சென்னையில் இருந்து கொடைக்கானல் மலைக்கு சைக்கிள் பயணம்... காரணத்தை கேட்டு அசந்து போன மக்கள்...
தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு, சைக்கிள் மூலம் சென்றுள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

உத்தர பிரதேசம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டு விட்டன. தமிழகத்திலும் பேருந்துகள் இயக்கப்படவே செய்தன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், பேருந்து சேவைகளுக்கு தமிழக அரசு தடை விதித்து விட்டது.

இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்வதில் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். உறவினர்கள் மரணம் போன்ற அவசர தேவைகளுக்கு கூட பயணம் செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். சொந்த கார் மற்றும் பைக் போன்றவை மட்டுமே பொதுமக்கள் பயணிப்பதற்கு தற்போதைக்கு இருக்கும் ஒரே வழி.

ஆனாலும் இ-பாஸ் பெறுவதில் கடும் கெடுபிடிகள் காட்டப்படுவதால், சொந்த வாகனங்களிலும் மக்களால் பயணம் செய்ய முடிவதில்லை. இப்படிப்பட்ட சூழலில், தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் சென்னையில் இருந்து சைக்கிள் மூலமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை வந்தடைந்திருக்கிறார். இதற்கு 4 நாட்கள் ஆகியுள்ளது.

சென்னையில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவரது பெற்றோர் கொடைக்கானலில் உள்ளனர். எனவே பெற்றோரை பார்ப்பதற்காக கொடைக்கானல் செல்ல வேண்டிய தேவை அவருக்கு இருந்தது. இதற்காக இ-பாஸ் கேட்டு வெங்கடேசன் பலமுறை விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இ-பாஸ் கிடைக்கவில்லை.

எனவே சைக்கிள் மூலம் கொடைக்கானல் சென்று விடுவது என வெங்கடேசன் முடிவு செய்தார். சென்னையில் இருந்து கொடைக்கானல் சுமார் 530 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. பேருந்தில் சென்றாலே இந்த தொலைவை கடக்க சுமார் 10 மணி நேரம் ஆகும். இருந்தாலும் சைக்கிளிலேயே சென்று விடுவது என வெங்கடேசன் முடிவு செய்து விட்டார்.

இதன்படி கடந்த புதன் கிழமை காலை (ஆகஸ்ட் 12ம் தேதி) சென்னையில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட வெங்கடேசன், நான்கு நாட்கள் பயணத்திற்கு பின்னர், கடந்த சனிக்கிழமை மாலை (ஆகஸ்ட் 15ம் தேதி) கொடைக்கானலை வந்தடைந்தார். சைக்கிளில் இவ்வளவு தூரம் பயணம் செய்வது என்பது உண்மையிலேயே மிகவும் சவாலான ஒரு விஷயம்தான்.

இருந்தாலும் பெற்றோரை சந்திப்பதற்காக சிரமங்களை எல்லாம் பொருட்படுத்தாமல், இந்த துணிச்சலான பயணத்தை அவர் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். தனது பெற்றோரை அவர் சென்னைக்கு அழைத்து செல்ல தற்போது முடிவு செய்திருப்பதாகவும், அதற்கு இ-பாஸ் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகளின் பலனாக, இ-பாஸ் வழங்கும் நடைமுறைகளில் தமிழக அரசு தற்போது தளர்வுகளை கொண்டு வந்துள்ளது. எனவே இனி வரும் நாட்களில், மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிப்பது எளிதாக இருக்கும். ஆனால் தமிழகத்தில் பேருந்து சேவை மீண்டும் எப்போது தொடங்கப்படும்? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








