20க்கும் மேற்பட்ட மாடல்களில் டாடாவின் பிஎஸ்4 டிரக்குகள்: சேலம் டிரக் வோர்ல்டில் அறிமுகம்..!
டாடா மோட்டார்ஸின் பிஎஸ்4 தரத்திலான, 20க்கும் மேற்பட்ட மாடல் டிரக்குகள் சேலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த தகவல்களை காணலாம்.
வணிக வாகனங்கள் விற்பனையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிஎஸ்-4 தர இஞ்சின்களுடன் கூடிய மீடியம் மற்றும் ஹெவி டியூட்டி டிரக்குகளை சேலத்தில் அறிமுகம் செய்துள்ளது.

சேலத்தில் உள்ள டிரக் வோல்ட்டில் நடந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட மாடல்களில் பாரத் ஸ்டேஜ்-4 தர மாசு உமிழ்வு பெற்ற சான்று இஞ்சின்களுடன் கூடிய டிரக்குகளை அறிமுகம் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.

கமர்சியல் வாகன பிரிவில் எக்ஸாஸ்ட் காஸ் ரீசர்குலேசன் (EGR)மற்றும் செலக்டிவ் கேடலைடிக் ரிடக்ஷன் (SCR) ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களும் அடங்கிய வாகனங்களை இந்தியாவில் சந்தைப்படுத்தியுள்ள ஒரே நிறுவனம் டாடா மோட்டார்ஸ் மட்டுமே.

சமீபத்தில் பிஎஸ்-4 இஞ்சின்கள் இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அதன் டிரக் ரேஞ்ச் முழுவதையும் டாடா நிறுவனம் தற்போது மேம்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செலக்டிவ் கேடலைடிக் ரிடக்ஷன் (SCR) என்பது அதிக பவர், பெர்ஃபார்மன்ஸ் மற்றும் எரிபொருள் தேவையை அளிக்கக்கூடிய இஞ்சின் தொழில்நுட்பம் ஆகும்.

இதேபோல எக்ஸாஸ்ட் காஸ் ரீசர்குலேசன் (EGR) எனப்படுவது சிறிய தூர இயக்கத்திற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இஞ்சின் தொழில்நுட்பம் ஆகும்.

சேலம் பகுதியானது, லாரி தொழிலின் மையப்புள்ளியாக விளங்குவதால் தனது புதிய டிரக்குகளை சேலம் டிரக் வோல்டில் டாடா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இங்கு டிரக் வாங்கும் அனுபவம் மேலும் எளிமைப்படுத்தும் வகையில் விஷேச ஏற்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பல்வேறு நிலப்பரப்புகளிலும், காலநிலையிலும் வாகனத்தை ஓட்டிப்பார்க்கும் வகையில் இங்கு ஸிமுலேட்டர் மற்றும் டிரெயினிங் வேன் வசதியும் உள்ளது.

கடந்த 60 ஆண்டுகளாக கமெர்சியல் வாகன சந்தையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை புகுத்திய பெருமை டாடா நிறுவனத்தையே சேரும் என்று அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் ராஜேஷ் கவுல் தெரிவித்தார்.

வணிக வாகன விற்பனையில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் திகழ்வதுடன் ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

இது மட்டுமல்லாமல் டாடா நிறுவனத்தின் வணிக வாகனங்கள் ஏற்கெனவே யூரோ-4 மற்றும் யூரோ-5 ஆகிய மாசு உமிழ்வு தர சான்று பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


Click it and Unblock the Notifications








