விமான பயணங்கள் பற்றிய கட்டுக்கதைகளும் உண்மைகளும்!
விமானப் பயணங்கள் குறித்த கட்டுக்கதை மற்றும் கூற்றுகள் பற்றியும் அதன் உண்மைகள் பற்றியும் இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.
அதிவேக விமான பயணங்கள் அனைவருக்கும் விருப்பமான ஒன்றாக உள்ளது. அந்த விமான பயணங்கள் பற்றி பல கட்டுக்கதைகள் உலவி வருகின்றன.
அடிக்கடி பயணிப்பவர்கள், அந்த துறையில் இருப்பவர்களுக்கு கூட சில கட்டுக்கதைகளை நம்பி வருவதுண்டு. அதுபோன்ற சில விஷயங்களையும், சில சுவாரஸ்ய தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

மொபைல்போன் பயன்படுத்துவதால் விமானங்களுக்கு பிரச்னை ஏற்படும் என்ற கட்டுக்கதை உள்ளது. அதனால்தான், விமானங்களில் மொபைல்போன் பயன்படுத்தக்கூடாது என்று நம்பப்படுகிறது. ஆனால், மொபைல்போன் சிக்னல்களால் விமான கட்டுப்பாட்டு கருவிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் மொபைல்போன்களை பயன்படுத்தும்போது விமான கட்டுப்பாட்டு கருவிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற எண்ணத்தில்தான் மொபைல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.

மூடநம்பிக்கை குறித்து நம் நாட்டு மக்கள் மீது பல விமர்சனங்கள் உண்டு. ஆனால், மேலை நாடுகளில் இயக்கப்படும் பல விமானங்களில் 13 வரிசை இருக்கை இருப்பதில்லை. இதற்கு காரணம். அது துரதிருஷ்டமான எண் என்று பலரும் கருதி முன்பதிவு செய்வதில்லையாம். எனவே, அந்த வரிசை இருக்கையை பல விமானங்களில் கொடுப்பதில்லை. லூப்தான்ஸா விமானங்களில் 17 வரிசை இருக்கை இருப்பதில்லையாம். இத்தாலியர்கள் இந்த எண்ணை துரதிருஷ்டமாக கருதுவதே காரணமாம்.

விமானங்களில் பணியாற்றும் ஊழியர்கள் குறைந்தது 5 அடி 2 அங்குலம் உயரம் இருக்க வேண்டும். இருக்கை மேலே அமைக்கப்படும் பொருட்களுக்கான கம்பார்ட்மென்டுகளில் உடைமைகளை வைத்து எடுத்து கொடுப்பதற்கும், அவசர காலங்களில் பயணிகளை வெளியேற்றுவதற்கான சறுக்கு பாதையை விரிப்பதற்கும் அவர்கள் இந்த உயரம் இருக்க வேண்டியது அவசியம். அதேபோன்று, 6 அடி 2 அங்குலம் மேல் இருப்பவர்கள் கேபினில் சற்று சிரமப்படும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்னல் தாக்குதலால் விமானங்கள் பாதிப்படையும் என்ற அச்சம் இருக்கிறது. ஆனால், மின்னல் தாக்குதல்களை சமாளிக்கும் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் விமானங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இதற்காக பிரத்யேக பாதுகாப்பு சான்றும் அளிக்கப்படுகிறது. கடந்த 1967ம் ஆண்டில்தான் மின்னல் தாக்கியதில் விமானம் விபத்தில் சிக்கியதாக பதிவாகி இருக்கிறது. ஆனால், கடுமையான மின்னல் தாக்கும்போது லேசான அதிர்வுகள் தெரியும். எனவே, அச்சமடைய தேவையில்லை.

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது சீட் பெல்ட் அணிந்து கொள்வதற்கான எச்சரிக்கை வரும்போது, பலரும் டர்புலன்ஸ் காரணமாக நினைத்துக் கொண்டிருப்பர். ஆனால், சில வேளைகளில் பைலட் கழிவறையை பயன்படுத்தும்போது, பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்து இருப்பதற்கான எச்சரிக்கை விடப்படுவது பலருக்கும் தெரியாது. மேலும், பைலட் அறைக்குள் யாரும் செல்லாமல் தவிர்ப்பதற்கு, அறை வாசலில் பணியாளர் ஒருவரும் காவலாக நிற்பார்.

விமானத்தில் மது அருந்தும்போது மிக வேகமாக போதை தலைக்கேறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் அவ்வாறு எந்தவிதமான மாறுதல்களும் மனிதர்களில் ஏற்படவில்லை என்பது ஆய்வுகள் மூலமாக தெரிய வந்துள்ளது.

அதிக உயரத்தில் பறக்கும்போது மூளைக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காது என்ற நம்பப்படுகிறது. உயரத்தில் பறக்கும்போது சிலருக்கு உடல் மாற்றங்கள் ஏற்பட்டாலும், விமானங்களின் கேபின்கள் போதிய ஆக்சிஜனை வழங்கும் வசதியுடன் இருக்கின்றன. வெளி அழுத்தத்தினால் எந்த பாதிப்பும் பயணிகளுக்கு ஏற்படாதாம். எனவே, அந்த கூற்றும் வெறும் கற்பனையே என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று, விமானத்தில் மிக நவீன காற்று சுத்திகரிப்பு முறை இருப்பதால், நோய் பரவுவது மற்றும் காற்றிலிருந்து நோய் பரவும் வாய்ப்புகளும் குறைவாக தெரிவிக்கப்படுகிறது.

விமானங்கள் டேக் ஆஃப் செய்யும்போதும், தரையிறங்கும்போதும் ஜன்னல்களில் இருக்கும் திரையை விலக்கி வைப்பது சிறந்தது என பைலட்டுகள் வலியுறுத்துகின்றனர். அவசர சமயங்களில் வெளியிலிருந்து உதவிக்கு வரும் மீட்புப் படையினர் பார்க்க வேண்டும் என்பதே காரணமாக தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








