நானோ மோதி இந்தளவு சேதமடைந்தாலும் சியாஸ், சியாஸ்தான்... ஏன்?
விலை அதிகமிக்க கார்கள் சற்று உறுதியான கட்டமைப்பை கொண்டிருக்கும் நினைப்பு எல்லோருக்கும் இருப்பது இயல்புதான். ஆனால், இந்த சம்பவம் அந்த நினைப்பை தவிடு பொடியாக்குகிறது.
ஆம், டாடா நானோ கார் மோதியதில் மாருதி சியாஸ் கார் ஒன்றின் பின்புற பகுதி முழுவதும் அப்பளம் போல நொறுங்கியது. கோவாவில் நடந்த இந்த சம்பவம் கார் வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களை தொர்ந்து காணலாம்.

சாலையை கடக்க முயன்ற நாய் மீது மோதாமல் இருப்பதற்காக மாருதி சியாஸ் காரை ஓட்டிச் சென்றவர் சடன் பிரேக் போட்டுள்ளார். அப்போது, பின்னால் வந்த டாடா நானோ கார் ஓட்டுனர் கட்டுப்படுத்த முடியாமல் சியாஸ் காரின் பின்னால் மோதிவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

அதிர்ஷ்டவசமாக இரு கார்களில் பயணித்தவர்கள் காயமடையவில்லை. ஆனால், இந்த சம்பவத்தில் மாருதி சியாஸ் காரின் பின்புறம் கடுமையாக சேதமடைந்தது. அதேநேரத்தில், டாடா நானோ காருக்கு லேசான சேதமே ஏற்பட்டது. மாருதி சியாஸ் காருக்கான ரிப்பேர் செலவு மிக அதிகமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் மாருதி சியாஸ் கார் கடுமையாக சேதமடைந்தபோதிலும், டாடா நானோ காருக்கு அதிக சேதம் ஏற்படாததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இதுபோன்ற சம்பவங்களை இப்போது அடிக்கடி காண முடிகிறது.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, மோதலின் தாக்கத்தை உள்வாங்கிக் கொள்ளும் விசேஷ பாதுகாப்பு அம்சத்தாலேயே, மாருதி சியாஸ் கார் இவ்வாறு அதிக சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், பயணிப்பவர்களுக்கு பாதிப்பு இருக்காது. அதேநேரத்தில், டாடா நானோ காரின் மோதலின் தாக்கம் நேரடியாக பயணிகளை தாக்கும் என்று தொழில்நுட்ப விளக்கத்தை கார் தயாரிப்பு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை தவிர்ப்பதற்கு டெயில் கேட் செய்து ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். அதாவது, முன்னால் செல்லும் காருடன் குறிப்பிட்ட அளவு இடைவெளி விட்டு செல்வது நலம் பயக்கும்.

எப்போதுமே முன்னால் செல்லும் வாகனத்தின் ஓட்டம் குறித்து கவனித்து ஓட்ட வேண்டும். சாலை சந்திப்புகளில் பாதசாரிகள், வாகனங்கள் கடக்கும்போது முன்னால் செல்லும் வாகனம் சடன் பிரேக் போடும் வாய்ப்பிருப்பதை உணர்ந்து அதற்கேற்ப நிதான வேகத்தில் வாகனத்தை இயக்குங்கள்.
வேகத்தைவிட விவேகம் முக்கியம்.


Click it and Unblock the Notifications








