அமெரிக்க அதிபரையே கவர்ந்த எலக்ட்ரிக் கார்கள்... $900 மில்லியன் முதலீடு!! நமது இந்தியாவில் எப்போதுதானோ...
கடந்த செப்.14ஆம் தேதி நடைபெற்ற டெட்ராய்ட் ஆட்டோ கண்காட்சியில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அது என்ன என்பதை பற்றியும், அமெரிக்காவில் புதியதாக என்னென்ன முதலீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பதை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள மிக பெரும் நகரமான டெட்ராய்டில் 2022ஆம் ஆண்டின் வட அமெரிக்க சர்வதேச ஆட்டோ கண்காட்சி நேற்று (செப்.14) துவங்கியது. வருகிற செப்.25ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியின் முதல் நாளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டுள்ளார்.

இந்த கண்காட்சியில் அமெரிக்காவின் முக்கிய 3 ஆட்டோமொபைல் நிறுவனங்களாக விளங்கும் ஜெனரேல் மோட்டர்ஸ், ஸ்டெல்லாண்டிஸ் மற்றும் ஃபோர்டு மோட்டார் உள்ளிட்டவற்றின் சார்பில் ஏகப்பட்ட புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அவற்றை ஒவ்வொன்றாக அருகில் சென்று பார்த்து பூரிப்படைந்த அமெரிக்க அதிபர் அதன்பின் தனது டுவிட்டர் பக்கத்தில், "நான் ஒரு கார் விரும்பி என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும். இன்று நான் டெட்ராய்டு ஆட்டோ கண்காட்சிக்கு சென்றிருந்தேன். புத்தம் புதிய எலக்ட்ரிக் வாகனங்களை கண்டேன். எதிர்காலத்தை பற்றி நம்பிக்கை கொள்வதற்கு அவை ஏகப்பட்ட காரணங்களை எனக்கு தந்தன" என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடனிலும், வாகனங்கள் தயாரிப்பு மற்றும் வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்ட வரிகளும் பில்லியன் டாலர்களில் இருப்பதாகவும் எரிபொருள் என்ஜின் வாகனங்களில் இருந்து தூய்மையான இவி-களுக்கு மாறுவதை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வேகப்படுத்த வேண்டும் எனவும் அதிபர் ஜோ பைடன் கேட்டு கொண்டுள்ளார்.

கண்காட்சியில் தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட உள்ள புதிய பசுமை வாகனங்களை பார்வையிட உள்ள அமெரிக்க அதிபரிடம் ஜெனரேல் மோட்டார்ஸின் நிர்வாக இயக்குனர் மேரி பர்ரா, ஸ்டெல்லாண்டிஸின் சிஇஒ சார்லஸ் தவரேஸ் & தலைவர் ஜான் எல்கன் மற்றும் ஃபோர்டு மோட்டார் குழுமத்தின் நிர்வாக தலைவர் ஜூனியர் பில் ஃபோர்டு ஆகியோர் இவி உற்பத்தியில் புதிய புதிய நடவடிக்கைகளுக்காக வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.

இருப்பினும் 2022 டெட்ராய்ட் ஆட்டோ கண்காட்சியில் பெட்ரோலால் இயங்கும் லாரிகளும் அதிக எண்ணிக்கையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், டெஸ்லாவை தவிர்த்து மேற்கூறப்பட்ட முக்கிய 3 அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தற்போதுவரையிலும் பெட்ரோல் & டீசல் வாகனங்களிலேயே அதிக கவனத்தை செலுத்தி வருகின்றன.

இந்த 3 நிறுவனங்களில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்றாலும், இவை மூன்றையும் இவி விற்பனையில் டெஸ்லா தனியொரு ஆளாக முந்துகிறது. இது உலகின் முதன்மையான பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக விளங்கும் அமெரிக்காவில் தற்போதைய நிலவரமே. இன்னும் சில வருடங்களில் ஜெனரல் மோட்டார்ஸ், ஸ்டெல்லாண்டிஸ் & ஃபோர்டு ஆகிய மூன்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் தீவிரமாக ஈடுப்படும்.

ஏனெனில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இருந்தாலும், எரிபொருள் என்ஜின் வாகனங்களில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் வேகத்தை துரிதப்படுத்துங்கள் என்பதுதான் அமெரிக்க அதிபரின் வேண்டுக்கோளாக உள்ளது. இத்தகைய வேண்டுக்கோளை விடுப்பது மட்டுமின்றி, எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை நாடு முழுவதும் அதிகரிக்க என்ன செய்யலாம் என்பது குறித்த நடவடிக்கைகளிலும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இறங்கவுள்ளது.

இதன்படி, அமெரிக்க மற்றும் வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய பேட்டரி தொழிற்சாலையை நிறுவவும், அதன் மூலம் எலக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் அறிமுகப்படுத்துவதை ஊக்கப்படுத்தவும் மிக பெரும் தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் 35 மாகாணங்களில் இவி சார்ஜிங் நிலையங்களை நிறுவ முதற்கட்டமாக 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டிற்கு அமெரிக்க அரசு விரைவில் அனுமதியளிக்க உள்ளது.

ஆட்சிகள் மாறினாலும், அமெரிக்காவில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க ஏறக்குறைய 500 கோடி அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட நிலையில், தற்போது டெட்ராய்ட் ஆட்டோ கண்காட்சியில் பங்கேற்றுள்ள ஜோ பைடன், அமெரிக்க மாகாண அரசாங்கங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








