சபாஷ்... கொரோனாவை ஒழித்துக்கட்ட புதிய அஸ்திரங்களை கையில் எடுத்த தமிழக அரசு!!
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், புதிய முறை மூலமாக கொரோனாவை விரட்டுவதற்கு இன்று புது முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் கொடூரத்திற்கு உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். இந்த வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டத் துவங்கி இருக்கிறது. இதுவரை 500க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கினர். உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்த சூழலில், கொரோனா கோரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி உள்ளன. கொரோனாவை ஒழித்தே தீருவோம் என்ற வேகத்தில் தமிழக அரசு களம் இறங்கி உள்ளது.

நாட்டிலுள்ள பல மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டன. தமிழகத்திலும் பல மாவட்டங்களில் கொரோனா தாக்கம் இருப்பதால், தனிமைப்படுத்தப்பட்டு கொரோனாவை விரட்டும் பணிகள் தீவிரமாகி இருக்கின்றன.

இந்த நிலையில், பிற மாநிலங்களிலிருந்து தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பயணிகளுக்கு சோதனைகளும் செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டு வந்தனர். அந்த வாய்ப்பும் இன்று மாலை முதல் வழங்கப்படாது.

இந்த நிலையில், எல்லைகள் மூடப்பட்டாலும், கொரோனாவுடன் நேரடியாக போராட வேண்டிய கட்டாயத்தில் டாக்டர்கள், மருத்துவத் துறை பணியாளர்கள், பாதுகாப்புத் துறையினர் இருக்கின்றனர். போதிய பாதுகாப்புடன் இவர்கள் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.

இருப்பினும், கொரோனா வைரஸ் மிக எளிதாக பிறருக்கு பரவும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, பாதிப்புக்கு உள்ளானவர் இருமினாலும், தும்மினாலும் காற்று வழியாக இது பிறருக்கு பரவும் வாய்ப்பு இருக்கிறது. இதனை மனதில் வைத்து கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இவை போதுமானதாக தெரியவில்லை. இந்த நிலையில், இன்று புதிய முயற்சியாக கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காற்று மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க புதிய முயற்சி கையாளப்படுகிறது.

இன்று காலை ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகப் பகுதிகளில் ட்ரோன் எனப்படும் சிறிய ரக ஆளில்லா பறக்கும் எந்திரம் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இது நிச்சயம் பயன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூய்மை பணியாளர்களைவிட இந்த ட்ரோன மூலமாக மிக விரைவாகவும், கட்டடத்தின் உயரத்திற்கு இணையாகவும் கிருமி நாசினியை தெளித்து விரவச் செய்யும். ரிமோட் கன்ட்ரோல் மூலமாக இதனை இயக்க முடியும்.

இந்த முறை குறிப்பிடத்தக்க அளவு பலன் தரும் என்று கருதினால், தொடர்ந்து இந்த முறையில் மருத்துவமனை மற்றும் அத்தியாவசியமாக இயங்க வேண்டிய அலுவலங்களிலும் கிருமி நாசினி தெளிப்பதற்கு பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.

இதுவரை விவசாயப் பணிகளின்போது பயிர்களுக்கு பூச்சிக் கொல்லி தெளிப்பதற்காக தெளிப்பான் பொருத்தப்பட்ட ட்ரோன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், கொரோனா ஒழிப்பிலும், இந்த ட்ரோன் எந்திரம் முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகிறது.

அத்துடன், கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டில் ரோபோ மூலமாக மருந்துகள் மற்றும் உணவு வழங்கும் முயற்சியும் இன்று நடந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு தொழில்நுட்ப சாதனங்கள் உதவியுடன் முயற்சிகள் நடந்து வருகின்றன.

முதல்கட்டமாக இரண்டு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உணவு அல்லது மருந்து பொருட்களுடன் செல்லும் ரோபோக்கள் நோயாளியின் அறைக்கு அருகில் சென்று ஒலி எழுப்பும். அப்போது நோயாளிகள் தங்களுக்கு தேவையா உணவு அல்லது மருந்து பொருட்களை ரோபோவில் உள்ள ட்ரேயில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

ரோபோவில் உள்ள திரை மற்றும் கேமரா உதவியுடன் மருத்துவர்கள் அல்லது செவிலியர்களுடன் நோயாளி பேச முடியும். அவர்களது ஆலோசனையின் பேரில் மருந்துகள் உட்கொள்ளும் முறை மற்றும் நோயாளிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. இதன்மூலமாக, மருத்துவ பணியாளர்களுக்கு பரவும் வாய்ப்பு ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை மட்டுமின்றி, பல இடங்களில் இந்த ட்ரோன் மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் முறை பின்பற்றப்பட உள்ளது. பெங்களூரிலும் பல இடங்களில் ட்ரோன் பயன்படுத்தி கிருமி நாசினி தெளிக்கும் முயற்சி இன்று நடந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








