மங்காத்தா படத்தை விஞ்சிய ஸ்கெட்ச்... காரியத்தை கச்சிதமாக முடித்த ஜகஜால கில்லாடிகளின் வீடியோ வைரல்...
காரியத்தை கச்சிதமாக முடித்த கில்லாடி கொள்ளையர்களின் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

காரின் இருக்கையில் விலை உயர்ந்த மற்றும் முக்கியமான பொருட்களை ஒருபோதும் அலட்சியமாக வைக்க கூடாது. அப்படி நீங்கள் வைக்கும்பட்சத்தில் கொள்ளையர்கள் அதை எளிதாக திருடி விடுவார்கள். இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று சமீபத்தில் அரங்கேறியுள்ளது. கொள்ளையர்கள் கச்சிதமாக திட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில், திருட்டு சம்பவம் எப்படி நடந்தது? என்பது பதிவாகியுள்ளது. அந்த காணொளி தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாருதி சுஸுகி சியாஸ் காரை அதன் உரிமையாளர் மெதுவாக ஓட்டி வருவதை இந்த காணொளியில் நம்மால் காண முடிகிறது. அப்போது 2 இளைஞர்கள் ஒரு ஸ்கூட்டரில் அங்கே வந்தனர்.

அவர்கள் இருவரும் சியாஸ் காரின் உரிமையாளரிடம் ஏதோ கூறினர். இதன் காரணமாக அவர் உடனே காரை நிறுத்தி விட்டார். புகை வருகிறது அல்லது டயர் பஞ்சராகி விட்டது என அவர்கள் ஏதாவது கூறியிருக்கலாம். பொதுவாக காரை நிறுத்துவதற்கும், ஓட்டுனரின் கவனத்தை திசை திருப்புவதற்கும் இதுபோன்ற யுக்தியை கொள்ளையர்கள் கையாள்வார்கள்.

சியாஸ் காரின் உரிமையாளர் என்ன ஆனது? என பார்ப்பதற்காக கீழே இறங்கி வந்தார். அவர் காரை பார்த்து கொண்டிருந்த சமயத்தில், மற்றொரு ஸ்கூட்டரில் 2 இளைஞர்கள் அங்கே வந்தனர். அவர்கள் சியாஸ் காரின் உரிமையாளரிடம் ஏதோ பேச்சு கொடுத்தனர். இதனால் சியாஸ் காரின் உரிமையாளருடைய கவனம் முற்றிலுமாக திசை திரும்பி விட்டது.

அப்போது மூன்றாவதாக ஒரு ஸ்கூட்டரில் மேலும் 2 இளைஞர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் ஸ்கூட்டரை புறப்படுவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தார். மற்றொரு இளைஞர் காரின் பின்பக்க கதவை திறந்து, உள்ளே இருந்த பையை எடுத்த பின் அந்த ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டார். சியாஸ் காரின் உரிமையாளர் முன்னால் நின்று பேசி கொண்டிருந்ததால், பின்னால் நடந்ததை அவரால் கவனிக்க முடியவில்லை.

அக்கம் பக்கத்தினர் பார்த்து சுதாரிப்பதற்குள் பையை எடுத்த ஸ்கூட்டர் அங்கிருந்து பறந்து விட்டது. முகநூல் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் இந்த திருட்டு சம்பவத்தின் காணொளி தற்போது வேகமாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
ஒரு ஸ்கூட்டருக்கு தலா இரண்டு பேர் வீதம் மூன்று ஸ்கூட்டர்களில் வந்த ஆறு கொள்ளையர்கள், காரியத்தை கச்சிதமாக முடித்து விட்டு, சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். அடுத்தவர்களின் உடைமைகளை திருடுவது தவறான மற்றும் சட்ட விரோதமான செயல் என்றாலும் கூட, இந்த 6 இளைஞர்களும் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டுள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

இப்படித்தான் கொள்ளையை அரங்கேற்ற வேண்டும் என அவர்கள் முன்கூட்டியே மிகவும் தெளிவாக திட்டம் வகுத்துள்ளனர். அத்துடன் களத்தில் அதனை சரியாக செயல்படுத்தியுள்ளனர். 6 இளைஞர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை சரியாக செய்துள்ளனர். அவர்களின் ஒருங்கிணைப்பையும் இங்கே கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும்.

2வது ஸ்கூட்டரில் வந்த இளைஞர்கள் பாதுகாப்பான தொலைவில் இருந்து சியாஸ் காரின் உரிமையாளரிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அவரின் கவனத்தை காரில் இருந்து அவர்கள் முற்றிலும் அகற்றி விட்டனர். 3வது ஸ்கூட்டரில் வந்த இளைஞர்கள் பையை திருடி செல்வதை அறிந்ததும், அவரால் உடனடியாக அவர்களை துரத்த முடியவில்லை. கொஞ்சம் தாமதமாகியுள்ளது.

அப்படியான ஒரு நிலையில் அவரை நிற்க வைத்து பேச்சு கொடுத்துள்ளனர். மேலும் ஸ்கூட்டர்கள் வெவ்வேறு திசைகளில் தப்பியுள்ளன. இதன் மூலம் எந்த ஸ்கூட்டரை முதலில் துரத்த வேண்டும்? என்பதிலும் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர். இதுபோன்ற சூழல்களில் மற்றவர்கள் உதவிக்கு வந்தாலும் கூட, எந்த வாகனத்தை முதலில் துரத்துவது? என தீர்மானிப்பதில் குழப்பம் ஏற்படும் என்பது உறுதி.

கொள்ளையர்கள் எவ்வளவு சாதுர்யமாகவும், நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் உள்ளனர்? என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே. எனவே நாம்தான் கூடுதல் முன்னெச்சரிக்கை மற்றும் கவனத்துடன் இருந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கொள்ளையர்களிடம் விலை உயர்ந்த பொருட்களை பறிகொடுக்கும் சூழல் ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications








