“பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம், இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதுதான்” - மத்திய அமைச்சர் கருத்து
இந்தியாவில் பெட்ரோல் & டீசல் விலைகள் விண்ணை தொட்டு வருகின்றன. மத்திய அரசாங்கம் தற்சமயம் சமாளித்து வரும் முக்கிய பிரச்சனைகளுள் ஒன்றாக இது உள்ளது. தொடர்ச்சியாக பெட்ரோல் & டீசல் விலைகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் கடந்த இரு நாட்களாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது பெட்ரோல் & டீசல் விலைகளில் 35 பைசா அதிகரிப்பை சில்லறை எண்ணெய் நிறுவனங்கள் கொண்டுவந்துள்ளன. இந்தியாவில் பெரும்பான்மையான பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100ஐ கடந்து சில வாரங்கள் ஆன நிலையில் இந்த புதிய 35 பைசா உயர்வால் டீசலின் விலையும் நாட்டின் சில பகுதிகளில் ரூ.100 ஐ கடந்துள்ளது.

இந்த பெட்ரோல் & டீசல் விலை உயர்வினால் மத்திய அரசாங்கத்தின் மீது பயங்கர கோபத்தில் இருக்கும் மக்களை மேலும் ஆத்திரப்படுத்தும் வகையில் மத்திய அமைச்சர் ஒருவர் இன்று பேட்டியளித்துள்ளார். யார் அவர், அப்படி என்ன அவர் கூறினார் என்றால், மக்களுக்கு இலவசமாக கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதினால் தான் நாட்டில் எரிபொருளின் விலை உச்சத்தை அடைந்துள்ளதாம்.

இதை கூறியது வேறு யாரும் அல்ல, நம் நாட்டின் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ராமேஸ்வர் தெலி. "இந்திய அரசாங்கம் பெரும்பான்மையான தொகையை மக்களுக்கு இலவசமாக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தவே பயன்படுத்துகிறது. இதன் காரணமாக பெட்ரோல் & டீசல் விலைகள் உயருகின்றன" என ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர், "எரிபொருள் விலைகள் அதிகமாக இல்லை, ஆனால் உள்ளடங்கும் விதிக்கப்பட்ட வரிகள் அதிகம். அனைவரும் இலவசமாக தடுப்பூசி பெற வேண்டும். இதற்கு பணம் எங்கிருந்து வரும்? நீங்கள் பணம் செலுத்தவில்லை. இவ்வாறு தான் அவை வசூலிக்கப்படுகின்றன" என்றார்.

ராமேஸ்வர் டெலி அவர்கள் மக்களைவில் அசாமில் உள்ள திப்ருகார் தொகுதியில் இருந்து பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த்கியாவில் 130 கோடி மக்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்கிற விதத்தில் தான் இந்த கருத்தை இவர் கூறியிருக்க வேண்டும்.

மேலும் பேசிய அமைச்சர், எரிபொருளின் விலையை பேக்கேஜ் செய்யப்பட்ட இமயமலை குடிநீருடன் ஒப்பிட்டுள்ளார். "நீங்கள் இமயமலை நீரை குடிக்க விரும்பினால், ஒரு பாட்டிலுக்கு ரூ.100 செலுத்த வேண்டும். இதே நிலைமை தான் தற்போது பெட்ரோல் & டீசலுக்கு உள்ளது" என தெரிவித்தார்.

ஏற்கனவே கூறியதுதான், சில்லறை எரிபொருள் நிறுவனங்கள் இரண்டு நாட்களுக்கு பிறகு கடந்த அக்.14ஆம் தேதி மீண்டும் எரிபொருள்களின் உயர்த்தின. இதன் விளைவாக தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை 35 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.104.79 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.93.52 ஆகவும் அதிகரித்தன.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற அரசுக்கு சொந்தமான சில்லறை எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் எரிபொருள்களின் (பெட்ரோல் & டீசல்) விலைகளை தினசரி அடிப்படையில் திருத்துகின்றன. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் ரூபாய்-டாலர் மாற்று விகிதங்களை பொறுத்து இவற்றின் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன.

புதிய விலை தினமும் அதிகாலை 6 மணியளவில் அமலுக்கு வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (அக்.15) பெட்ரோல் & டீசல் விலைகளில் 35 பைசா அதிகரிப்பை கொண்டுவந்துள்ளன. இதனால் டெல்லியில் பெட்ரோலின் விலை தற்சமயம் லிட்டருக்கு ரூ.105.14 ஆகவும், டீசலுக்கு ரூ.93.87 ஆகவும் உள்ளன.

பெட்ரோல் & டீசல் விலை உயர்வுகளின் மூன்று வார இடைநிறுத்தத்திற்கு பிறகு சர்வதேச எண்ணெய் விலை உயர்வு முடிவடைந்துள்ளது. அரசுக்கு சொந்தமான ஆயில் நிறுவனங்கள் செப்.24ஆம் தேதியில் இருந்து டீசல் விலையையும், செப்.28ஆம் தேதியில் இருந்து பெட்ரோல் விலையையும் உயர்த்த துவங்கின. அதில் இருந்து தற்போது வரையில் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.4.9-யும், பெட்ரோல் விலை ரூ.3.9-யும் அதிகரித்துள்ளன.


Click it and Unblock the Notifications








