தனக்கு தானே ரூ.5,000 அபராதம் விதித்து கொண்ட இன்ஸ்பெக்டர்... காரணம் தெரியாமல் ஆச்சரியப்பட வேண்டாம்
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தனக்கு தானே ரூ.5,000 அபராதம் விதித்து கொண்டார். ஆனால் காரணம் தெரியாமல் அவரை நினைத்து ஆச்சரியப்பட வேண்டாம்.

இந்தியாவில் புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. எனவே புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் புதிய மோட்டார் வாகன சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் உறுதியாக உள்ளது. எனவே போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது உயர்த்தப்பட்ட புதிய அபராத தொகைகளை போலீசார் தீவிரமாக விதித்து வருகின்றனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால், புதிய மோட்டார் வாகன சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டிய போலீசாரும், அரசு அதிகாரிகளுமே கூட போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பதில்லை. அவ்வாறு போக்குவரத்து விதிகளை பின்பற்றாத போலீசார், அரசு அதிகாரிகளின் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.

இந்த சூழலில் போக்குவரத்து விதிமுறையை மீறிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தனக்கு தானே அபராதம் விதித்து கொண்ட சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அட, இந்த இன்ஸ்பெக்டர் இவ்வளவு நேர்மையானவரா? என நீங்கள் அவசரப்பட்டு பெருமைப்பட வேண்டாம். இதற்கு பின்னால் இருக்கும் காரணமே வேறு.

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலிக்கு அருகே உள்ள கிவாடா என்ற கிராமத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும், கான்ஸ்டபிள் ஒருவரும் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அவர் ஹெல்மெட் அணியாமல் இருந்தார்.

இதற்காக அந்த ரைடருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 5,000 ரூபாய் கடுமையான அபராதம் என்பதால், கிவாடா கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் போலீஸ்காரர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பின் போலீஸ்காரர்களை நோக்கி உங்கள் ஹெல்மெட்? எங்கே என கேட்டனர்.

கிராம மக்கள் கேள்வி எழுப்பிய நேரத்தில் போலீஸ்காரர்கள் இருவரும் வாகனம் ஓட்டவில்லைதான். எனினும் அவர்களால் தங்கள் ஹெல்மெட்டை காட்ட முடியவில்லை. எனவே உங்களுக்கு நீங்களே அபராதம் விதித்து கொள்ளுங்கள் என கிராம மக்கள் கூறினர். எனவே வேறு வழியில்லாமல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனக்கு தானே சலான் வழங்கி கொண்டார்.

ஹெல்மெட் அணியாததற்காக 5,000 ரூபாய் அபராதம் விதித்து அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தனக்கு தானே சலான் வினியோகித்து கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
இதனிடையே போலீஸ் இன்ஸ்பெக்டரின் பணியில் குறுக்கிட்டது தொடர்பாக கிராம மக்களிடம் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் என்னவிதமான நடவடிக்கை எடுக்கப்படும்? என்பது தெரியவில்லை.

அதேபோல் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அபராத தொகையை செலுத்தி விட்டாரா? என்பதும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் உத்தர பிரதேச மாநிலத்தில், அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரின் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் ஒன்று கூடி கேள்வி எழுப்புவது இது முதல் முறையல்ல.

இதற்கு முன்னதாக இதே உத்தர பிரதேச மாநிலத்தில், உதவி ஆர்டிஓ ஒருவர் சீட் பெல்ட் அணியாமல் தனது அதிகாரப்பூர்வ காரில் சென்று கொண்டிருந்தார். இதனால் பொதுமக்கள் அவரது காரை முற்றுகையிட்டு இந்த விதிமீறல் தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதன் காரணமாக உதவி ஆர்டிஓவிற்கு அங்கிருந்த போலீஸ்காரர் அபராதம் விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








