித்து தர முன் வந்தது.

இதன்படி, கொல்கத்தாவில் உள்ள ஆடி கார் நிறுவனத்தின் டீலர் மூலமாக, அந்த கார் கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கப்பட்டது. தற்போது பணிகள் நிறைவு பெற்று அந்த கார் பழமை மாறாமல் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், ஆங்கிலேயரின் வீட்டுக் காவலில் இருந்து நேதாஜி தப்பிய தினத்தின் 76ம் ஆண்டு நிறைவையொட்டியும், நேதாஜி ஆராய்ச்சி நிறுவனம் துவங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதையும் கொண்டாடும் வகையிலும், அந்த கார் தற்போது பொதுமக்கள் பார்வைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலையில் அந்த கார் பொதுமக்கள் பார்வைக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

வான்டரெர் காரை புதுப்பிப்பதற்கான முயற்சிகளை சிசர் போஸ் மகன் சுகதா போஸ்தான் எடுத்துள்ளார். தற்போது கொல்கத்தாவில் உள்ள நேதாஜி ஆராய்ச்சி மையத்தில் இந்த கார் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.
டிரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் அசத்தல் படங்கள்!
டிரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் அசத்தலான படங்களை கீழே உள்ள கேலரியில் கண்டு ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications








