பாஸ்டேக் மூலம் வருமானம் கொட்டுது... டிசம்பர் மாதத்தில் இவ்வளவு கோடி வசூலா? எவ்வளவுனு தெரிஞ்சா தலை சுத்தீரும்
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் நடவடிக்கைகளால், பாஸ்டேக் மூலமான வருவாய் உயர்ந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் பாஸ்டேக் மூலமாக மட்டும் 2,303.79 கோடி ரூபாய் டோல்கேட் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 201 கோடி ரூபாய் அதிகமாகும். இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இன்று (ஜனவரி 5) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து, டோல்கேட் கட்டணம் செலுத்துவதற்கு அனைத்து வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே ஏராளமானனோர் ரொக்க பரிவர்த்தனைகளில் இருந்து உடனடியாக பாஸ்டேக்கிற்கு மாறினர். இதனால்தான் பாஸ்டேக் மூலமான வருமானம் உயர்ந்துள்ளது.

ஆனால் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என்ற உத்தரவு கடந்த ஜனவரி 1ம் தேதி அமலுக்கு வரவில்லை. இன்னும் பலர் பாஸ்டேக்கிற்கு மாறவில்லை என்பதால், காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதுவரை டோல்கேட்களில் ரொக்கமாக கட்டணம் ஏற்று கொள்ளப்படும்.

எனினும் இனி மேல் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பிப்ரவரி 15ம் தேதிக்கு முன்பாக நீங்கள் பாஸ்டேக்கிற்கு மாறி விடுவது நல்லது. பாஸ்டேக் மூலமான வருவாய் உயர்ந்துள்ளது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இன்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில், ''கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் பாஸ்டேக் மூலம் 2,102 கோடி ரூபாய் டோல்கேட் கட்டணமாக வசூலிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் வந்த டிசம்பர் மாதத்தில் இந்த தொகை 2,303.79 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நவம்பருடன் ஒப்பிடுகையில் டிசம்பரில் பாஸ்டேக் மூலம் 201 கோடி ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

பாஸ்டேக் மூலமான டோல்கேட் கட்டண வசூல் உயர்ந்து கொண்டு வருவது, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் முயற்சிக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. அத்துடன் இந்தியாவில் பாஸ்டேக் பயன்பாடு அதிகரித்து வருவதையும் இது தெளிவாக எடுத்து காட்டுகிறது. பாஸ்டேக் மூலமாக டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.

ஒவ்வொரு வாகனமும் ரொக்கமாக கட்டணம் செலுத்தி விட்டு செல்வதற்கு அதிக நேரம் ஆவதால், சில சமயங்களில் டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இயலாத சூழ்நிலை இருந்தது. இதன் காரணமாகதான் பாஸ்டேக் அறிமுகம் செய்யப்பட்டது. வாகனங்களின் தடையற்ற போக்குவரத்தை பாஸ்டேக் உறுதி செய்கிறது.

போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படுவதன் மூலமாக தேசிய நெடுஞ்சாலை பயனர்களின் நேரம் மற்றும் எரிபொருள் சேமிக்கப்படுகிறது. டோல்கேட்களில் கட்டணம் செலுத்த ஊழியர்களை தொடர்பு கொள்ள வேண்டியதில்லை என்பதால், கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளையும் பாஸ்டேக் குறைக்கிறது.


Click it and Unblock the Notifications








